Monday, January 25, 2021

69. 66ஆவது சர்க்கம் - சீதையின் செய்தி குறித்த கேள்விகள்

தசரதரின் புதல்வரான ராமர், லக்ஷ்மணன் உடனிருக்கையில், ஹனுமான் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டார். பிறகு அந்தச் சூடாமணியைத் தன் மார்பில் வைத்துக்கொண்டு அவர் கண்ணீர் உகுத்தார்.

அந்த அற்புதமான மணியைப் பார்த்ததும், ராமர் தன் கண்களில் நீர் வழிந்தோட மிகுந்த மனவேதனையுடன் சுக்ரீவனிடம் கூறினார்.

"ஒரு பசு தன் கன்றின் மீது இருக்கும் மிகுந்த அன்பின் காரணமாக உணர்ச்சிகரமாகச் செயல்படுவது போல், இந்த மணியைப் பார்த்ததும் என் உள்ளம் உருகுகிறது.

"இந்த உயர்ந்த மணி விதேஹ நாட்டு இளவரசிக்கு என் மாமனாரால் (அவளுடைய தந்தையால்) பரிசாக அளிக்கப்பட்டது. எங்கள் திருமணத்தின்போது அவள் இதைத் தன் தலையில் அணிந்திருந்தபோது அவள் அழகு, இப்போது பார்த்தால் தெரிவதை விடப் பல மடங்கு அதிகமாக இருந்தது.

"இந்த மணி நீரிலிருந்து தோன்றியது. பெரியோர்கள் இதைப் பற்றி மிக உயர்வாக நினைக்கிறார்கள். ஒருமுறை இது ஒரு யாகத்தில் இந்திரனால் அவன் மகிழ்ச்சியின் காரணமாக அளிக்கப்பட்டது.

"ஓ, அன்புள்ளவனே! இந்த உயர்ந்த மணியைப் பார்க்கும்போது, என் தந்தை மற்றும் தவ வாழ்க்கை வாழ்ந்த என் மாமனார் இவர்களின் முகங்களைப் பார்க்கும் அதே மனத் திருப்தி எனக்குக் கிடைக்கிறது.

"இந்த மணி மீண்டும் என் மனைவியின் தலைமுடியை அலங்கரிக்கும். இதைப் பார்க்கும்போது எனக்கு அவளையே நேரில் பார்ப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது.

"ஓ, ஹனுமான்! சீதை என்ன சொன்னாள் என்பதை மீண்டும் சொல். தாகத்தால் தவிப்பவனுக்குத் தண்ணீர் எப்படி இருக்குமோ, அவள் வார்த்தைகள் எனக்கு அப்படி இருக்கும்.

"ஓ, லக்ஷ்மணா! வைதேஹியிடமிருந்து பிரிந்திருக்கும்போது, நீரில் தோன்றிய இந்தச் சூடாமணியை என் கையில் வைத்துக் கொண்டிருப்பதை விட அதிகத் துயரளிப்பது எதுவாக இருக்கும்?

"ஓ, அருமை நண்பனே! வைதேஹி இன்னும் ஒரு மாதம் உயிர் தரித்திருப்பாளேயானால், அவள் உண்மையில் நீண்ட காலம் உயிர் வாழ்வதாகத்தான் கொள்ள வேண்டும். ஏனெனில், அவளைப் பிரிந்த நிலையில் என்னால் ஒரு கணம் கூட உயிர் வாழ முடியாது. 

"என் அருமை மனைவி இருக்கும் இடத்துக்கு என்னை இட்டுச் செல். அவள் இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட பின் நான் ஒரு கணத்தைக் கூட இங்கிருந்து கொண்டு வீணாக்க முடியாது.

"தன்னை எப்போதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கரமான அரக்கிகளின் நடுவில் இருந்து கொண்டு என் கற்புள்ள மனைவி வாழ்ந்து கொண்டிருப்பது எத்தகைய கொடுமை!

"என்னைப் பற்றிய செய்தியைக் கேட்டதும் சரத் (இலையுதிர்) காலச் சந்திரனைப் போல் மலர்ச்சி அடையத் தொடங்கி இருக்கும் அவளுடைய முகம் அவளைச் சூழ்ந்து கொண்டிருக்கும் அரக்கிகள் என்னும் மேகங்களால் மறைக்கப்பட்டு மீண்டும் மங்கலாகி இருக்கும்.

"ஓ, ஹனுமான்! சீதை உன்னிடம் என்ன கூறினாள்? எல்லாவற்றையும் என்னிடம் விவரமாகச் சொல். நோயுற்ற ஒருவன் மருந்துகள் மூலம் உயிர் தரிப்பிருப்பது போல், நான் இப்போது அவளைப் பற்றிய தகவல்களைக் கொண்டுதான் உயிர் வாழ வேண்டும்.

"கற்புள்ளவளும். அழகானவளும், இனிமையாகப் பேசுபவளும், பணிவுள்ளவளும் இப்போது என்னிடமிருந்து பிரிந்திருப்பவளுமான என் மனைவி உன் மூலம் எனக்கு என்ன செய்தி அனுப்பினாள்?

"ஓ, ஹனுமான்! எல்லாவற்றையும் எனக்கு விவரமாகச் சொல்."

சர்க்கம் 66

2 comments:

  1. சீதா தேவி பற்றிய செய்தி அனுமன் சொல்லி அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல சேதி விரைவில் வரும். நன்றி.

      Delete