Friday, January 22, 2021

68. 65 ஆவது சர்க்கம் - சூடாமணியை ராமனிடம் அளித்தல்

அடர்ந்த காடுகள் மிகுந்த பிரஸ்ரவண மலைக்கு வந்த அவர்கள் ராமருக்கும், சக்தி வாய்ந்த லக்ஷ்மணருக்கும், சுக்ரீவருக்கும் வணக்கம் தெரிவித்த பின், அங்கதனை முன்னே நிற்கச் செய்து சீதையைப் பற்றிய விவங்களை விரிவாகச் சொல்ல, சுக்ரீவனின் உத்தரவுக்குக் காத்திருந்தனர்.

பிறகு சீதை ராவணனின் மாளிகையின் அந்தப்புரத்தில் சிறை வைக்கப்பட்டிருப்பதையும், அரக்கிகளால் அவர் மிரட்டப்பட்டுவதையும், ராமரிடம் அவர் பக்தியுடனும், விஸ்வாசத்துடனும் இருப்பதையும், அவர் முடிவைத் தெரிவிக்க அவருக்கு கெடு வைத்திருப்பதையும் அவர்கள் தெரிவித்தனர்.

சீதையின் கற்புக்குச் சேதம் ஏற்படவில்லை என்பதைக் கேட்டறிந்ததும், ராமர் வானரர்களிடம் கூறினார்: 

"சீதை இப்போது எங்கே வைக்கப்பட்டிருக்கிறார் என்று கூறுங்கள். என்னைப் பற்றிய அவர் மனநிலை என்ன? சீதை தொடர்பான இந்த எல்லா விவரங்களையும் என்னிடம் கூறுங்கள்."

ராமரின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், சீதையின் நிலை பற்றி நேரடியாக அறிந்திருந்த ஹனுமானை முன் வந்து விவரங்களைத் தெரிவிக்குமாறு வானரர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் வாயுவின் குமாரரும், சிறந்த பேச்சாற்றல் கொண்டவருமான ஹனுமான் சீதை இருக்கும் திசையைப் பார்த்து வணங்கி விட்டு, தான் சீதையைச் சந்தித்ததைப் பற்றிய விவரங்களைக் கூற ஆரம்பித்தார்:

"ஜனகரின் மகளான சீதையைச் சந்திப்பதற்காக, நான் கடலில் நூறு யோஜனைகளைக் கடந்து சென்றேன். தெற்கே உள்ள கடலின் கரையில் தீய மனம் கொண்ட ராவணனின் இலங்கை நகரம் இருக்கிறது.

"ஓ, ராமா! அங்கே ராவணனின் அந்தப்புரத்தில், மங்களம் வழங்கும் சீதை தூய கற்புடன் இருப்பதை நான் கண்டேன். அங்கே அவர் தன் எப்போதும் உங்களைப் பற்றிய எண்ணங்களுடனேயே இருந்து கொண்டிருக்கிறார்.

"ராவணனின் அந்தப்புரத் தோட்டத்தில் அவர் பயங்கரமான தோற்றம் கொண்ட அரக்கிகளால் சூழப்பட்டு, தொடர்ந்து மிரப்பட்டு வருவதை நான் என் கண்ணால் பார்த்தேன்.

"அந்தக் கற்புடைய பெண்மணிக்கு இத்தகைய துயரம் ஏற்படுவதற்குச் சிறிதளவும் நியாயமில்லாத நிலையில் அவர் இந்தத் துன்பங்களுக்கெல்லாம் ஆட்படுத்தப்பட்டிருக்கிறார்.

"அவர் தன் கூந்தலை ஒற்றையாக முடிந்து கொண்டிருக்கிறார். அவர் தரையில் படுத்திருக்கிறார். அவர் அரக்கிகளால் கடுமையாகப் பாதுகாக்கப்பட்டு ராவணனின் அந்தப்புரத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.

"பனிக்காலத் தாமரையைப் போன்ற தோற்றத்தில், ராவணனின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் அவர் நம்பிக்கை இழந்த நிலையில் இருக்கிறார்.

"நம்பிக்கை இழந்த அந்த நிலையில் அவர் தன் உயிரை விடக் கூடத் தீர்மானித்து விட்டார்.

"இவற்றையெல்லாம் மீறி, ஓ, காகுஸ்த குலச் செம்மலே, அவர் மனம் முழுவதும் உங்களிடம் பக்தி கொண்டு மிகுந்த வேதனையுடன், உங்களைப் பற்றிய நினைவுடனேயே இருக்கிறார்.

"இவற்றையெல்லாம் நான் மிகவும் சிரமப்பட்டுத்தான் கண்டறிந்தேன்.

"ஓ, வீரமுள்ளவராகவும், குற்றமற்றவராகவும் உள்ளவரே! இக்ஷ்வாகு குல மன்னர்களப் புகழ்ந்து பேசியதன் மூலம் என்னால் அவரிடம் நம்பிக்கையை உருவாக்க முடிந்தது.

"அதற்குப் பிறகு என்னால் அவரிடம் உரையாடி இங்குள்ள நிலவரங்கள் பற்றிய முழு விவரங்களையும் அவரிடம் தெரிவிக்க முடிந்தது. உங்களுக்கும் சுக்ரீவருக்குமிடையே ஏற்பட்டுள்ள நட்பு பற்றி அறிந்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

"உங்களிடம் அவருக்கு இருக்கும் பக்தியால், அவர் கவலைப்படுவது உங்களிடம் அவருக்கு இருக்கும் விஸ்வாசத்தை நிலைநிறுத்திக் கொள்வது பற்றி மட்டும்தான்.

"ஓ, உயர்ந்தவரே! உங்களிடம் நிலையான பக்தி மற்றும் விஸ்வாசம் என்ற இந்தத் தவத்தைச் செய்து கொண்டிருக்கும் அந்த உயர்ந்த பெண்மணியை என்னால் காண முடிந்தது.

"எல்லாம் அறிந்தவரான ரகுகுல திலகரே! நீங்கள் சித்ரகூடத்தில் இருந்தபோது ஒரு காகம் தொடர்பான ஒரு சம்பவத்தை உங்களுக்கு நினைவூட்டும்படி அவர் என்னிடம் கூறினார். 

"அவர் கூறினார்:
'வாயுகுமாரரே! நான் தெரிவித்த எல்லா விவரங்களையும் ராமரிடம் கூறுங்கள். மனத்துக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கக் கூடிய இந்தச் சூடாமணியை நான் பாதுகாத்து வருகிறேன். அதை யாரும் பார்க்காத வண்ணம் நான் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

'சுக்ரீவருடன் இருந்து கொண்டு என்னைப் பற்றிய விவரங்களை ராமர் உங்களிடமிருந்து கேட்டுக் கொண்டிருக்கும்போது, இதை நீங்கள் அவரிடம் கொடுங்கள்.'

"அவர் இதை உங்களுக்கு என் மூலம் அனுப்பி இருக்கிறார். நீங்கள் அவருக்குச் சாயப்பொட்டு வைத்த சம்பவத்தையும் அவர் உங்களுக்கு நினைவு படுத்தினார். 

"அளவற்ற பெருமை கொண்ட ராமபிரானே! மான் போன்ற கண்களும், சக்தி இழந்த உடலும் கொண்ட, ராவணனின் அந்தப்புரத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும், இன்னமும் ஒரு பத்தினிப் பெண்ணுக்கான கடமைகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்மணி, உங்களிடம் இவ்வாறு கூறுமாறு என்னிடம் தெரிவித்தார்:

'நான் மிகுந்த மனச்சோர்வு அடையும்போதெல்லாம் இந்தச் சூடாமணியைப் பார்த்து, உங்களிடமிருந்து பெறும் ஆறுதலைப் போன்ற ஆறுதலை அடைவேன். 

'இன்னும் ஒரு மாதம்தான் நான் உயிர் தரித்திருப்பேன். அதற்குப் பிறகு இந்த அரக்கிகளுக்கிடையே நான் உயிர் வாழ மாட்டேன்.'

"இவ்வாறு அவர் என்னிடம் கூறினார். ரகுகுல திலகரே! எல்லா விவரங்களையும் அப்படியே உங்களிடம் கூறி விட்டேன். கடலுக்குக் குறுக்கே ஒரு பாலம் அமைக்கப்பட நீங்கள் ஆணையிட வேண்டும் என்று நான் கருதுகிறேன்."

இரண்டு இளவரசர்களும் அமைதி அடைந்ததைக் கண்டு வாயுகுமாரர் மகிழ்ச்சி அடைந்தார். அடையாளமாகச் சீதையால் கொடுக்கப்பட்ட சூடாமணியை ராமரின் கையில் கொடுத்து விட்டு, நடந்தவை அனைத்தையும் முதலிலிருந்து இறுதி வரை அவரிடம் கூறினார் ஹனுமான்.

சர்க்கம் 66

 

2 comments:

  1. அனுமனின் சீதாதேவியார் பற்றிய செய்தி செல்லப்பட்ட விதம் அருமை

    ReplyDelete