Sunday, January 17, 2021

67. 64 ஆவது சர்க்கம் - ஹனுமானும் மற்றவர்களும் திரும்பி வருதல்

சுக்ரீவனின் வார்த்தைகளைக் கேட்டதும் ததிமுகன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். 

ரகுவம்சத்தைச் சேர்ந்த மேன்மையுடைய இளவரசர்களான ராமர், லக்ஷ்மணர் ஆகியோரையும் சுக்ரீவனையும் வணங்கி விட்டு அவன் தன் ஆட்களுடன் ஆகாய வழியாகவே மதுவனத்துக்குத் திரும்பிச் சென்றான்.

சென்ற அதே வேகத்தில் திரும்பி வந்த அவன் ஆகாயத்திலிருந்து தரையில் இறங்கினான். 

மதுவனத்தை அடைந்ததும் அந்த வானர வீரர்கள் அனைவரும் தேன் குடித்த போதை தெளிந்து தாங்கள் குடித்தவற்றைச் சிறுநீராக வெளியேற்றிக் கொண்டிருந்ததைக் கண்டான்.

மதுவனத்தின் பாதுகாவலனான அந்த ததிமுகன் அவர்களிடம் சென்று அங்கதனுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு இவ்வாறு கூறினான்: 

"இனிய குணம் கொண்ட இளவரசரே! அறியாமையாலும், கோபத்தாலும் எங்கள் தோட்டக் காவலர்கள் உங்களைத் தடுக்க முயன்றனர். அவர்களுடைய விவேகமற்ற செயல் குறித்து தயவு செய்து அவர்களிடம் கோபம் கொள்ளாதீர்கள்,

"சக்தி மிகுந்தவரே! நீங்கள் இளவரசர், மற்றும் இந்தக் காட்டின் அதிபதி. முட்டாள்தனத்தினால் நாங்கள் உங்களிடம் தவறாக நடந்து கொண்டு விட்டோம். அதற்காக எங்களை மன்னித்து விடுங்கள்.

"குற்றமற்றவரே! உங்கள் சிறிய தந்தையிடம் வானர வீரர்களான நீங்கள் திரும்பி வந்தது பற்றி நான் கூறி விட்டேன். இந்த வானர வீரர்கள் அனைவருடன் நீங்கள் திரும்பி வந்ததை அறிந்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். எனவே இந்த மதுவனம் அழிக்கப்பட்டது பற்றி அவரிடம் சிறிது கூடக் கோபமில்லை.

"வானரர்களின் அரசரும் உங்கள் சிறிய தந்தையுமான சுக்ரீவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தவராக சற்றும் தாமதிக்காமல் உங்கள் அனைவரையும்  திருப்பி அனுப்பும்படி எனக்கு உத்தரவிட்டிருக்கிறார்."

உத்தரவுகளின் உண்மையான பொருளைப் புரிந்து கொள்வதில் நிபுணனான அங்கதன், ததிமுகனின் இனிய சொற்களக் கேட்டதும் தன் தோழர்களிடம் கூறினான்:

"ஓ, வானரத் தலைவர்களே! நாம் திரும்பி வந்த செய்தி ராமரைச் சென்றடைந்து விட்டது என்று அறிகிறேன். வெற்றிகரமான போர் வீரர்களே! வேறு இடங்களில் இனியும் நாம் நேரத்தை வீணாக்கி, தேவையற்ற கேளிக்கைகளில் ஈடுபட்டு தாமதம் ஏற்படுத்துவது முறையல்ல.

"ஓ, வானரர்களே! நீங்கள் திருப்தியடையும் அளவுக்குத் தேன் குடித்து விட்டீர்கள். போதுமான அளவு ஓய்வும் எடுத்துக் கொண்டு விட்டீர்கள். இனி நாம் மேலும் தாமதிக்காமல் நம் எஜமானரான சுக்ரீவரின் இருப்பிடத்துக்குச் செல்லலாம்.

"ஓ, வானர வீரர்களே! நான் உங்கள் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன். நீங்கள் கூடிப் பேசி விட்டு என்னிடம் என்ன சொல்கிறீர்களோ, அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். 

"ஒரு வெற்றிகரமான பணியை முடித்து விட்டு வந்திருக்கும் உங்களுக்கு நான் உத்தரவிடுவது முறையாக இருக்காது. எனவே, நான் இளவரசனாக இருந்தாலும், உங்களுக்கு உத்தரவிட நான் தகுதி படைத்தவன் என்று நான் நினைக்கவில்லை."

அங்கதனின் இந்தக் குற்றமற்ற வார்த்தைகளைக் கேட்டு வானரர்கள் மகிழ்ச்சியடைந்து இவ்வாறு பதில் கூறினர்.

"ஓ, உயர்ந்த வானர இளவரசரே! கட்டளையிடக் கூடிய நிலையில் இருக்கும் யார் இவ்வளவு அடக்கமாகப் பேசுவார்? தன் அதிகாரத்தையும் செல்வத்தையும் உணர்ந்திருப்பவர்கள் எல்லாச் சாதனைகளையும் தங்களுடையதாக ஆக்கிக் கொள்வார்கள்.

"இந்த வார்த்தைகள் உங்களுக்கு ஏற்றவையாக இருக்கின்றன. இவற்றை எல்லோரிடமும் பார்க்க முடியாது. உங்களுடைய இந்த அடக்கம் எதிர்காலத்தில் நாம் அதிக சிறப்புகளைப் பெற நீங்கள் எவ்வளவு பொருத்தமானவர் என்பதைக் கூறுகிறது.

"மிகுந்த சக்தி படைத்த வானர அரசர் சுக்ரீவர் இருக்கும் இடத்துக்குத் திரும்பிச் செல்ல உங்கள் உத்தரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். உங்கள் உத்தரவில்லாமல் வானரர்களான நாங்கள் எந்தத் திசையிலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டோம்.

"ஓ, உயர்ந்த வானரரரே! நாங்கள் இந்த வார்த்தைகளை உண்மையாக உணர்ந்து உங்களிடம் கூறுகிறோம்."

அவர்கள் இவ்வாறு கூறியதும் அங்கதன் அவர்கள் கிளம்புவதற்கான உத்தரவைப் பிறப்பித்தான். உடனே அந்த சக்தி வாய்ந்த வானரர்கள் அனைவரும் வானில் எழும்பினர்.

உண்டிவில்லிலிருந்து செலுத்தப்பட்ட கற்களைப் போல், அந்த வானரர்கள் ஒருவர் பின் ஒருவராக வானத்தை மறைப்பது போல் வான்வெளியில் தாவிச் சென்றனர்.

வேகம் மிகுந்த அந்த வானரர்கள் வான் வழியே சென்றபோது, மேகங்கள் நகர்ந்து செல்லும்போது ஏற்படும் ஒலிகளைப் போன்ற ஒலிகள் உருவாயின.

அங்கதனும் அவன் ஆட்களும் அருகில் வந்து கொண்டிருந்தபோது  வானரர்களின் அரசனான சுக்ரீவன் சோகத்தில் ஆழ்ந்திருந்த தாமரைக்கண் கொண்ட ராமரிடம் இவ்வாறு கூறினான்.

"தயவு செய்து மனச் சமாதனம் அடையுங்கள். உங்களுக்கு விரைவிலேயே நல்ல காலம் பிறக்கும். சீதாப்பிராட்டி கண்டு பிடிக்கப்பட்டு வீட்டார். அதில் எந்த ஐயமும் இல்லை. இல்லாவிட்டால் அவர்கள் திரும்ப வருவதற்காக விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை அவர்கள் மீறி இருக்க மாட்டார்கள்.

"தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செய்யாமல் என் வாரிசும் வானரத் தலைவர்களில் ஒருவனுமான அங்கதன் என்னிடம் ஒரு போதும் திரும்பி வர மாட்டான்.

"தன் பணியைச் செய்து முடிப்பதில் வெற்றி அடையாதவர்களின் மனப்பான்மை இவ்வாறு இருக்காது. அவர்கள் அச்சத்துடன் இருப்பார்கள். அவர்கள் முகங்கள் வாடி இருக்கும்,

"அங்கதன் மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் இல்லாமல் இருந்திருந்தால், எங்கள் பாட்டன்கள், முப்பாட்டன்கள் என்று பழைய தலைமுறையிலிருந்து எங்களுக்கு வந்திருக்கும், நாங்கள் மிகவும் கவனமாகப் பாதுகாத்து வந்திருக்கும் மதுவனத்தை அவன் அழித்திருக்க மாட்டான்.

"ஓ, ராமரே! நீங்கள் கௌசல்யாவின் நற்றவப் பலனின் வடிவம். நீங்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வாழ்பவர். ஹனுமான் சீதையைக் கண்டு பிடித்திருப்பார் என்று நம்பி மன அமைதியுடன் இருங்கள். வேறு யாராலும் இதைச் சாதிக்க முடியாது. இந்த உண்மைகள் பற்றி எந்த ஐயமும் இல்லை.

"மிகுந்த அறிவாற்றல் உள்ளவரே! இதைச் சாதித்ததில் ஹனுமானைத் தவிர வேறு யாரும் கருவியாக இருக்க முடியாது. அத்தகைய சாதனைச் சக்தி, அறிவுக் கூர்மை, சிந்தனை உறுதிப்பாடு, துணிவு அத்தனையும் ஒருங்கே பெற்று சூரியனின் ஒளி போன்ற பிரகாசத்துடன் திகழ்பவர் ஹனுமான் மட்டும்தான். 

"அது மட்டுமல்ல, அங்கதன் தளபதியாகவும், ஜாம்பவான் தலைவராகவும், ஹனுமான் வழிகாட்டுபவராகவும் இருக்கும்போது எந்தப் பணியும் தோல்வியில் முடியாது.

"ஓ, துணிவுள்ளவரே! எனவே, உங்கள் வருத்தத்தை விட்டொழியுங்கள்."

அப்போது ஹனுமானின் சாதனையில் பெருமை கொண்டு, தங்கள் வெற்றியை அறிவிக்கும் ஆவலுடன் கிஷ்கிந்தைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த வானரர்களின் பேச்சுக் குரல்கள் வானில் கேட்டன. 

வானரர்களிடமிருந்து வந்த ஒலிகளைக் கேட்டதும், வானர்ளின் அரசன் தன் மகிழ்ச்சியின் அடையாளமாக, வளைந்திருந்த தன் வாலை நிமிர்த்திக் கொண்டான்.

ராமரைச் சந்திக்க ஆவலாக இருந்த வானரர்கள் அங்கதன் மற்றும் ஹனுமானால் வழி நடத்தப்பட்டு அங்கே வந்து சேர்ந்தனர்.

அங்கதனும் மற்ற வானரர வீரர்களும் உற்சாகமான மனநிலையில் அரசன் சுக்ராவன் மற்றும் ராமர் முன் வானிலிருந்து வந்து இறங்கினர். 

வீரரான ஹனுமான் முதலில் ராமரின் காலடிகளில் விழுந்து வணங்கி, சீதை உடலளவில் காயப்படாமலும், கற்புடனும் இருக்கிறார் என்பதை அவரிடம் தெரிவித்தார்.

"சீதை கண்டு பிடிக்கப்பட்டார்" என்ற வார்த்தைகளை ஹனுமானின் வாயிலிருந்து, லக்ஷ்மணருடன் சேர்ந்து ராமர் கேட்டதும், அந்த  வார்த்தைகள் அமிர்தம் போன்று அவர்களுக்கு மகிழ்ச்சியளித்தன.

தன் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக ஹனுமானுக்கு சுக்ரீவன் பாராட்டுத் தெரிவித்தான். லக்ஷ்மணன் ஹனுமானிடம் மிகவும் மகிழ்ச்சியடைந்து அவர் முகத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்தார்.

பிறகு எல்லா எதிரிகளையும் அழிப்பவரான ராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவராக ஹனுமானை மலர்ச்சியுடனும், மரியாதையுடனும் நோக்கினார்.

சர்க்கம் 65


 

1 comment:

  1. ஹனுமானும் மற்றவர்களும் திரும்பி வருதல் பற்றி படிப்பதில் மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete