தன் காலடியில் தலையைப் பதித்தபடி கிடந்த ததிமுகனைப் பார்த்து, சுக்ரீவன் அவனிடம் கவலையுடன் கேட்டான்.
"ஓ, வீரனே! எழுந்து நில். ஏன் என் காலில் விழுகிறாய்? எல்லாவற்றையும் என்னிடம் வெளிப்படையாகச் சொல். உனக்குத் தேவையான பாதுகாப்புக் கிடைக்கும்."
ததிமுகன் எழுந்து நின்று சுக்ரீவனிடம் சொன்னான்.
"அரசரே! வானரர்களின் அரசர்கள் மதுவனத்தில் யாரையும் நுழைய அனுமதித்ததில்லை. வாலி எப்போதும் அனுமதித்ததில்லை, நீங்களும் அனுமதித்ததில்லை.
"அப்படி இருந்தும், இந்த வானரச் சேனைகள் இப்போது அந்த வனத்துக்குள் நுழைந்து எல்லாவற்றையும் உண்டும் அழித்தும் விட்டன.
"தோட்டக் காவலர்கள் அவர்களைத் தடுத்த போதும், காவலர்களைப் பொருட்படுத்தாமல் அந்த வானரர்கள் எல்லாத் தேன்கூடுகளிலிருந்தும் தேனைக் குடித்து விட்டார்கள். அவர்கள் இன்னும் குடித்துக் கொண்டும் தோட்டத்தை அழித்துக் கொண்டும்இருக்கிறார்கள்.
"சிலர் நிறையத் தேனைக் குடித்து விட்டு, தேன்கூடுகளைத் தரையில் தூக்கிப் போடுகிறார்கள். எல்லோருமே அழிவுச் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களைத் தடுத்தால் தங்கள் புருவங்களை உயர்த்தி எங்களை முறைக்கிறார்கள்.
"ஓ, வானரர்களின் உயர்ந்த தலைவரே, கோபமான, கண்கள் சிவந்த அந்த வானரர்களால் இந்த வானரக் காவலர்கள் மிகவும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
"சிலர் கைகளால் அடிக்கப்பட்டிருக்கிறார்கள், சிலர் முழங்கால்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள், சிலர் தரையில் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த வானரர்கள் எல்லோருக்கும் தங்கள் பின்பக்கத்தைக் காட்டி இருக்கிறார்கள்.
"நீங்கள் எங்கள் அரசர். ஆயினும் அந்த வானரர்கள் எங்களைத் தாக்கத் துணிந்திருக்கிறார்கள். மதுவனம் அவர்களால் மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது."
இந்த வார்த்தைகளைக் கேட்டதும், எதிரிகளை அழிப்பவனும், மிகுந்த அறிவு படைத்தவனுமான லக்ஷ்மணன் இவ்வாறு கூறினான்:
"அரசனே! காட்டின் காவலரான இந்த வானரர் இங்கு ஏன் வந்திருக்கிறார்? இவர் எதனால் வருத்தமடைந்திருக்கிறார்?"
லக்ஷ்மணன் இவ்வாறு கேட்டதும், பேச்சில் வல்லவனான சுக்ரீவன் இவ்வாறு பதில் கூறினான்:
"ஓ, உயர்ந்த லக்ஷ்மணரே! ததிமுகன் என்னிடம் சொல்ல விரும்புவது அங்கதனும் மற்ற வானரர்களும் சேர்ந்து மதுவனத்தை அழித்து விட்டார்கள் என்பதை. இப்போது அவர்கள் மதுவனத்தை வந்தடைந்து விட்டார்கள். அப்படியானால் அவர்கள் தங்கள் பணியில் வெற்றியடைந்து விட்டார்கள் என்று பொருள்.
"உயர்ந்தவரான சீதையை ஹனுமான் கண்டு பிடித்திருக்க வேண்டும். இதில் எந்த ஐயமும் இல்லை. வேறு எவராலும் இதைச் செய்திருக்க முடியாது. இந்தப் பணியைச் செய்வது ஹனுமானைத் தவிர வேறு யாராலும் இயலாது.
"சாதனை புரிவதற்கான வல்லமை, அறிவுக் கூர்மை, உறுதிப்பாடு, பணிவு, விஷயங்கள் பற்றிய அறிவு ஆகிய இந்தச் சிறந்த குணங்கள் தன்னிடம் ஒருங்கே இருக்கப் பெற்றவர் அந்த வானரர் மட்டுமே.
"அங்கதன் வழிநடத்துபவனாகவும், ஜாம்பவான் தலைவராகவும், ஹனுமான் இயக்குபவராகவும் இருக்கும்போது, எந்தப் பணியும் முடிக்கப்படுவது நிச்சயம்.
"தென் பகுதிக்குச் சென்று தேடி விட்டுத் திரும்பிய அங்கதன் தலைமையிலான வீர வானரர்களால்தான் மதுவனம் அழிக்கப்பட்டிருக்கும். திரும்பி வந்த வானரர்களால் மதுவனம் அழிக்கப்பட்ட விதம் தங்கள் பணியில் தோல்வியுற்றவர்களால் நிகழ்த்தப்பட்டிருக்க முடியாது. எவ்வாறு தேன் முழுவதும் அருந்தப்பட்டு தோட்டம் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்.
"அது மட்டுமல்ல. அவர்hளை விரட்டியடிக்க மொத்தமாகச் சென்றவர்கள் முழங்கால்களில் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
"துணிவுக்கும் இனிமையான பேச்சுக்கும் பெயர் பெற்ற ததிமுகன் இந்த நிகழ்வுகளைப் பற்றிப் புகார் செய்ய இங்கே வந்திருக்கிறான். ஓ, சுமித்ரையின் வீரப்புதல்வரே! இது எதைக் காட்டுகிறது என்பதை யோசித்துப் பாருங்கள். அவர்களால் சீதை கண்டு பிடிக்கப்பட்டிருப்பது உறுதி.
"ஓ, உயர்ந்தவரே! இல்லாவிட்டால், மதுவனத்தின் பாம்பரியம் அனைத்தையும் பற்றி நன்கு அறிந்த இந்த வானரர்கள் ஒரு தெய்வீக வரத்தின் மூலம் நமக்குக் கிடைத்த அந்தத் தோட்டத்தை அழித்திருக்க மாட்டார்கள்."
உயர்வான புகழைப் பெற்றிருந்த லக்ஷ்மணன் சுக்ரீவரின் இந்த வார்த்தைகளை மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தபோது, நல்ல காலம் நெருங்கி விட்டதை நினைத்து ராமர் இன்னும் அதிக மகிழ்ச்சி அடைந்தார்.
ததிமுகனின் வார்த்தைகளைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்த சுக்ரீவன் உடனே செய்யப்பட வேண்டியது என்ன என்பதை அவனிடம் கூறினான்:
"தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்து விட்டுத் திரும்பி இருப்பதால்தான் அவர்கள் தோட்டத்தில் இருந்த தேனைக் குடித்திருக்கிறார்கள். எனவே அவர்கள் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தங்கள் பணியை முடித்த பிறகு அவர்கள் நடந்து கொண்ட விதம் என் விருப்பத்தின்படிதான் இருக்கிறது.
"தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்து விட்டுத் திரும்பி வரும் ஹனுமான் தலைமையிலான அந்த வானரர்களின் வருகையையும், ராமர், லக்ஷ்மணருடன் சேர்ந்து சீதையை மீட்க நாம் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் பற்றி அவர்கள் கூறுவதைக் கேட்கவும் நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்."
தங்கள் நோக்கம் நிறைவேறியது குறித்து வானரர்களின் அரசனான சுக்ரீவனும், அரசகுமாரர்களான ராமர், லக்ஷ்மணர் ஆகியோரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர். மகிழ்ச்சியால் அவர்களுடைய கண்கள் விரிந்தன.
அளவிட முடியாத மகிழ்ச்சியடைந்த அவர்கள் வரப் போகும் வெற்றியை நினைத்து உடல் முழுவதும் மயிர்க்கூச்செரிந்தனர்.
மதுவனம் அழிக்கப்பட்ட செய்தியைக் கூறுதல் நன்று
ReplyDeleteநன்றி.
Delete