Monday, January 4, 2021

65. 62ஆவது சர்க்கம் - தோட்டக் காவலர்கள் தாக்கப்படுதல்

வானரர்களின் தலைவர்களில் ஒருவரான ஹனுமான் வானரர்களிடம் கூறினார்:

"வானரர்களே! எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நீங்கள் தேனை அருந்துங்கள். உங்களைத் தடுக்க வருபவர்களை விரட்டியடிக்க நான் இருக்கிறேன்."

எல்லா வானரச் சேனைகளுக்கும் தலைவனான இளவரசன் அங்கதன் ஹனுமானின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்து இவ்வாறு உத்தரவிட்டான்:

"வானரர்கள் மதுவை (தேனை) அருந்தட்டும். நம் பயணத்தின் நோக்கத்தை வெற்றியடையச் செய்த ஹனுமானின் வார்த்தைகள், அவை முறையற்றதாக இருந்தாலும், பின்பற்றப்பட வேண்டும். அப்படி இருக்கும்போது முறையான செயல்பாட்டின் வரம்புக்குள் இருக்கும் இந்த விஷயம் பற்றிக் கேட்க வேண்டுமா என்ன?"

அங்கதனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், அந்த உயர்ந்த வானரர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அவனை வாழ்த்தினர். 

உற்சாகமூட்டிய வார்த்தைகளைக் கூறியதற்காக அங்கதனைப் புகழ்ந்த அந்த வானரர்கள் கரையைக் கடந்து ஓடும் நதியைப் போல் தேன் அதிகம் இருந்த தோட்டத்தின் பகுதிகளை நோக்கி விரைந்தனர்.

மிதிலை நாட்டு இளவரசியைக் கண்டு பிடித்து விட்டதால் அளவு கடந்த மகிழ்ச்சியிலும், தாங்கள் விரும்பியபடி தேனை அருந்த அனுமதி கிடைத்து விட்ட உற்சாகத்திலும், அவர்கள் தோட்டத்தின் காவலர்கள் தடுத்ததை மீறி அந்தக் காட்டுத் தோட்டத்தின் எல்லாப் பகுதிகளுக்குள்ளும் நுழைந்தனர்.

தாங்கள் மனத் திருப்தி அடையும் அளவுக்கு அவர்கள் தேனை அருந்தி, அங்கிருந்த சுவையான பழங்களையும் உண்டனர்.

அந்த மதுவனத்தின் மீது மிகவும் விருப்பம் கொண்ட காவலர்கள் தங்கள் கடமையைச் செய்வதற்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வானரர்களால் தாக்கப்பட்டனர்.

வானரர்கள் பெரிய பாத்திரங்கள் அளவுக்கு இருந்த தேன்கூடுகளை எடுத்துக் கொண்டு அவற்றிலிருந்த தேனைப் பருகினர். சிலர் காலியான தேன்கூடுகளைக் காவலர்கள் மீது வீசி அவற்றை உடைத்தனர்.

தேனைப் போன்ற உடல் நிறம் கொண்ட குரங்குகள், தாங்கள் மனத் திருப்தி அடையும் அளவுக்குத் தேனைக் குடித்த பின், மிகுந்தவற்றைக் கீழே கொட்டி வீணடித்தனர். குடிபோதையில் தேன்கூடுகளை ஒருவர் மீது ஒருவர் வீசத் தொடங்கினர்.

அதிக போதை கொண்டிருந்த அவர்களில் சிலர் மரங்களின் கிளைகளைப் பிடித்துக் கொண்டு கீழே விழாமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். சிலர் மரங்களுக்குக் கீழே இலைகளைப் பரப்பி அவற்றின் மீது படுத்துக் கொண்டனர்.

போதை கொண்ட சில வானரர்கள் தரையில் உருண்டனர். தங்கள் சிந்திக்கும் திறனை இழந்து விட்ட சிலர் போதையால் ஏற்பட்ட உற்சாகத்தில் ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ள ஆரம்பித்தனர்.

தேன் குடித்த மயக்கத்தினால் சிலர் உறங்கினர், சிலர் நடனமாடினர், சிலர் உரத்த குரலில் கூச்சல் எழுப்பினர். சிலர் ஒன்றைச் செய்து விட்டு வேறொன்றைச் செய்ததாகப் பாசாங்கு செய்தனர்.

சிலர் குறும்பகள் செய்து விட்டுச் சிரித்தனர். சிலர் கத்தினர். போதை தெளிந்த சிலர் எழுந்து கொண்டனர்.

அந்தக் காட்டுத் தோட்டத்தில் இருந்த தேன் வளங்களைப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருந்த ததிமுகனின் எல்லா வேலையாட்களும் அந்தச் சக்தி வாய்ந்த வானரர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்கள் அந்தத் தோட்டத்தின் பலவேறு மூலைகளுக்கும் ஓடினர்.

முழங்கால்கள் பிடித்து இழுக்கப்பட்டு, வானரர்களின் அலங்கோலமான நிலைகளைக் காணும் நிலைக்குத் தள்ளப்பட்ட ததிமுகனின் ஆட்கள்  தங்கள் எஜமானனிடம் சென்று இவ்வாறு புகார் செய்தனர்:

"ஹனுமானின் அனுமதியோடு வானரர்கள் மதுவனத்தை அழித்து விட்டனர். அவர்கள் எங்கள் முழங்கால்களைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளித் தங்கள் பின்புறங்களை எங்களுக்குக் காட்டினர்."

வானரர்களின் இந்த அழிவுச் செயல்கள் குறித்து தோட்டங்களின் பாதுகாவலன் ததிமுகன் மிகவும் கோபமடைந்தாலும், அவன் தன் வானர ஊழியர்களிடம் இவ்வறு கூறி அவர்களைச் சமாதானம் செய்தான்:

"வாருங்கள். நாம் போய், தேனைக் குடித்த போதையுடனும், தங்கள் பலத்தைக் குறித்த கர்வத்தால் ஏற்பட்ட போதையுடனும் இருக்கும் அந்த வானரர்களை விரட்டி அடிப்போம்."

ததிமுகனின் வார்த்தைகளைக் கேட்டதும், வீரம் மிகுந்த அந்த வானரக் காவலர்கள் அவனுடன் மீண்டும் மதுவனத்துக்கு விரைந்து சென்றனர். வழியில் ததிமுகன் ஒரு மரத்தைப் பிடுங்கி அதைத் தூக்கிக் காட்டியபடியே ஓடினான். அவன் ஆட்கள் அவனைப் பின் தொடர்ந்து ஓடினர்.

ததிமுகனும் அவன் ஆட்களும் மிகவும் கோபம் கொண்டவர்களாக கைகளில் மரங்களையும், மலைப்பாறைகளையும் தூக்கிக் கொண்டு வீரமிக்க வானர சேனையை நெருங்கினர்.

தங்கள் எஜமானனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்களாக, தைரியம் மிகுந்த காவல் வீரர்கள் பனை மரம், பிற மரங்கள், மற்றும் பாறைகளை ஆயுதமாகக் கொண்டு வேகமாக ஓடினர்.

பிறகு பல காவலர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு தங்கள் வலிமையில் நம்பிக்கை கொண்டவர்களாக, வானரர்களையும் அவர்களின் தலைவர்களையும் சூழ்ந்து கொண்டு தாக்கினர்.

ததிமுகன் கோபமாக இருப்பதைப் பார்த்த ஹனுமான் முதலான வானரத் தலைவர்கள் விரைந்து அவனிடம் சென்றனர்.

மிகுந்த வலிமையும், திறமையும் கொண்ட மதிப்பு நிறைந்த ததிமுகன் கையில் ஒரு மரத்தைத் தூக்கிக் கொண்டு அவர்களைத் தாக்க வந்து கொண்டிருந்தான். 

அங்கதன் கோபத்துடன் ததிமுகனை நெருங்கி அவனைத் தன் இரண்டு கைகளாலும் அடித்தான். போதையின் உச்சத்தில் இருந்த அங்கதன் தன் எதிரில் நிற்பவன் தன்னை விட வயதில் மூத்த மரியாதைக்குரியவன் என்பதை உணரத் தவறியவனாக, ததிமுகனைக் கீழே தள்ளி அவனைத் தன் கால்களால் உதைத்தான்.

அந்தச் சிறந்த வானரன் தோள்களிலும், தொடைகளிலும், கால்களிலும் அடிபட்டு  உடல் முழுதும் ரத்தம் வழிய சிறிது நேரம் மூர்ச்சையற்று இருந்தான்.

சுக்ரீவனின் மாமனான ததிமுகன் விரைவிலேயே எழுந்து நின்று, இன்னும் அதிகக் கோபம் கொண்டவனாக தேன் குடித்த போதையில் இருந்த குரங்குகளை ஒரு தடியால் அடித்து விரட்டினான். 

வானரர்களிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ததிமுகன் ஒதுக்குப்புறமான ஒரு இடத்துக்குச் சென்று தன் ஆட்களிடம் கூறினான்:

"இவர்கள் இங்கேயே இருக்கட்டும். ராமருடன் இருக்கும் நம் எஜமானர் சுக்ரீவரிடம் நாம் செல்வோம். இந்த அழிவுச் செயல்கள் அனைத்துக்கும் முழுக் காரணம் அங்கதன்தான் என்று அரசர் சுக்ரீவரிடம் நான் சொல்கிறேன். 

"அவர் உடனே கோபமடைந்து இந்த வானரர்களைக் கொன்று விடுவார். ஏனெனில் தேவர்களால் கூட நுழைய முடியாத இந்த மதுவனம் சுக்ரீவருக்கு அவர் முன்னோர் வழி வந்த சொத்து. இது அவருக்கு மிகவும் பிரியமானது.

"அதனால் இந்த வானரர்களுக்கு அழிவு நிச்சயம், இந்தத் தேன் பித்துக் கொண்ட வானரர்களை சுக்ரீவர் அடித்துக் கொன்று விடுவார்.

"அரசரின் ஆணையை மீறிய இந்தத் தீய பிறவிகள் கொல்லப்பட வேண்டியவர்கள்தான். பொறுக்க முடியாத நம் கோபத்துக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்."

இதைத் தன் ஆட்களிடம் தெரிவித்த பிறகு, சக்தி வாய்ந்த ததிமுகன் அவர்களுடன் சுக்ரீவனிடம் விரைந்து சென்றான். உயர்ந்த வானரத் தலைவரும், சூரியனின் புதல்வனுனான விவேகமுள்ள சுக்ரீவன் இருந்த இடத்தை அவன் கண நேரத்தில் அடைந்தான்.

ராமருடனும், லக்ஷ்மணருடனும் சுக்ரீவனைப் பார்த்ததும் ததிமுகன் வானிலிருந்து இறங்கினான். சக்தி வாய்ந்த ததிமுகன் தன் ஆட்களுடன் சுக்ரீவன் முன்பு சோகமான முகத்துடன் நின்று அவன் கால்களில் விழுந்து வணங்கி விட்டு அவன் ஆணையை எதிர்பார்த்து நின்றான்.

சர்க்கம் 63






 


2 comments:

  1. வானரங்கள் கொண்டாட ததிமுகன் திண்டாட அருமை!

    ReplyDelete