Sunday, December 27, 2020

64. 61ஆவது சர்க்கம் - மதுவனம் அழிக்கப்பட்டது!

உயர்ந்த வானரத் தலைவர்களான அங்கதன், ஹனுமான் முதலியோர் ஜாம்பவானின் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.  

மந்தர மலை போலவும், மேரு மலை போலவும் பிரம்மாண்டமான உருவம் கொண்டிருந்த, தடத்தில் செல்லும் யானைகள் போல் தோற்றமளித்த அந்த வானரர்கள் ராமரின் புகழுக்கும், தங்கள் நோக்கத்துக்கும் உகந்த வகையில் செய்யக் கூடியது எதுவாக இருக்கும் என்று தங்களுக்குள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தாங்கள் செய்தவை பற்றிப் பெருமை கொண்டிருந்த அவர்கள் தங்கள் நோக்கம் வெற்றியடைந்ததை அறிவிப்பதில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தனர். 

ராமரிடம் நன்றி கொண்டவர்காளாகவும், தங்கள் உற்சாகத்தால் உந்தப்பட்டவர்களாகவும், எல்லா வானரர்களும் வலிமை, திறமை மற்றும் அறிவுக்காகப் பெயர் பெற்ற ஹனுமானை முன்னே நிறுத்தி அவர் பின்னே நடந்து சென்றனர். அவர்கள் எல்லா உயிரினங்களாலும் புகழப்பட்டனர்.

பிறகு அவர்கள் மஹேந்திர மலையிலிருந்து, தங்கள் பெரிய உடல்களால் வானத்தை மறைத்துக் கொண்டு பெரும் வேகத்துடன் விரைந்து சென்றனர். 

அந்தரத்தில் தாவிக் குதித்துச் சென்று பழகிய வானரர்கள் தேவர்களின் தோட்டமான நந்தவனத்துக்கு நிகரான, மரங்கள் நிறைந்த ஒரு காட்டுத் தோட்டத்தைச் சென்றடைந்தனர்.

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அந்த கண்ணுக்கினிய காட்டுத் தோட்டம் சுக்ரீவனின் மதுவனம் என்று அழைக்கப்பட்டது. யாரும் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு அது நன்றாகப் பாதுகாப்பட்டு வந்தது, அது சுக்ரீவனின் மாமனான ததிமுகன் என்ற  திறமை வாய்ந்த வானரத் தலைவனின் பொறுப்பில் இருந்தது.

கட்டுக்கடங்காத உற்சாகத்துடன் அந்த வானரர்கள் வானர அரசனுக்கு மிகவும் விருப்பமான அந்தக் காட்டில் கூடினர். மதுவனத்தைக் கண்டதும் தேன் நிறம் கொண்ட அந்த வானரர்கள் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்து  அங்கே இருக்கும் தேனை அருந்த அனுமதிக்குமாறு அங்கதனிடம் கேட்டனர்.

ஜாம்பவான் போன்ற மூத்தவர்களின் ஒப்புதலைப் பெற்றுத் தேனை அருந்த வானரர்களுக்கு அனுமதி அளித்தான் அங்கதன். 

ஏற்கெனவே உற்சாக மனநிலையில் இருந்த அந்த வானரர்கள், இந்த அனுமதி கிடைத்ததும் இன்னும் அதிக உற்சாகம் கொண்டனர். சிலர்  முரட்டுத்தனமாக நடனம் ஆடவும் தொடங்கினர்.

சிலர் பாடினர், சிலர் ஆடினர், சிலர் சிரித்தனர், சிலர் தாவிக் குதித்தனர், சிலர் அங்குமிங்கும் ஓடினர், சிலர் அதிவேகமாக ஓடினர், சிலர் இனம் காண முடியாத வார்த்தைகளை, உளறுவது போல் பேசினர்.

சிலர் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர், சிலர் ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளினர், சிலர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர், சிலர் கூடி விளையாடினர்.

சிரித்துக் கொண்டிருந்த ஒரு வானரர் பாடிக் கொண்டிருந்த வானரர் ஒருவருக்கு அருகில் சென்றார். பாடிக் கொண்டிருந்த ஒரு வானரர் அழுது கொண்டிருந்த ஒரு வானரருக்கு அருகே சென்றார். 

அழுது கொண்டிருந்த ஒரு வானரரின் அருகே இன்னொரு வானரர் வந்து அவரைப் பிடித்து உலுக்கினார். பிடித்து உலுக்கிக் கொண்டிருந்த வானரருக்கு தண்டனை கொடுப்பது போல் இன்னொரு வானரர் அவரைப் பிடித்துத் தள்ளினார்.

தேனைக் குடித்ததும் அந்த வானரர் கூட்டம் பெரும் போதையில் ஆழ்ந்தது. அந்தக் கூட்டதில் ஒருவர் கூட போதை அடையாமல் இல்லை. ஆயினும் ஒருவர் கூட மது அருந்தியதில் திருப்தி கொள்ளவில்லை. 

அப்போது, அந்தத் தோட்டத்தைப் பராமரிப்பவனான ததிமுகன், பூக்கள் மிகுந்த மரங்கள் அழிக்கப்பட்டதையும், அந்தத் தோட்டமே சிதைக்கப்பட்டதையும் பார்த்து அந்த வானரர்களைக் கடிந்து கொண்டான்.

அந்தத் தோட்டத்தின் பாதுகாவலனான வயது முதிர்ந்த, சக்தி வாய்ந்த அந்த வானரன் போதை அடைந்திருந்த, சிந்தனையையே இழந்திருந்த வானரர்களால் பல விதங்களிலும் அவமதிக்கப்பட்டான். தோட்டத்தை அவர்களிடமிருந்து பதுகாக்க அவன் வேறு வழிகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

அவர்களில் சிலரைத் தன் வாயில் வந்த கடிய சொற்களால் எல்லாம் வைதான். சில பேரைக் காலால் உதைத்தான். சிலருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டான். வேறு சிலரிடம் நல்ல விதமாகப் பேசிப் புரிய வைக்க முயன்றான்.

தோட்டத்தின் பாதுகாவலனான ததிமுகன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தும் விதத்தில் அவர்களைக் கடிந்து பேசி அவர்களை எதிர்த்து நின்றபோது, தாங்கள் செய்வது தவறு என்பதையே உணராத வானரர்கள் மொத்தமாக அவனைச் சூழ்ந்து கொண்டு, போதையில் அவன் மீது விழுந்து அவனை அங்கும் இங்கும் இழுத்துச் சென்றனர்.

போதையில் இருந்த வானரர்கள் அவனை நகங்களால் கீறினர். பல்லால் கடித்தனர். அந்தக் காட்டுத் தோட்டம் முழுவதையும் தங்கள் கைகளாலும், கால்களாலும் தொடர்ந்து நாசம் செய்தனர். 

சர்க்கம் 62






2 comments:

  1. வானரர்கள் குதுஹலம் கடைசியில் விபரீதம் புரிந்தது. நன்று!

    ReplyDelete