Thursday, December 17, 2020

62. 59ஆவது சர்க்கம் - செய்ய வேண்டியவை பற்றிய ஆலோசனை

 நடந்தவற்றை விவரித்த பின் வாயுபுத்திரரான ஹனுமான் ஒரு விஷயத்தை வலியுறுத்திக் கூறினார்:

"சீதையின் தூய்மையைப் பார்த்த பின் என் மனத்தில் பெரும் நிம்மதி ஏற்பட்டிருக்கிறது. ராமரின் நோக்கமும், சுக்ரீவரின் கடின முயற்சிகளும் இப்போது நிறைவேறி இருக்கின்றன. 

"தவத்தினால் மேன்மை அடைந்துள்ள ராவணன் இந்த உலகங்களைப் பாதுகாக்கும் வல்லமை பெற்றவன். அவற்றை அவனால் அழிக்கவும் முடியும். இந்தத் தவம்தான் சீதையைக் கடத்துகையில் ராவணன் அவரைத் தொட்டபோது அவனை எரிந்து போகாமல் காப்பாற்றியது. உத்தம பத்தினியான சீதையின் கற்பு, அவருடைய கோபத்தைத் தூண்டும் எவரையும் எந்த ஒரு நெருப்பாலும் செய்ய முடியாத அளவுக்கு எரித்து விடக் கூடியது.

"அந்த உயர்ந்த பெண்மணி, தீய மனம் படைத்த ராவணனின் அரண்மனை நந்தவனத்தில் உள்ள அசோக வனத்தில் ஒரு சிம்ஸுபா மரரத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்ட நிலையில் பெரும் துயத்தில் உள்ளார். 

"சந்திரன் மேகங்களால் சூழப்பட்டிருப்பது போல், அந்த வைதேஹி அரக்கப் பெண்களால் சூழப்பட்டிருக்கிறார். ஆனால் அந்தப் பத்தினி தன் சக்தியால், போதை கொண்டிருக்கும் ராவணனை லட்சியம் செய்யவில்லை.

"இந்திராணி இந்திரனையே நினைத்துக் கொண்டிருப்பதைப் போல், தூய்மையே உருவானவரான வைதேஹி ராமரைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ராமரிடம் மட்டும்தான் அன்பும், நம்பிக்கையும் உள்ளன.

"சீதை (தான் தூக்கிச் செல்லப்பட்டபோது அணிந்திருந்த) அதே ஆடையைத்தான் உடுத்திக் கொண்டிருக்கிறார். அவர் உடலில் தூசி படிந்து, அவர் துயரத்தினால் இளைத்திருக்கிறார். தன் கணவரின் நலம் பற்றிய ஒரே சிந்தனையுடன் மட்டும்தான் அவர் இருக்கிறார்.

"இலங்கையில் இருந்த அந்தத் தோட்டத்தில் கொடூரமான தோற்றம் கொண்ட அரக்கிகள் அவரை அச்சுறுத்த முயல்வதை நான் என் கண்களால் பார்த்தேன்.

"அந்த அழகிய பெண்மணி எப்போதும் தன் கணவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதையே தன் கடமையாகக் கருதுகிறார். 

"அவருடைய கூந்தில் ஒற்றையாக முடியப் பட்டிருக்கிறது. அவர் தரையில் படுத்திருக்கிறார். அவருடைய நிலை குளிர்காலத் தாமரை மலரைப் போல் இருக்கிறது.

"ராவணனின் பிடியிலிருந்து தப்பும் வழி அறியாததால் அவர் ஏமாற்றத்தின் உச்சத்துக்குச் சென்று தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்திருந்தார்.

"ஆயினும் நான் மிகவும் கஷ்டப்பட்டு அவருக்கு ஆறுதல் கூறி, நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தினேன். 

"அதற்குப் பிறகு அவர் என்னிடம் கூறியவற்றை நான் உங்களிடம் முழுமையாகத் தெரிவித்திருக்கிறேன்.

"ராமருக்கும் சுக்ரீவருக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தைப் பற்றி அறிந்து அவர் மிகவும் திருப்தி அடைந்திருக்கிறார். பெரும் உறுதி படைத்தவரும், உயர்ந்த நடத்தை உள்ளவருமான ராமர்தான் ராவணனை அழிக்கும் கருவியாக இருக்க வேண்டும் என்பது அவருடைய உறுதியான எண்ணம்.

"தன் கணவரின் கௌரவம் பற்றி அவர் கொண்டுள்ள இந்த அக்கறைதான் குற்றம் புரிந்த ராவணனைத் தன் கற்பின் சக்தியால் அழிக்காமல் அவரைத் தடுத்து நிறுத்தி இருக்கிறது.

"இயல்பாகவே மெலிந்திருக்கும் அவர் உடல் கணவரிடமிருந்து பிரிந்திருப்பதால் பிரதமையன்று கற்ற கல்வியைப் போல் பலவீனமானதாக ஆக்கி இருக்கிறது. 

"உயர்ந்த பெண்மணியான சீதை இவ்விதமாக சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார். எனவே அவரை இந்த நிலையிலிருந்து மீட்பதற்கான அனைத்தும் செய்யப்பட வேண்டும்."

சர்க்கம் 60

No comments:

Post a Comment