ஹனுமான் கூறியதைக் கேட்டதும் வாலியின் புதல்வனான அங்கதன் கூறினான்:
"ஹனுமான் தான் சென்று வந்தது பற்றிய எல்லா விவரங்களையும் உங்களிடம் கூறி விட்டார்.
"ஜாம்பவான் முதலான உயர்ந்த வானரர்களிடம் அனுமதி பெற்று ராமர், லக்ஷ்மணர் என்ற அந்த இரண்டு இளவரசர்களையும் சீதையுடன் ஒன்று சேர்க்கும் பணியில் நாம் ஈடுபட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
"இலங்கை நகரத்தை அந்த அரக்கர் சேனைகளுடனும், ராவணனுடனும் சேர்த்து அழிப்பதற்கு நான் ஒருவனே போதும். போரில் துணிவு காட்டுவதில் பெயர் பெற்றவர்களும், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் திறமையானவர்களூமான சக்தி வாய்ந்த வானரர்களான நீங்களும் உடனிருந்தால் இன்னும் என்ன வேண்டும்?
"நான் ராவணனை அவன் சேனைகளுடனும் அவன் ஆதரவாளர்கள், புதல்வர்கள், சகோதரர்கள் ஆகியோருடனும் போரில் அழித்து விடுவேன். பிரம்மா, இந்திரன், ருத்ரன், வாயு, வருணன் ஆகியோரின் அஸ்திரங்களையும், இந்திரஜித்தின் கண்ணுக்குப் புலப்படாத அஸ்திரங்களையும் என்னால் முறியடிக்க முடியும்.
"ராவணனுடன் போரிட நீங்கள் என்னை அனுமதித்தால், என்னால் எல்லா அரக்கர்களையும் கொன்று விட முடியும். போரில் எதிரிகளை நோக்கி நான் வீசும் தொடர்ச்சியான பாறை மழை தேவர்களைக் கூட அழித்து விடும். அரக்கர்கள் மீது அது என்ன விளைவை ஏற்படுத்தும் என்று சொல்ல வேண்டியதில்லை.
"கடல் நிரம்பி வழிந்து நீர் கரையில் ஓடலாம், மந்தர மலை அதிரலாம், ஆனால் ஜாம்பவானைப் போரில் எதிரிகளால் அசைக்க முடியாது. முக்கியமான எல்லா அரக்க வீரர்களையும் அழிக்க வாயுவின் வீரப் புதல்வரான ஹனுமான் ஒருவரே போதும்.
"பனசன், உயர்ந்தவனான நீலன் ஆகியோரின் தாக்குதலில் மந்தர மலையே தூள் தூளாக உடைந்து விடும் என்றால் அரக்கர்களைப் பற்றிக் கூறுவதற்கு என்ன இருக்கிறது?
"தேவர்கள், அசுரர்கள், அரக்கர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், பட்சிகள் ஆகியோரில், மைந்தன், த்விவிதன் ஆகியோரைப் போரில் எதிர்கொள்ளக் கூடிய ஒருவரைக் குறிப்பிடுங்கள்.
"அஸ்வினி தேவர்களின் புதல்வர்களான இந்த இரண்டு உயர்ந்த வானரர்களும் பெரும் சக்தி கொண்டவர்கள். அவர்களைப் போரில் எதிர்கொள்ளக் கூடிய எவரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
"இவர்கள் இருவரும் பிரம்மாவிடம் வரம் பெற்ற பெருமை கொண்டவர்கள், சாகாவரம் அளிக்கும் அமிர்தத்தை அருந்தியவர்கள், வானரர்களுக்குள் முன்னிலை வகிப்பவர்கள்.
"முன்னொரு காலத்தில், எல்லா உலகங்களுக்கும் தந்தையான பிரம்மா அஸ்வினி தேவர்களுக்கு நன்மை செய்ய விரும்பி அவர்களுடைய புதல்வர்கள் யாராலும் கொல்லப்பட மாட்டார்கள் என்ற அரிய வரத்தை அவர்களுக்கு அருளினார்.
"இந்த வரத்தின் சக்தியின் காரணமாக, இவர்கள் தேவர்களுடன் போரிட்டு அவர்களின் தளையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு சாகாவரம் அளிக்கும் பானமான அமிர்தத்தை அருந்தினர்.
"மற்ற எல்லா வானரர்களையும் விட்டு விடுவோம். எதிர்க்கப்பட முடியாத இந்த இரண்டு வானரர்களால் மட்டுமே தனியாகவே இலங்கையை அதன் எல்லா யானை, குதிரை, தேர்ப் படைகளுடன் சேர்த்து அழிக்க முடியும் என்பதில் ஐயமில்லை.
"ஓ, வானரர்களே! சீதையைக் கண்டு பிடித்து விட்டதால், அவரை நம்முடன் அழைத்துச் செல்லாமல் நாம் ராமர் முன் போய் நிற்பது முறையல்ல. வீரத்துக்குப் பெயர் பெற்ற நீங்கள் 'சீதையை நாங்கள் கண்டு விட்டோம், ஆனால் அவரை எங்களுடன் அழைத்து வர முடியவில்லை' என்று அவரிடம் தெரிவிப்பது முறையாக இருக்காது என்று நான் கருதுகிறேன்.
"ஓ, உயர்ந்த வானரர்களே! எல்லா உலகங்களிலும் வசிக்கும் எல்லா தேவர்கள் மற்றும் அசுரர்களில் நம்மைப் போல் தாவிச் செல்லக் கூடியவர்கள் யாரும் இல்லை. வீரத்திலும், தாக்கும் சக்தியிலும் கூட நம்முடன் ஒப்பிடக் கூடியவர்கள் எவரும் இல்லை.
"அரக்கர்களின் தலைவர்கள் ஹனுமானால் இவ்வாறு கொல்லப்பட்ட பிறகு, சீதையை நம்முடன் அழைத்துக் கொண்டுதான் நாம் ராமரிடம் செல்ல வேண்டும். இதை விடப் பொருத்தமான செயல் வேறென்ன இருக்க முடியும்?
எனவே, இந்தத் தருணத்தில் நாம் செய்ய வேண்டியது இதைத்தான்."
விவேகத்துக்கும் சிறப்பாக முடிவெடுத்துச் செயல்படுவதற்கும் பெயர் பெற்ற, வானரர்களின் தலைவரான ஜாம்பவான் அங்கதனின் இந்தப் பேச்சைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் அப்போது ஒரு முக்கியமான ஆலோசனையை அவர் கூறினார்.
அவர் சொன்னார்: "இளவரசரே! நீங்கள் கூறியது நம்மால் செய்ய இயலாலதல்ல. ஆயினும், நம் நோக்கம் வெற்றி பெற வேண்டுமானால், இந்த விஷயத்தில் ராமரின் எண்ணம் என்ன என்று அறிந்து கொண்ட பிறகு நாம் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும்."
அங்கதன் பேச்சு சிறப்பு
ReplyDeleteநன்றி. 59ஆவது சர்க்கத்தையும் (இதற்கு முந்தையது) படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
Deleteஆம் இரண்டும் சேர்ந்து இன்று காலை படித்தேன். மன்னிக்கவும் உடல் நிலை காரணமாக கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. நன்றி
ReplyDeleteநன்றி. நீங்கள் வழக்கமாக் கருத்திடுவதால் கேட்டேன்.
Deleteஉங்கள் அக்கறைக்கு நன்றி.
ReplyDelete