Thursday, October 29, 2020

56. 53ஆவது சர்க்கம் - ஹனுமான் வாலில் தீ வைக்கப்படுதல்

பத்து தலைகள் கொண்ட அந்த அரசன் உயர்ந்தவனான தன் சகோதரனால் கூறப்பட்ட வார்த்தைகளை  தர்மத்துக்கும் அந்தச் சூழ்நிலைக்கும் இசைந்த விதத்தில் அமைந்ததாகக் கருதி ஏற்றுக் கொண்டு இவ்வாறு பதிலளித்தான்:

"நீ கூறியது சரிதான். தூதுவனைக் கொல்வது இழுக்குதான். ஆயினும், மரண தண்டனை அல்லாத ஒரு பொருத்தமான தண்டனை இந்தக் குரங்குக்கு நிச்சயம் அளிக்கப்பட வேண்டும்.

"குரங்குகளுக்கு அவற்றின் வால்தான் முக்கியமான, மற்றும் பொருத்தமான அணிகலனாகக் கருதப்படுகிறது. எனவே இந்தக் குரங்கின் வால் தீ வைத்துக் கொளுத்தப்படட்டும். எரிந்து போன வாலுடன் இது வீடு திரும்பட்டும்.

"வால் வெட்டப்பட்ட இதன் துயரமான நிலை இதன் நண்பர்கள், உறவினர்கள், சகாக்கள் ஆகியோருக்கு ஒரு காட்சிப் பொருளாக அமையட்டும். தீ வைக்கப்பட்ட வாலை அரக்கர்கள்  நகரத்தின் எல்லா சாலைச் சந்திப்புகளின் வழியாகவும் இழுத்துச் செல்லட்டும்." 

அரக்க அரசன் இவ்வாறு உத்தரவிட்டான்.

ராவணனின் இந்த உத்தரவைக் கேட்டு அதிக உற்சாகமடைந்த அரக்கர்கள் ஹனுமானின வாலில் தங்கள் கையில் கிடைத்த எல்லா வகைப் பழைய கிழிந்த துணிகளையும் சுற்ற ஆரம்பித்தனர்.

தன் வாலில் இவ்வாறு துணி சுற்றப்பட்டபோது, காட்டிலுள்ள காய்ந்த சருகுகளில் பட்டதும் ஒரு நெருப்புப் பொறி மிகப் பெரிதாக வளர்வது போல் அந்த உயர்ந்த வானரர் தன் உடலை பிரும்மாண்டமான அளவுக்குப் பெருக்கிக் கொண்டார்.

பிறகு அந்த அரக்கர்கள் அவர் வாலை எண்ணெயில் தோய்த்து அதற்குத் தீயிட்டனர்.

அப்போது பெண்கள், குழந்தைகள் உட்பட எல்லா அரக்கர்களும் ஹனுமானை அவருடைய எரியும் வாலுடன் பார்ப்பதற்காக அங்கே வந்தனர். 

அப்போது உதிக்கும் சூரியனைப் போன்ற ஒளி கொண்ட முகத்துடன் இருந்த ஹனுமான் கோபமடைந்தவராக அரக்கர்களைத் தன் எரியும் வாலால் அடிக்க ஆரம்பித்தார்.

அதற்குப் பிறகு அந்தக் கொடிய அரக்கர் கூட்டத்தினர் அந்த உயர்ந்த, வீரமுள்ள வானரரை மேலும் பல கயிறுகளால் கட்டினர். 

அப்போது ஹனுமான் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப அடுத்துச் செய்ய வேண்டியவை எவை என்பது பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார். 

"என்னால் மீண்டும் கயிறுகளை அறுத்துக்கொண்டு எம்பிக் குதித்து இவர்களைக்  கொல்ல முடியும். நான் இப்போது கட்டுண்டிருந்தாலும், இந்த அரக்கர்கள் எனக்குச் சமமானவர்கள் அல்ல.

"நான் அப்படிச் செய்தால் என் எஜமானருக்கு நன்மையானதையே செய்ய வேண்டிய நான், என் கடமையை எல்லா விதங்களிலும் சரியாகச் செய்வதிலிருந்து தவறி இருப்பேன். 

"இந்தத் தீயவர்கள்  அவர்கள் அரசனின் கட்டளைக்கிணங்க என்னைக் கட்டி இருக்கிறார்கள். இந்த எல்லா அரக்கர்களையும் தனியாகவே என்னால் போரில் எதிர்கொள்ள முடியும். ஆயினும், என் எஜமானர் ராமருக்காக, எல்லா முன்னெச்சரிக்கைகளையும்  நான் பின்பற்றப் போகிறேன்.

"இரவு நேரத்தில் இலங்கையில் எல்லாவற்றையும் என்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. பகல் நேரத்தில் சரியாகப் பார்த்து இந்த நகரம் எப்படி வலுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது பற்றிய நுணுக்கங்களை அறிந்து கொண்டு செல்வதுதான் முறையாக இருக்கும். 

"இந்த நோக்கத்துக்காக நான் மீண்டும் ஒரு முறை இலங்கையைச் சுற்றிப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

"என்னைக் கட்டிப் போட்டு விட்டு என் வாலுக்கு நெருப்பு வைத்ததுடன், இந்த அரக்கர்கள் என்னை வேறு விதங்களிலும் துன்புறுத்தட்டும், இவர்களுடைய எந்தச் செயலும் என் பொறுமைக்கோ எனக்கோ சோர்வு ஏற்படுத்தாது." 

அந்த உயர்ந்த, சிறந்த, சக்தி வாய்ந்த வானரரின் மனதில் ஓடிய எண்ணங்களை அறியாத அந்த அரக்கர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரை இழுத்துக் கொண்டு அந்த மாளிகையை விட்டு வெளியேறினர்.

கொடிய செயல்களைச் செய்து பழகிய அவர்கள் ஹனுமானை இழுத்துக் கொண்டு, பெரும் இரைச்சலை ஏற்படுத்திக் கொண்டும், சங்குகள், முரசுகள் போன்ற வாத்தியங்களை முழக்கிக் கொண்டும் அந்த நகரை வலம் வந்தனர்.

எதிரிகளை அழிப்பவரான ஹனுமான் அரக்கர்கள் பின்தொடர அந்த நகரை வலம் வந்தார். அவ்வாறு அழைத்துச் செல்லப்படும்போதே, அவர் அரக்கர்களின் அந்த நகரம் பற்றிய எல்லா விவரங்களையும் மனதில் குறித்துக் கொண்டார்.

அங்கே அற்புதமான மாளிகைகளையும், உயர்ந்த சுவர்களைக் கொண்ட கட்டிடங்களையும் நன்கு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைச் சந்திப்புகளையும் அவர் பார்த்தார்.

வாயுவின் குமாரரான அந்த வானரர் நெருக்கம் மிகுந்த தெருக்களையும், எல்லாப் புறமும் சாலைகள் கொண்ட மையப்பகுதிகளையும், வீடுகளுக்கிடையிலான இணைப்புச் சாலைகள், சந்துகள் ஆகியவற்றையும், மேகங்கள் போல் தோற்றமளித்த பெரிய கட்டிடங்களையும் பார்த்தார்.

சாலைச் சந்திப்புகள், பொது விடுதிகள், நெடுஞ்சாலைகள் ஆகிய எல்லா இடங்களிலும், அரக்கர்கள் கூடி, முரசுகளை ஒலித்து ஹனுமானை ஒரு ஒற்றன் என்று அறிவித்தனர்.

வால் எரிந்து கொண்டிருக்கும் நிலையில் ஹனுமான் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவதைக் காண்பதற்காக, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று அனைவரும் பெரும் உற்சாகத்துடன் எல்லா இடங்களிலும் கூடினர்.

ஹனுமானின் வாலின் நுனி பற்றி எறியத் தொடங்கியதுமே, அந்தத் துயரச் செய்தியைச் சீதையிடம் சொல்ல கோரமான கண்களைக் கொண்ட பல அரக்கிகள் சீதையிடம் ஓடினர். அவர்கள் அவரிடம் கூறினர்:

"ஓ, சீதா! உன்னிடம் பேசிக் கொண்டிருந்த அந்தச் சிவப்பு முகக் குரங்கு இப்போது அதன் வால் எரிந்து கொண்டிருக்கும் நிலையில் நகரத்துக்குள் இங்குமங்கும் இழுத்துச் செல்லப்படுகிறது."

சீதைக்கு, இந்தச் செய்தி உயிர் போவதைப் போன்ற வேதனையை அளித்தது. துயரால் அழுத்தப்பட்டவராக அவர் அக்னி தேவதையை மனதில் நினைத்தார்.

அந்த அழகிய பெண்மணி தன் மனதுக்குள் அந்த வானரரின்  நலனுக்காகப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். ஆழ்ந்த பக்தியுடன் அவர் அக்னி தேவதையிடம் இவ்வாறு வேண்டிக் கொண்டார்:

"என் கணவருக்கு நான் முறையாகச் சேவை செய்திருப்பேனேயானால், எல்லா விரதங்களையும் நான் சரியாக அனுசரித்திருப்பேனேயானால், என் கணவரை மட்டுமே என் ஒரே ஆதரவாக நான் கருதி வந்திருப்பேனேயானால், நீ ஹனுமானைக் குளிர்ச்சியாக உணரச் செய்.

"என்னிடம் உனக்குச் சிறிதேனும் இரக்கம் இருக்குமானால், எனக்கு நற்பலன்கள் சிறிதேனும் மீதமிருக்குமானால், நீ ஹனுமானைக் குளிர்ச்சியாக உணரச் செய்.

"அறத்தின் உருவமான என் கணவரை அடைவதுதான் ஒரே நோக்கமாக உள்ள கற்புடைய பெண் என்று என்னை நீ கருதினால், நீ ஹனுமானைக் குளிர்ச்சியாக உணரச் செய்.

"எந்த அளவுக்கு சக்தி உள்ளவராக இருக்கிறாரோ அந்த அளவுக்கு உண்மையானவராகவும் இருக்கும் வணக்கத்துக்குரிய சுக்ரீவர் என்னை இந்தத் துயரக் கடலிலிருந்து மீட்கப் போகிறார் என்றால், நீ ஹனுமானைக் குளிர்ச்சியாக உணரச் செய்."

ஹனுமானுக்குத் தன்னால் பாதிப்பு ஏற்படாது என்பதைக் காட்டும் விதத்தில், பொதுவாகக் கொழுந்து விட்டு எரியும் அக்னிதேவதையின் ஜுவாலைகள் தீமையற்ற தன்மையை  வெளிப்படுத்தும் விதத்தில் மென்மையாக இதமாக இருந்தன.

சீதையைத் திருப்திப்படுத்துவதற்காக, ஹனுமானின் தந்தையான வாயுதேவரும் ஹனுமானின் வாலைச் சுற்றியிருந்த நெருப்பை விசிறி விட்டாலும், குளிர்ச்சியாக வீசத் தொடங்கினார்.

நெருப்பு பெரிதாக எரிந்து கொண்டிருந்தபோது, அந்த வானரர் தன் மனதுக்குள் இவ்வாறு நினைத்தார்:

'கொழுந்து விட்டு எரியும் நெருப்பு என் உடல் முழுவதையும் ஏன் சுட்டுப் பொசுக்கவில்லை? ஜுவாலைகள் நிச்சயமாகப் பெரிதாகத்தான் இருக்கின்றன ஆனால் நான் உடல் வேதனை எதையும் உணரவில்லை. வாலின் நுனியில் பனிக்கட்டி வைக்கப்பட்டது போல் உணர்கிறேன்.

'இதன் காரணம் என்ன என்பது பற்றி எந்த ஐயமும் இல்லை. கடலைத் தாண்டி வந்து கொண்டிருந்தபோது, வழியில் என்னை ஒரு மலை வரவேற்று உபசரித்தது போல், இதுவும் ராமரின் சக்தியினால் விளைந்த ஒரு அதிசயம்தான்.

'சமுத்திரராஜனும், மைனாகம் என்ற பெரிய மலையும் ராமரின் காரியத்தில் பெரும் அக்கறை கொண்டிருந்தது போல், அக்னி தேவதையும் ஏன் உதவிகரமாக இருக்கக் கூடாது?

'சீதையின் கருணையாலும், ராமரின் சக்தியாலும், அக்னி தேவதையுடன் என் தந்தை கொண்டுள்ள நட்பினாலும், அக்னி என்னை எரிக்கவில்லை.'

பிறகு அந்தச் சிறந்த வானரர் பிறகு தான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஒரு கணம் சிந்தித்தார். 

தான் ஏற்றுக்கொண்ட பணீயை முடிக்க உறுதி பூண்ட அந்த உயர்ந்த வானரர் எம்பிக் குதித்து ஒரு பயங்கரமான கர்ஜனை செய்தார். 

பிறகு வாயு தேவதையின் புகழ் பெற்ற அந்தப் புதல்வர் அரக்கர் கூட்டத்திலிருந்து விலகி, ஒரு கோபுரத்தின் உச்சியில் போய் அமர்ந்து கொண்டு, ஒரு சிகரம் போல் உயர்ந்து நின்றார்.

தன்னை முழுவுதும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருந்த ஹனுமான் ஒரு நொடியில் தான் முன்பு எடுத்துக் கொண்ட மலை போன்ற உருவத்தைக் கை விட்டு ஒரு சிறிய உருவத்தை எடுத்துக் கொண்டார். 

இதன் மூலம் தன்னைக் கட்டியிருந்த கயிறுகள் தளர்ந்து போகுமாறு செய்தார் அவர்.

எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபட்ட பின் மீண்டும் மலை போன்ற உருவத்தை எடுத்துக் கொண்டார் அவர். 

அருகிலிருந்த ஒரு நுழைவாயிலுக்கருகில் ஒரு பெரிய உலக்கை இருந்ததைக் கண்ட அந்த சக்தி வாய்ந்த வானரர், இரும்பு முனைகள் கொண்ட அந்த உலக்கையை எடுத்து அந்த நுழைவாயில் அருகில் இருந்த எல்லாக் காவலாளிகளையும் அடித்துக் கொன்றார்.

அங்கிருந்த எல்லா அரக்கர்களையும் போரில் வென்ற பிறகு, கதிர்களால் சூழப்பட்ட சூரியனின் பிரகாசத்தை அவர் வாலில் எரிந்த நெருப்பு அதிகரித்துக் காட்ட,  ஹனுமான் அங்கிருந்தபடியே இலங்கை நகரத்தை நோக்கினார்.

சர்க்கம் 54 



2 comments:

  1. ஹனுமான் வாலில் தீ வைக்கப்படுதல். ராமா! சீக்கிரமே அணைக்கவும். நன்றி

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரமே அணைந்து விடும். நன்றி.

      Delete