Tuesday, October 20, 2020

55. 52ஆவது சர்க்கம் - தூதர் கொல்லப்படுவது தடுக்கப்பட்டது

ஒருவரிடமிருந்து செய்தி கொண்டு வந்ததற்காக ஒரு தூதர் கொல்லப்பட வேண்டும் என்று ராவணன் தண்டனை விதித்ததும், அவ்வாறு செய்வது முறையற்றது என்று விபீஷணன் கருதினான்.

ஒருவரின் நடத்தை முறையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்பது பற்றி எப்போதும் உறுதியான நிலை கொண்டிருந்த விபீஷணன் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிச்சயம் என்பதையும், அரக்கர்களின் அரசன் மிகவும் கோபமான மனநிலையில் இருந்ததையும் உணர்ந்து, தான் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

தன் இனிமையான பேச்சினால் எதிரிகளையும் வெல்லும் திறமை படைத்த விபீஷணன் ஒரு வழியை முடிவு செய்த பின் தன் சகோதரனை இனிய சொற்களால் பாராட்டி விட்டு அவனுக்கு அதிகம் நன்மை பயக்கக் கூடியது எது என்பதைக் கூற ஆரம்பித்தான்:

"அரக்கர்களின் அரசனே! தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும். கோபத்தை விட்டு விட்டு நான் பணிவுடன் கூறும் வார்த்தைகளைச் சற்றுக் கேளுங்கள். அரசர்களின் பாரம்பரியத்தை அறிந்த எந்த அரசரும் ஒரு தூதனுக்கு மரண தண்டனை விதிக்க மாட்டார்கள்.

"வீரம் மிகுந்தவரே! இந்தக் குரங்குக்கு மரண தண்டனை விதிப்பது  அரசர்களுக்கு விதிக்கப்பட்ட அறக் கோட்பாடுகளுக்கு முரணானதாகும். அது உலக வழக்கத்துக்கு மாறானது. அது உங்கள் தகுதிக்கு இசைந்ததாக இருக்காது.

"நீங்கள் தர்மம் அறிந்தவர். நீங்கள் முறையாக நடந்து கொள்பவர். அரசர்கள் பின்பற்ற வேண்டிய கடமைகளை நீங்கள் நன்கு அறிந்தவர். பாரம்பரியப் பழக்கங்களையும் இந்த உலக நடைமுறைகளின் நுணுக்கங்களையும் நீங்கள் நன்றாக அறிந்தவர்.

"உங்களைப் போன்ற சிறந்த அறிவுள்ளவர்கள் கூடக் கோபத்துக்கு பலியாகும்போது, சாஸ்திர அறிவு அடியோடு பயனற்றதாக ஆகி விடுகிறது.

"எனவே, அரக்கர்களின் அரசரே! எதிரிகளை அழிப்பவராகவும், யாராலும் எதிர்க்கப்பட முடியாதவராகவும் விளங்குபவரே! தயவு செய்து சமாதானம் அடைந்து, எது முறையானது, எது முறையற்றது என்பதை உணர்ந்து, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு தூதனுக்கு ஏற்ற தண்டனையை வழங்குங்கள்."

விபீஷணனின் வார்த்தைகளைக் கேட்டதும், ராவணன் இன்னும் அதிகக் கோபம் அடைந்தான். உணர்ச்சி மேலீட்டால் அவன் தன்னையே மறந்தவனாக இவ்வாறு கூறினான்:

"எதிரிகளை அழிப்பவனே! ஒரு தீயவனுக்கு மரண தண்டனை கொடுப்பது முறையற்ற செயல் அல்ல. எனவே பல தீய செயல்களைப் புரிந்து குற்றமிழைத்துள்ள இந்தக் குரங்கை நான் கொல்லப் போகிறேன்."

அந்த வார்த்தைகள் அதர்மத்தின் அடிப்படையில் அமைந்ததவை என்றும், தீய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்றும், தகுதியற்றவர்களுக்கே பொருத்தமானவை என்றும் விபீஷணன் நினைத்தான்.

எனவே மிகுந்த அறிவுடைய அந்த உயர்ந்த விபீஷணன் உண்மை மற்றும் நியாயத்தின் அடிப்படையில் மீண்டும் இவ்வாறு கூறினான்:

"இலங்கை வேந்தரே! அரக்கர்களின் அரசரே! அமைதி அடையுங்கள். தர்மத்துக்கும் நியாயக் கோட்பாடுகளுக்கும் இசைவான என் வார்த்தைகளைக் கேளுங்கள்.

"அரசரே! எந்த நேரத்திலும், எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு தூதனைக் கொல்லக் கூடாது என்று உயர்ந்தவர்கள் கூறி இருக்கிறார்கள். 

"இந்த ஜந்து ஒரு கொடிய விரோதி என்பதில் ஐயமில்லை. இவன் பல குற்றங்களைப் புரிந்திருக்கிறான். ஒரு தூதனுக்குப் பல விதமான தண்டனைகள் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது, ஆனால் மரண தண்டனை எங்கும் அங்கீகரிக்கப்படவில்லை.

"ஏதாவது ஒரு உடல் உறுப்பைக் காயப்படுத்துதல், சாட்டையடி கொடுத்தல், தலையை மொட்டை அடித்தல், உடல் உறுப்புகளில் சூடு போடுதல் போன்ற சில தண்டனைகள்தான் தூதர்களுக்கு விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தூதனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாம் எங்கும் கேள்விப்பட்டதில்லை.

"தர்மங்களையும், சரியான வழிமுறைகளையும், எது சரி, எது தவறு என்பதையும் நன்கு அறிந்தவரான உங்களைப் போன்ற ஒருவர் கோபத்துக்கு பலியானது எப்படி? ஒருவன் நியாயத்தின்படி நடக்க வேண்டுமென்றால், அவன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

"ஓ, வீரம் மிகுந்தவரே! எல்லா தர்மங்களையும் ஆராய்ந்து படித்தவர்களில் உஙுகளுக்கு நிகரானவர் யாரும் இல்லை. உலகத்துக்கு இசைவாக நடப்பதிலும், சாஸ்திரங்களின் நுணுக்கங்களையும் அறந்தவர்களில் கூட உங்களுக்கு நிகரானவர் எவரும் இல்லை. நீங்கள் எல்லா தேவர்களையும், அசுரர்களையும் விட உயர்ந்தவர்.

"அது மட்டுமின்றி, இந்தக் குரங்கைக் கொல்வதால் எந்த நன்மையும் நடக்குமென்று நான் கருதவில்லை. இவனை இங்கு அனுப்பியவர்களுக்குத்தான் நீங்கள் மரண தண்டனை வழங்க வேண்டும்.

"இந்த வானரன் நல்லவனா, தீயவனா என்பது முக்கியமில்லை. இவன் இன்னொருவரின் கட்டுப்பாட்டில் இயங்கும், அவர்கள் சொல்லியனுப்பிய செய்தியைத் தெரிவிப்பதற்காக அனுப்பப்பட்ட ஒரு தூதன். அவ்வளவுதான். இவன் இன்னொருவர் சொன்னபடி செயல்படும் ஒரு தூதன் மட்டும்தான, அத்தகைய ஒருவனைக் கொல்வதில் பொருள் இல்லை.

"எதிரிகளின் கோட்டைகளை வெல்பவரே! இந்தக் குரங்கு கொல்லப்பட்டால், கடலைக் கடந்து இவ்வளவு தூரம் வேறு யாரால் மறுபடியும் இங்கே வர முடியும்? வானத்தில் பறந்து வரக் கூடியவர்கள் வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

"எனவே தயவு செய்து இவனைக் கொல்ல நினைக்காதீர்கள். மாறாக, இந்திரன் தலைமையிலான தேவர்களிடம் உங்கள் கவனத்தையும், வீரத்தையும் செலுத்துவது பொருத்தமாக இருக்கும், 

"போரின் உருவானவரே! இந்தக் குரங்கு இப்போது கொல்லப்பட்டு விட்டால், அந்த இளவரசர்களைப் போருக்கு வரும்படி தூண்டக் கூடியவர்கள் வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

"குரங்குகளின் தலைவனான இவன் இப்போது கொல்லப்படால், நல்ல மனிதர்கள் உங்களைப் பற்றிப் பல அவதூறான கருத்துக்களைத் தெரிவிப்பார்கள். இந்தக் குரங்கைக் கொல்வதால் உங்களுக்கு எந்த ஒரு நன்மையோ, நற்பெயரோ கிடைக்காது என்று நான் கருதுகிறேன், பலரின் விமரிசனம் மட்டும்தான் மிஞ்சும்.

"வீரமுள்ள அரக்க வேந்தே! அத்துடனின்றி, இந்தக் குரங்கை இங்கே அனுப்பிய செயல் திறனற்ற, அறிவற்ற, தீய மனிதர்களை அழிப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

"இந்திரனின் பகைவரே! இந்த தூதனைக் கொல்வதற்கு பதில் இந்தத் திசையில் உங்கள் சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதன் மூலம், நீங்கள் தர்மத்தின் கோட்பாடுகளையும், முறையான நடத்தை விதிகளையும் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் மத்தியிலும், தானவர்கள் உள்ளிட்ட தைத்யர்கள் மத்தியிலும்  நிலை நிறுத்த உதவுவீர்கள்.

"அரக்கர்களின் அரசரே! நான் சொன்ன யோசனையை ஏற்றுக்கொண்டு, அந்த இரண்டு வீர இளவரசர்களையும் அழிப்பதற்கான ஏற்பாடுகளில் உறுதியாகவும், விரைவாகவும் ஈடுபடுங்கள். உங்கள் முயற்சிகள் பெருமளவில் வெற்றி அடையட்டும்.

"அரக்கர்களின் மனங்களை மகிழச் செய்பவரே! வீரம், சக்தி, போர்க்குணம் ஆகியவற்றைப் பெற்றிருக்கும் நீங்கள், எல்லா தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்தாலும்னவர்களால் வெல்ல முடியாதவரான நீங்கள், கையில் இருக்கும் யுத்தத்துக்கான வாய்ப்பை அழித்து விடக் கூடிய தவறைச் செய்து விடாதீர்கள்.

"உங்களுக்கு எது நன்மையானதோ அதைச் செய்யத் தயாராக உள்ள, வீரமுள்ள, எப்போதும் உங்கள் நலத்தையே நாடும், நற்குடிகளில் பிறந்த, மிகுந்த உற்சாகமுள்ள, சிறப்பாகப் போர் புரியும் வல்லமைக்குப் பெயர் பெற்ற கணக்கற்ற போர் வீரர்கள் உங்களுக்குப் பின்னால் இருக்கிறார்கள்.

"எனவே, அந்த இரண்டு இளவரசர்களையும் போரில் அழிக்கவும், அதன் மூலம் எதிரிகளை உங்கள் வல்லமையால் அடக்கவும், உங்கள் படையில் உள்ள போர்த் தளபதிகளில் சிலர் உங்கள் உத்தரவை ஏற்று இப்போதே கிளம்பட்டும்."

ராட்சஸ அரசர்களில் தலையானவனும், ராட்சஸ இனத்தின் தலைவனும், தேவர்களின் எதிரியுமான சக்தி வாய்ந்த ராவணன் தன் சகோதரன் விபீஷணனின் உயர்ந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள மனதுக்குள் முடிவு செய்தான்.

அந்த அரக்க அரசன் தனக்குள் இவ்வாறு சிந்தித்தான்:
'இந்த ஜந்து என்னை அழிப்பதற்காக இங்கே குரங்கு வேடத்தில் வந்திருக்கும் விஷ்ணுவின் சக்தியாகத்தான் இருக்க வேண்டும். இதில் எந்த ஐயமும் இல்லை.

'இந்த வீரமிக்க வானரன் தேவர்களுக்கெல்லாம் தேவனான, இந்த உலகங்களுக்கெல்லாம் காரணனான எதிர்க்க முடியாத சக்தியான விஷ்ணுவின் ஒளியின் வடிவமாக இருக்க முடியுமா? அல்லது இவனே பரப்பிரம்மமாக இருப்பானோ? எனக்குப் புரியவில்லை.'

தனக்குள் இவ்வாறு சிந்தித்தவன் அதிகக் கோபம் மிகுந்தவனாக, ஆனால். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ஆயுதம் ஏந்தியவர்களில் சிறந்தவனான விபீஷணனின் யோசனையை ஏற்றுக் கொண்டு உயர்ந்த ஆத்மாவான ராவணன் இவ்வாறு கூறினான்.

சர்க்கம் 53




4 comments:

  1. உங்கள் விளக்கங்கள் மற்றும் வசனங்கள் அருமை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி. பெரும்பாலும் மொழ் பெயர்ப்புதான். சில இடங்களில் சற்று எளிமைப்படுத்த முயல்வேன். அவ்வளவுதான்.

      Delete
  2. இருப்பினும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்துக்கு மீண்டும் என் நன்றி.

      Delete