Sunday, October 4, 2020

53. 50ஆவது சர்க்கம் - பிரஹஸ்தன் ஹனுமானிடம் விசாரணை செய்தல்

உலகுக்கே ஒரு அச்சமாக விளங்கிய, சக்தி வாய்ந்த ராவணன் கோபத்தினால் கொதித்தபடி, தன் முன் நெஞ்சை நிமிர்த்தி நின்று கொண்டிருந்த அந்த வீரரின் மஞ்சள் நிறக் கண்களை உற்றுப் பார்த்தான்.

வானர வீரரான ஹனுமானின் ஒளி பொருந்திய முகத்தைப் பார்த்து, மனதுக்குள் நடுக்கத்தை உணர்ந்த ராவணன் இவ்வாறு நினைத்தான்:

"இது எப்படி? நந்திகேஸ்வரரரே இங்கே வந்திருப்பது போல் அல்லவா இருக்கிறது! முன்பு கைலாச மலையை நான் அசைத்தபோது அவர் என்னை சபித்தார். ஒருவேளை அவர்தான் இந்தக் குரங்கு வடிவில் இங்கு வந்திருக்கிறாரோ? அல்லது இவன் பாணாசுரானாக இருப்பானோ?

கோபத்தினால் கண்கள் சிவந்திருந்த அந்த அரக்க அரசன் தன் அமைச்சர் பிரஹஸ்தனைப் பார்த்து அந்த நேரத்துக்கும் சூழலுக்கும் ஏற்ற விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வார்த்தைகளைக் கூறினான்.

"இவன் எங்கிருந்து வந்திருக்கிறான்? இவனுடைய நோக்கம் என்ன? அரக்கப் பெண்களை அச்சுறுத்தியதாலும், தோட்டதை அழித்ததாலும் இவனுக்குக் கிடைக்கப் போகும் பயன் என்ன? இந்தக் கேள்விகளை இந்தத் தீயவனிடம் கேளுங்கள்.

"இவனிடம் இவற்றையும் கேளுங்கள்:
யாராலும் நுழைய முடியாத என் நகரத்துக்குள் இவன் வந்தததன் நோக்கம் என்ன? அத்தனை அரக்கர்களையும் இவன் ஏன் கொன்றான்? இந்தக் கேள்விகளையெல்லாம் இவனிடம் கேளுங்கள்."

ராவணனின் வார்த்தைகளைக் கேட்டதும், பிரஹஸ்தன் இவ்வாறு கூறினான்;
"ஓ, குரங்கே! நீ பயப்பட வேண்டாம். உனக்கு எதுவும் நேராது. ஓ, குரங்கே! இந்த நகரத்துக்கு நீ இந்திரனால் அனுப்பப்பட்டிருந்தால், அந்த உண்மையைச் சொல்லி விடு. உனக்கு எந்தத் துன்பமும் நேராது. நாங்கள் உன்னை விட்டு விடுவோம்

"அல்லது குபேரன், யமன், வருணன் இவர்களில் ஒருவனால் இந்த நகரத்துக்கு ஒற்றனாக அனுப்பப் பட்டிருக்கிறாயா? அல்லது எங்களை அடக்க ஆவல் கொண்டிருக்கும் விஷ்ணுவால் நீ அனுப்பப்பட்டிருக்கிறாயா?

"ஓ, வானரமே! உன் குரங்குத் தோற்றம் ஒரு வேஷமாகத்தான் தோன்றுகிறது. நீ வெளிப்படுத்திய சக்தியை ஒரு குரங்கிடம் காண முடியாது. உண்மையைச் சொன்னால் நீ உடனே விடுதலை செய்யப்படுவாய்.

"நீ பொய் சொன்னால். நீ உயிர் பிழைப்பது சந்தேகம்தான். எனவே ராவணனின் நாட்டுக்குள் நீ ஏன் நுழைந்தாய் என்று உண்மையைச் சொல்லி விடு."

இவ்வாறு வினவப்பட்டதும், அந்த உயர்ந்த வானரர் அரக்கர்களின் அரசரிடம் இவ்வாறு கூறினார்:

"நான் இந்திரனையோ, யமனையோ, வருணனையோ சேர்ந்தவனல்லன். குபேரனுடன் எனக்குப் பரிச்சயம் இல்லை. நான் விஷ்ணுவால் அனுப்பப்படவில்லை. இங்கே வந்திருக்கும் நான் உண்மையிலேயே ஒரு குரங்குதான். நான் அந்த இனத்தைச் சேர்ந்தவன்தான்.

"அரக்கர்களின் அரசனை நேரே சந்திக்க எனக்கு வாய்ப்புக் கிட்டாததால், உன்னைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பூந்தோட்டத்தை நான் அழித்தேன். நான் அவ்வாறு செய்ததும், சக்தி வாய்ந்த அரக்கர்கள், என்னுடன் சண்டையிட முடிவு செய்து என்னை எதிர்த்தனர். நான் அவர்களை எதிர்த்துப் போரிட வேண்டியது ஆயிற்று.

"தேவர்களாலோ, அசுரர்களலோ, என்னை எந்த ஒரு அஸ்திரத்தாலும் கட்ட முடியாது. இது பிரம்மாவிடமிருந்து நான் பெற்ற வரம். அரசனான உன்னைக் காண விரும்பியதால், பிரம்மாஸ்திரத்துக்கு நான் கட்டுப்பட்டேன். ஆனால் அரக்கர்கள் என்னைக் கயிற்றால் கட்டியதும், பிரம்மாஸ்திரத்தின் பிடியிலிருந்து நான் விடுபட்டு விட்டேன்.

"ஒரு அரசரால் எனக்கு அளிக்கப்பட்ட ஒரு பணியின் நிமித்தமாக உன்னைச் சந்திக்கவே நான் இங்கு வந்திருக்கிறேன். ரகுவம்சத்தைச் சேர்ந்த அளவற்ற சக்தி படைத்த ராமரின் தூதன் நான். இதை உண்மை என்று அறிந்து கொள். அத்துடன், ஓ, அரசனே! நான் மேலும் சொல்லப் போவதையும் கேள். அது உன்னுடைய நன்மைக்காகத்தான்.

சர்க்கம் 51




2 comments:

  1. பிரஹஸ்தன் ஹனுமானிடம் விசாரணை நன்று!

    ReplyDelete