Thursday, October 1, 2020

52. 49ஆவது சர்க்கம் - ஹனுமான் ராவணனின் சிறப்பைக் காணல்

உயர்ந்தவரான ஹனுமான் ராவணன் என்ன செய்யப் போகிறான் என்று சிந்தித்தபடி, கோபத்தால்சிவந்திருந்த தன் கண்களால் அந்த அரக்க அரசனை நேரே உற்றுப் பார்த்தார்.

தன் கண் முன் எல்லா மேன்மைகளுடன் விளங்கிய ராவணனை அவர் பார்த்தார்.

அவன் தலையில் முத்துக்கள் பதித்த விலை உயர்ந்த தங்கக் கிரீடம் அணிந்திருந்தான். வைரங்கள் மற்றும் பல்வகை நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருந்த, கற்பனையில் உருவாக்கப்பட்டவை போல் அழகுடன் மிளிர்ந்த ஏராளமான தங்க்க் கழுத்தணிகளுடன் அவன் மின்னிக் கொண்டிருந்தான்.

உயர்ந்த பட்டாடைகளை அணிந்திருந்த அவன் உடல் வாசனைத் திரவியங்கள் பூசப்பட்டும், சந்தனப் பட்டைகள் தீட்டப்பட்டும் இருந்தது. 

அவன் கண்கள் விரிந்து சிவந்திருந்தன. பல வன விலங்குகள் வாழ்ந்து வந்த மந்தர மலையின் சிகரங்கள் போல் கூர்மையான, பிரகாசமான பற்களும், தொங்கும் உதடுகளும் கொண்டவையாக அவனுடைய பத்துத் தலைகள் விளங்கின.

அவனுடைய ஒளி பொருந்திய உடல் ஒரு நீலக்கல் மலைபோல் இருந்தது.  முழு நிலவு போன்ற தோற்றம் கொண்ட பல பவளக் கழுத்தணிகள் அவன் மார்பை அலங்கரித்து ஒரு பெரிய மேகத்துக்குள் பல கொக்குகள் பறந்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை அளித்தன.

ஐந்து தலை நாகங்களைப் போல் தோற்றமளித்த அவனுடைய உருண்ட வலுவான கைகள் ஒளி மிகுந்த வளையல்களாலும் தோள் வளையங்களாலும் அலங்கரிக்கப்பட்டும், வாசனை மிகுந்த சந்தனம் பூசப்பட்டும் இருந்தன.. 

ஏராளமான விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டு, விலை உயர்ந்த கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்த படிக சிங்காதனத்தில் அவன் அமர்ந்திருந்தான், அழகிய இளம் பெண்கள் மிகுந்த கலையம்சம் மிகுந்த சாமரங்களை வீசிக் கொண்டிருந்தனர்.

பூமியை நான்கு சமுத்திரங்கள் சூழ்ந்திருப்பது போல் துர்தரன், பிரஹஸ்தன், மஹாபார்ஸ்வன் மற்றும் விவேகம் மிகுந்த நிகும்பன் என்ற அவனுடைய நான்கு அமைச்சர்களும் அவனைச் சுற்றி நின்றனர்.

அவர்கள் அனைவரும் ராஜதந்திரத்தில் நிபுணர்களாகவும், தங்கள் சக்தி பற்றிப் பெருமை கொண்டவர்களாகவும், கொள்கைகள் பற்றி முடிவுகள் எடுப்பதில் ராவணனுக்கு எப்போதும் உதவுபவர்களாகவும் இருந்தனர். 

இந்திரனைச் சுற்றிலும் தேவர்கள் இருப்பது போல், ராவணனைச் சுற்றி மற்ற அரக்க அமைச்சர்களும் - ராஜதந்திரக் கோட்பாடுகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் சிறப்பான ஆலோசனைகளைக் கூறும் வல்லமை பெற்றவர்களாகவும் இருந்த அமைச்சர்கள் - இருந்தனர்.

மேரு மலையின் உச்சியிலிருந்து இறங்கிய கருத்த மழைமேகம் போல் அவன் ராஜ கம்பீரத்துடன் பிரகாசமாக விளங்கினான்.

மற்றவர்களுக்கு அச்சமூட்டும் சக்தி கொண்ட ஹனுமான் அரக்கர்களால் கடுமையான இன்னலுக்கு ஆளாகி இருந்தாலும், அத்தனை துன்பங்களையும் பொறுத்துக்கொண்டு அரக்க அரசனின் மேன்மையை  வியப்புடன் பார்த்துக் கொண்டு நின்றார்.  

அரக்க அரசனின் பிரகாசத்தையும், வல்லமையையும் கண்ட ஹனுமான் இவ்வாறு நினைத்தார்:

"என்ன ஒருதோற்றம்! என்ன ஒரு வீரம்! என்ன ஒரு சக்தி! என்ன ஒரு பிரகாசம்! இந்த அரக்க அரசனிடம் இத்தகைய மங்கள சின்னங்கள் சேர்ந்திருப்பது உண்மையிலேயே வியப்பை அளிக்கிறது.

"இந்த சக்தி வாய்ந்த அரக்க அரசன் அதர்மமான நடத்தை இல்லாதவனாக இருந்திருப்பானேயானால், அவன் இந்திரன் உள்ளிட்ட தேவலோகத்தையே காப்பவனாக இருந்திருப்பான். 

"ஆனால் இவனுடைய கொடிய, இரக்கமற்ற சமூக விரோதச் செயல்பாடுகள், தேவர்கள், தானவர்கள் உட்பட எல்லா உலகங்களில் வசிப்பவர்களிடமும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவன் கோபம் கொண்டால், அதன் மூலம், உலகில் ஒரு பிரளயத்தையே கூட உண்டாக்க முடியும்."

தனக்குள் இத்தகைய சிந்தனைகளில் ஈடுபட்டார் ஹனுமான்.

சர்க்கம் 50


2 comments:

  1. இராவணன் சிறப்பு அருமை

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து படித்து கருத்துத் தெரிவித்து வரும் உங்களுக்கு மீண்டும் என் நன்றி.

      Delete