Saturday, September 26, 2020

51. 48ஆவது சர்க்கம் - ஹனுமான் பிரம்மாஸ்திரத்தால் கட்டப்படுதல்

அக்ஷகுமாரன் ஹனுமானால் கொல்லப்பட்டதும் அரக்க அரசன் ராவணன் ஒருவிதமாகத் தன் மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டு இந்திரனுக்கு நிகரானவான, கோபம் மிகுந்த இந்திரஜித்தை அழைத்து இவ்வாறு உத்தரவிட்டான்.

"வில்வித்தை அறிந்தவர்களில் நீ முதன்மையானவன், ஆயுதம் ஏந்துபவர்களில் நீ அதிகம் புகழ் பெற்றவன். நீ தேவர்களையும் அசுர்களையும் கலங்கச் செய்தவன். இந்திரன் உட்பட எல்லா தேவர்களுக்கு எதிராகவும் நீ உன் பலத்தை நிரூபித்திருக்கிறாய். படைப்புக் கடவுளான பிரம்மைவை ஆராதனை செய்து நீ எல்லா அஸ்திரங்களின் ரகசியத்தையும் கற்றிருக்கிறாய்.

"உன் வில்லாற்றல் முன் அசுரர்களால் நிற்க முடியாது. இந்திரனுடன் சேர்ந்த தேவர்களாலும் போரில் உன் முன்னால் நிற்க முடியாது.

"இந்த மூன்று உலகங்களிலும் போரில் களைப்படையாதவர்கள் யாரும் இல்லை, ஆனால் உன் தவத்தால் அத்தகைய எல்லா விதமான பலவீனங்களுக்கு எதிராகவும் நீ பாதுகாக்கப்பட்டிருக்கிறாய். 

"அத்துடன் இல்லாமல் உன் கைகளின் பலம்தான் உன் சிறந்த பாதுகாப்பு. காலத்துககும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ற மாறுபாடுகளை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையான நுண்ணறிவு உன்னிடம் இருக்கிறது.

"போரில் உன்னால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. உன்னால் சிந்தித்து உணர முடியாதது எதுவும் இல்லை. உன்  வில்லாற்றலையும் சக்தியையும் அறியாதவர்கள் இந்த மூன்று உலகங்களிலும் எவரும் இல்லை.

"தவ வலிமையிலும், போர்க்களத்தில் துணிவிலும், ஆயுதங்கள் பற்றிய அறிவிலும் நீ எனக்கு நிகரானவன். எந்தப் போரிலும் உனக்கு வெற்றி உறுதி. நீ எனக்கு மகனாகக் கிடைத்த பிறகு, என் மனம் எல்லாக் கவலைகளிலிருந்தும் விடுபட்டதாக இருக்கிறது.

"எல்லா கிங்கரர்களும், அரக்கன் ஜம்புமாலி, நம் அமைச்சர்களின் வீரப் புதல்வர்கள், ஐந்து மூத்த சேனைத் தலைவர்கள் ஆகியோரும் அழிக்கப்பட்டு விட்டனர். 

"காலாட்கள், குதிரைகள், யானைகள் கொண்ட பெரும் சேனைகளும் அழிக்கப்பட்டு விட்டன. உன் அன்புச் சகோதரன் இளவரசன் அக்ஷனும் கொல்லப்பட்டு விட்டான்.

"உன்னிடம் எனக்கு இருக்கும் பெரும் நம்பிக்கை அவர்களிடம் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. அறிவுள்ள புதல்வனே! அந்தக் குரங்கின் பெரும் பலம், திறமை மற்றும் துணிவு இவற்றைக் கருத்தில் கொண்டும், உன்னுடைய பலத்தைக் கருத்தில் கொண்டும், இந்தச் சூழலுக்கு எது தேவையோ அதை உன் வல்லமையைச் சிறப்பாகப் பயன்படுத்தி நீ செயல்பட வேண்டும்.

"ஓ, மிகச் சிறந்த வில்வீரனே! எதிரிகளை வெல்லும் வல்லமை பெற்றவனான நீ நம் சேனைகள் அழிந்து போவதைத் தடுக்கும் உத்திகளை மேற்கொள்ளவேண்டும். 

"உன் பலத்தையும், எதிரியின் பலத்தையும் கருத்தில் கொண்டு, இதற்குப் பிறகு என்ன செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்.

"ஓ, வீரனே! இந்த எதிரி ஒரே நேரத்தில் பலரை அழிக்கும் வல்லமை பெற்றவன். எனவே சேனையினால் பலன் இருக்காது. வஜ்ராயுதம் போன்ற ஒன்றை நம்பி அவனுடன் மோதுவதும் பயனளிக்காது. ஏனெனில் அவன் அசைவுகள் காற்றை விட வேகமானவையாக இருக்கின்றன. அவன் நெருப்பைப் போல் இருக்கிறான், மாயப்போரும் அவன் விஷயத்தில் பயனளிக்காது.

"நான் உன்னிடம் கூறியவற்றைப் பற்றி கவனமாகச் சிந்தித்த பிறகு, என்ன செய்யப் போகிறாய் என்பதைத் தன்னம்பிக்கையுடன் முடிவு செய்.

" தேவதைகளால் உனக்கு அளிக்கப்பட்டுள்ள தெய்வீக ஆயுதங்களின் சக்தி பற்றி நன்கு ஆலோசனை செய்த பிறகு உன் போரைத் துவக்கு. செய்ய வேண்டிய பணியை எந்தத் தவறும் நேராமல் செய்து முடி..

"உன் மீது எனக்கு இருக்கும் பாசத்தின் அடிப்படையில் உன்னை நான் போருக்கு அனுப்புவது பொருத்தம் இல்லைதான். ஆனால் ஒரு அரசனின் கடமைகள் மற்றும் அரச நீதியின்படி இதுதான் சரி.

"எதிரிகளை அழிப்பவனே! ஒருவன் தனக்குக் கற்பிக்கப்பட்ட கல்வியறிவு, கலைகள் இவற்றில் தனக்குள்ள திறமையைப் போரில் மிகுந்த எச்சரிக்கையுடன் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் எதிரியை அழிப்பது ஒன்றுதான் முக்கியமான குறிக்கோளாக இருக்க வேண்டும்."

தந்தையின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், ஆற்றலில் தேவர்களுக்கு நிகரானவனானவனும், எப்போதும் சக்தி குறையாதவனுமான இந்தரஜித் போருக்குச் செல்வதென்று மனதில் முடிவு செய்து, தன் தந்தையும், எஜமானருமான ராவணனைச் சுற்றி வந்தான்.

தன் துணைவர்களால் மரியாதை செய்யப்பட்டு வழியனுப்பப்பட்ட இந்தரஜித் பெரும் உற்சாகத்துடன் போருக்குக் கிளம்பினான். 

ஒளி பொருந்திவனாக விளங்கிய, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டிருந்த அரக்க அரசனின் புதல்வன் அமாவாசையன்று பொங்கும் சூரியனைப் போல் வேகத்துடன் எழுந்தான்.

தேவர்களுக்கு நிகரானவனான இந்திரஜித் ஒரே அளவு உருவமும் வேகமும் கொண்ட, கருடனைப் போல் வேகம் கொண்ட, பளிச்சென்று தெரியும் வெண்மையான நகங்கள் கொண்ட, எல்லாத் தடைகளையும் தாண்டி எங்கு வேண்டுமானலும் செல்லக் கூடிய நான்கு சிறுத்தைகள் பூட்டப்பட்ட  ஒரு தேரில் ஏறினான்.

வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவனும், ஆயதங்கள் பற்றிய கல்வியில் பயிற்சி அளிக்கப்பட்டவனும், தெய்வீக அஸ்திரங்களைப் பயன்படுத்துவதில் விற்பன்னனுமான அந்த மாபெரும் போர் வீரன் ஹனுமான் அமர்ந்திருந்த இடத்துக்கு மிகுந்த வேகத்துடன் தேரில் விரைந்தான்.

அவன் தேரின் அதிர்வொலியையும், அவன் வில்லின் நாணின் ஒலியையும் கேட்டு வீரரான ஹனுமான் உற்சாகம் அடைந்தார். 

அந்த அனுபவம் வாய்ந்த போர் வீரன் தன் வில்லுடனும், கூரிய அம்புகளுடனும் ஹனுமானை நோக்கிச் சென்றான்.

அவன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு போருக்குக் கிளம்பியபோது திசைகள் அதிர்ந்தன. கொடிய விலங்குகள் பலவிதமாக ஒலி எழுப்பின.

அந்தச் சந்தர்ப்பத்தில் நாகர்கள், யக்ஷர்கள், மகரிஷகள், சித்தர்கள், வானில் இருந்த மற்றவர்கள் ஆகியோர் பெரும் கூட்டமாக ஒன்று கூடி மேகம் போல் வானத்தை மறைத்தபடி பெரிதாகக் கூச்சலிட்டனர்.

தேரில் அமர்ந்தபடி தன்னை நோக்கி வந்த இந்திரஜித்தைப் பார்த்த ஹனுமான் பெரிதாகச் சிரித்து விட்டுப் பெரும் உற்சாகத்துடன் தன் உடலைப் பெரிதாக்கிக் கொண்டார்.

தன் தெய்வீகத் தேரில் அமர்ந்து, இயலாத சாதனைகளைப் புரியக் கூடிய அற்புதமான வில்லைத் தன் கையில் பிடித்தபடி, இடி போன்று முழங்கிய நாணேற்றும் ஒலிகளை இந்திரஜித் உருவாக்கினான்.

தேவர்களின் தலைவர் போல் விளங்கிய சக்தி வாய்ந்த வானரரும், அசுரர்களின் தலைவன் போல் விளங்கிய அரக்க இளவரசனும் போர்க்களத்தில் பயமற்றவர்களாக விளங்கி, தங்களுக்கிடையே மிகுந்த வீரியத்துடனும், கசப்புணர்வுடனும் போரிட்டனர்.

போர்களில் பெற்ற வெற்றிகளுக்காகப் புகழ் பெற்றிருந்த பெரிய, வீரம் மிகுந்த இந்திரஜித் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்த அம்புகளை ஹனுமான் வானத்தில் தாவிச் சென்றபடி தவிர்த்தார்.

எதிரிகளைத் தாக்குவதிலும், கொல்வதிலும் பெயர் பெற்றிருந்த இந்திரஜித் நீண்ட, கூரான, தங்கத்தால் இழைக்கப்பட்ட, இறகுகள் கொண்ட மின்னல் போன்ற அம்புகளை விட்டான்.

அவன் தேர் உருளும் சத்தம், மிருதங்கம், பேரி, படகம் போன்ற போரொலி எழுப்பும் இசைக்கருவிகள் ஆகியவற்றைக் கேட்டதும், ஹனுமான் மீண்டும் வானில் இன்னும் உயரமாக எழும்பினார்.

பழுப்பு நிறம் கொண்ட அந்த வானரர் ஹனுமான் இலக்குகளைத் தவற விடாமல் தாக்குவதில் வல்லவனான அந்த வில் வீரன் தன்னை நோக்கிச் செலுத்திய அம்புகளுக்கிடையே வேகமாக நகர்ந்து செல்வதன் மூலம், அவற்றைப் பலனற்றவையாகச் செய்தார்.

வாயுபுத்திரரான ஹனுமான் அவன் அம்புகளுக்கு முன் இலக்காக நின்றார், ஆனால் தன் கைகளை நீட்டி அவற்றை அடித்துத் தள்ளித் தாண்டிச் சென்றார்.

போரில் ஆற்றலும், நகர்வதில் வேகமும் கொண்ட அந்த இரு வீரர்களும் எல்லா உயிரினங்களின் கவனத்தையும் கவரும் வகையில் தங்களிடையே போர் செய்தனர். ஹனுமானின் பலவீனம் எதுவென்று அந்த அரக்கனுக்குத் தெரியவில்லை, அவனுடைய பலவீனம் எதுவென்று ஹனுமானுக்குத் தெரியவில்லை

இரண்டு தெய்வீகப் பிறவிகளின் துணிவுடன் இருவரும் மற்றவரால் தாங்கக் கடினமான வீரியத்துடன் போரிட்டனர். தன் இலக்குகளைத் தவறாமல் வீழ்த்துவதில் நம்பிக்கை கொண்டிருந்த அந்த அரக்க வீரன் தன் அம்புகள் இலக்குகளைத் தவற விட்டு முற்றிலும் வீணானவையாகத் தரையில் விழுந்ததைக் கண்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.

அந்த வானரரரைக் கொல்வது இயலாத செயல் என்பதை உணர்ந்து கொண்ட அரக்க வேந்தனின் புதல்வன் அவரை எப்படிக் கட்டுப்படுத்திப் பிடிப்பது என்று சிந்தித்தான். 

வீரத்துக்கும், தாக்கும் திறமைக்கும் பெயர் பெற்ற அந்த வில்லாற்றல் மிகுந்தவன் இப்போது அந்த வானரர் மீது பிரம்மாஸ்திரத்தைச் செலுத்தினான்.

எல்லா அஸ்திரங்களின் நுணுக்கங்களையும் அறிந்திருந்த அந்தப் பெரிய போர் வீரன் இந்திரஜித் அந்த வானரரை பிரம்மாஸ்திரத்தாலும் கொல்ல முடியாது என்பதை உணர்ந்து, அந்த தெய்வீக அஸ்திரத்தால் அவரைக் கட்டினான்.

அரக்கனின் அஸ்திரத்தால் தன் கைகளும், கால்களும் இவ்வாறு கட்டப்பட்ட ஹனுமான் அசைய முடியாதவராகித் தரையில் விழுந்தார்.

தன் வேகம் பிரம்மாவின் சக்தியால் தடுக்கப்பட்டதைக் கண்ட ஹனுமான் தான் எத்தகைய சக்தியால் கட்டப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவராக அது தமக்கு பிரம்மாவால் அளிக்கப்பட்டுள்ள வரமாக இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்தார்.

பிரம்மாவின் மந்திரத்தினால் சக்தியூட்டப்பட்டிருந்த பிரம்மாஸ்திரத்தைப் பற்றியும், அந்த அஸ்திரத்தின் கட்டு தனக்குக் குறுகிய காலத்துக்குத்தான் இருக்கும் என்று பிரம்மாவிடம் தான் பெற்ற வரத்தைப் பற்றியும் அவர் நினைத்துப் பார்த்தார்.

அவர் தனக்குள் நினைத்தார்: "இந்தக் கட்டிலிருந்து விடுவித்துக் கொள்ளும் வல்லமை எனக்கு இல்லை என்ற தவாறான புரிதலுடன் இந்த அஸ்திரம் எனக்கு எதிராக விடப்பட்டிருக்கிறது.ஆயினும் தானே உருவானவரின் அஸ்திரத்துக்கு நான் மதிப்பளிக்க வேண்டும்."

அந்த அஸ்திரத்தின் சக்தியை நன்கு உணர்ந்தும், பிரம்மாவின் வரத்தால் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் வல்லமை தனக்கு இருப்பதை உணர்ந்தும், தற்போதைக்காவது உலகைப் படைத்தவரின் சக்திக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்தார்.

அவர் தனக்குள் நினைத்தார்; "நான் அஸ்திரத்தால் கட்டுண்டிருந்தாலும், பிரம்மா, இந்திரன், வாயு ஆகியோரால் காக்கப்பட்டிருப்பதால், மனதில் எனக்கு எந்த பயமும் இல்லை.

"அரக்கர்களால் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நிலையிலும் அரக்கர்களின் அரசனைச் சந்தித்து அவனுடன் பேசும் நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைக்கும். எனவே எதிரிகள் என்னைப் பிடிக்கட்டும்."

எதிரிகளின் சக்தியைப் பயனற்றுப் போகச் செய்யும் வல்லமை பெற்றவரும், நிலைமையின் தன்மையை உணர்ந்தவரும், இனி செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிய திட்டம் கொண்டவருமான ஹனுமான் தன் உடல் உறுப்புகள் எதையும் அசைக்காமல் அப்படியே இருந்தார்.

அவரைப் பிடிக்க வந்த எதிரிகள் அவரைச் சூழ்ந்து கொண்டு பலவழிகளிலும் அவரை பயமுறுத்த முயன்றபோது, அவர் ஒன்றும் செய்ய இயலாதவர் போல் முனகிக் கொண்டு அமைதியாக இருந்தார்.

தன் எதிரிகளுக்கு அச்சமாக விளங்கிய வானரர் அப்போது அசையாமல் இருந்ததைக் கண்ட அரக்கர்கள் சணல் மற்றும் மரப்பட்டைகளால் ஆன கயிறுகளை எடுத்து வந்து அவரை இறுக்கக் கட்டினர்.

ஒரு ஆர்வத்தினாலாவது அரக்கர்களின் அரசன் தன்னைப் பார்க்க வருவான், அவனை நேரே பார்க்க தனக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்பதை நன்கு அறிந்திருந்த ஹனுமான் எதிரிகள் தன்னைக் கட்டியதையும் அவர்களுடைய அச்சுறுத்தும் செயல்களையும் அமைதியாகப் பொறுத்துக் கொண்டார்.

அந்த சக்தி மிகுந்தவர் சணல் கயிறுகளால் கட்டப்பட்ட உடனேயே அந்த அஸ்திரத்தின் தளையிலிருந்து விடுபட்டு கயிறுகளின் பிணையை மட்டுமே கொண்டிருந்தார். ஏனெனில், வேறொரு பிணை ஏற்பட்டதும் பிரம்மாஸ்திரத்தின் பிடி இல்லாமல் போய் விடும்.

கயிறுகளால் கட்டப்பட்டதும் அவர் பிரம்மாஸ்திரத்தின் பிடியிலிருந்து விடுபட்டு விட்டார் என்பதை இந்திரஜித் மட்டுமே உணர்ந்து கொண்டான். மிகவும் மனம் வருந்தியவனாக அவன் இவ்வாறு நினைத்தான்:

"வேறொரு பிணையினால் கட்டப்படும்போது பிரம்மாஸ்திரம் செயல்படாது. அந்தோ! என் பெரிய முயற்சி வீணாகி விட்டதே! மந்திரங்களின் சூட்சுமங்கள் அரக்கர்களுக்குத் தெரியவில்லை. பிரம்மாஸ்திரம் செயலிழந்து போனதும் வேறு எந்த அஸ்திரமும் பயன்படாது. அனைவரும் இப்போது மரண அபாயத்தில் இருக்கிறோம். 

ஆயினும் பிரம்மாஸ்திரத்தின் சக்தியிலிருந்து தான் விடுபட்டு விட்டோம் என்பதை ஹனுமான் அவர்களிடம் வெளிப்படுத்தவில்லை. கயிறுகளின் கட்டுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டு அரக்கர்களின் சீண்டல்களைப் பொறுத்துக் கொண்டு அவர்கள் தன்னை இழுத்துச் செல்வதை அவர் அனுமதித்தார்.

கொடூரம் கொண்ட அரக்கர்கள் நெருப்பில் காய்ச்சப்பட்ட கம்பிகளாலும், தங்கள் முஷ்டிகளாலும் அவரை அடித்து அரக்கர்களின் அரசனுக்கு முன் அவரை இழுத்துச் சென்றனர்.

ஹனுமான் பிரம்மாஸ்திரத்தின் சக்தியிலிருந்து விடுபட்டு விட்டார் என்பதையும், அவர் சணல் முதலியவற்றின் கட்டுக்களால் மட்டுமே பிணையுற்றிருந்தார் என்பதையும் இந்திரஜித் நன்கு அறிந்திருந்தான். 

ஆயினும், அவன் ஆட்கள் ஹனுமானைச் சூழ்ந்து கொண்டு அவரை  ராவணனின் முன் இழுத்துச் சென்றபோது அந்த சக்தி வாய்ந்த இளவரசன், ராவணனின் அவைக்குச் சென்றான்.

இதற்கிடையே, அரக்கர்கள் தங்களுக்குள் இவ்வாறு பேசிக் கொண்டனர்:

"யார் இந்த ஜந்து? யாருடைய ஆள் இவன்?"

"இவன் எங்கிருந்து வந்திருக்கிறான்? இவனுடைய நோக்கம் என்ன? இவனுக்குப் பின்னால் இருக்கும் சக்தி யார்?" இது போன்றெல்லாம்.

மற்ற அரக்கர்கள் சிறு கூட்டங்களாக நின்றபடி, தங்களுக்குள் கோபமாக இவ்வாறு பேசிக் கொண்டனர்:

"இவனைக் கொல்லவேண்டும். இவனைக் கொளுத்த வேண்டும். இவனைத் தின்ன வேண்டும்" என்றெல்லாம்.

தூரத்தை விரைவாகக் கடந்து ஹனுமான் அரக்கர்களின் அரசன் இருந்த இடத்தை அடைந்தார். 

நவரத்தினக் கற்களால் அபரிமிதமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த அலங்காரமான அரண்மனையில் தன் முக்கியமான அவை உறுப்பினர்களுடன் அமர்ந்திருந்த அரக்கர்களின் அரசனை அவர் பார்த்தார்.

அரக்கர்களின் சக்தி வாய்ந்த அரசனான ராவணன் அந்த வானரர் தன்னுடைய ஆட்களால் தன் முன் இழுத்து வரப்படுவதைப் பார்த்தான். 

சூரியன் போல் ஒளி விட்ட, பெரும் சக்தியும் பெருமையும் கொண்ட அந்த அரக்க அரசனை ஹனுமான் பார்த்தார்.

பத்து தலைகள் கொண்ட அந்த அரக்க அரசன் மிகுந்த கோபத்தினால் சிவந்திருந்த தன் கண்களை உருட்டி அந்த வானரத் தலைவரைப் பாரத்தான்.

 பிறகு முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த குடிப்பிறப்புக்களான தன் அமைச்சர்களிடம் அவரை விசாரிக்குமாறு கூறினான்.

அவர்கள் அவரை அவருடைய வருகையின் நோக்கம் பற்றி முறையாக விசாரித்தனர். ஹனுமான் அவர்களுக்கு இவ்வாறு பதில் கூறினார்:

"நான் வானரர்களின் அரசரால் இங்கு அனுப்பபட்ட தூதன்."

சர்க்கம் 49






2 comments:

  1. நன்று. இராவணன் சந்திப்பு க்கு காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  2. விரைவிலேயே நிகழும். நன்றி.

    ReplyDelete