அரக்கர்களின் அரசனின் கட்டளைப்படி அமைச்சர்களின் குமாரர்கள் ஏழு பேர் அரண்மனையிலிருந்து வெளிப்பட்டனர்.
அந்த சக்தி வாய்ந்த வில் வீரர்கள் நெருப்பைப் போன்று ஒளிர்ந்தனர். அவர்கள் வில் வித்தையில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கள்.
பெரிய சேனை உடன் வர, தங்க முகப்புகளும், பட்டொளி வீசிப் பறக்கும் கொடிக் கம்பங்களும், ஓடும்போது மேகங்களின் முழக்கம் போல் ஒலி எழுப்பும் வேகமான குதிரைகளையும் கொண்ட பெரிய தேர்களில் அவர்கள் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், வெற்றியைப் பற்றிய உறுதியுடனும் இருந்தனர். இடியைப் போன்ற ஒலியையும், மின்னலைப் போன்ற ஒளியையும் வெளிப்படுத்திய வில்களைக் கையில் ஏந்தியபடி அவர்கள் போர்க்களத்தை அணுகினர்.
கிங்கரர்கள் போரில் வானரரால் கொல்லப்பட்டதையும், அதே எதிரியை அவர்கள் சந்திக்கப் போவதையும் அறிந்திருந்ததால், அவர்களுடைய தாயார்களும், உறவினர்களும் மிகுந்த துயரமும் பயமும் கொண்டனர்.
முதலில் செல்வதற்காக முண்டியடித்துக் கொண்டு, ஒளி பொருந்திய தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாக, போர் செய்வதற்கான ஆயுதங்களுடன் ஹனுமான் அமர்ந்திருந்த நுழைவாயிலை அவர்கள் அணுகினர்.
அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டு சென்ற தேர்களின் இடி போன்ற ஓசையுடன் எல்லா இடங்களிலும் அம்பு மழைகளைப் பொழிந்தபடி அவர்கள் சென்றனர்.
அம்பு மழைகளால் மறைக்கப்பட்டிருந்த ஹனுமான் பெரும் மழையால் மறைக்கப்பட்டிருந்த மலையைப் போல் தோற்றமளித்தார்.
வேகமாக நகர்ந்த ஹனுமான் மேலே இருந்த மேகமற்ற ஆகாயத்துக்கு உயர்ந்து, அவர்களுடைய தேரின் வேகத்தையும், அம்புகளின் வேகத்தையும் பயனற்றதாகச் செய்தார்.
ஆகாயத்திலிருந்து கொண்டு இந்தச் சிறந்த வில் வீரர்களுடன் விளையாடுவது போன்ற செயலில் ஈடுபட்ட ஹனுமான் மேகங்களுக்கிடையே உள்ள வானவில்லினால் அலங்கரிக்கப்பட்ட வாயு பகவானைப் போல் தோற்றமளித்தார்.
வீரமுள்ள ஹனுமான் தன்னுடைய உரத்த கர்ஜனை மூலம் சேனையில் இருந்த அரக்கர்களின் மனங்களில் அதிர்வை ஏற்படுத்தினார். விரைவிலேயே அவர்களிடையே தன் சக்தியையும் வெளிப்படுத்தினார்.
எதிரிகளுக்கு அச்சமாக விளங்கும் அந்த வானர வீரர் அவர்களில் சிலரைத் தன் கையால் அடித்துக் கொன்றார், சிலரைத் தன் காலாலும், முஷ்டியாலும் நசுக்கினார், சிலரைத் தன் நகங்களால் துண்டு துண்டாகக் கிழித்தார்.
இன்னும் சிலரைத் தன் மார்பில் வைத்து அழுத்தியும், தொடைகளுக்கிடையே வைத்து அழுத்தியும் நெரித்துக் கொன்றார். இன்னும் சிலர் சிங்கம் போன்ற அவருடைய கர்ஜனையைக் கேட்டதுமே இறந்து விழுந்தனர்.
பலர் இவ்வாறு வீழ்ந்ததும், அந்தச் சேனையில் இருந்த வீரர்கள் அச்சமடைந்து பத்து திசைகளிலும் ஓடினர்.
யானைகள் பயத்தில் பிளிறின, குதிரைகள் கீழே விழுந்தன. தூள் தூளாக உடைந்த தேர்களின் முகப்புச் சட்டங்கள், கொடிக் கம்பங்கள், குடைகள் ஆகியவற்றால் தரை முழுவதும் மூடப்பட்டிருந்த்து.
அவர்களின் ரத்தம் சாலைகளில் ஆறுகளாக ஓடியது. இலங்கை முழுவதும் அலறல்களாலும், அழுகைகளாலும் நிரம்பியது.
தங்கள் சக்தியால் போதை கொண்டிருந்த அரக்கர்களை இவ்வாறு அழித்த பின், போரைப் போன்று தோற்றம் கொண்ட அந்த சக்தி வாய்ந்த வானரர் இன்னும் பல அரக்கர்களுடன் மோதலை எதிர்பார்த்தவராக மீண்டும் நுழைவாயில் கோபுரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.
சர்க்கம் 46
அனுமனின் வீரம் சொன்னது அருமை. வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி.
Delete