Friday, August 14, 2020

47. 44ஆவது சர்க்கம் - ஜம்புமாலி வதம்

அரக்கர்களின் அரசனின் ஆணப்படி, சக்தி வாய்ந்தவனும், கூர்மையான பற்களைக் கொண்டவனுமான பிரஹஸ்த புத்திரன் ஜம்புமாலி கையில் வில்லுடன் புறப்பட்டான்.

சிவப்பு நிற மாலைகளையும், சிவப்பு நிற உடைகளையும், சிறந்த காதணிகளையும் அணந்திருந்த, பெரிய உருவமும் போர் போன்ற தோற்றமும் கொண்ட ஜம்புமாலி, கோபத்தினால் கண்களை உருட்டியபடி தீப்பற்றிய திரிகூட மலையைப் போல் தோற்றமளித்தான்.

பெரிய மேகம் போன்ற தோற்றத்தையும், பெரிய கைகள், தலை, தோள்கள், பற்கள், முகம் ஆகியவற்றையும் கொண்ட அவன் மிகுந்த உற்சாகத்தை வெளிக்காட்டிக் கொண்டு மிகுந்த வேகத்துடன் வந்தான். சக்தியுடனும், உறுதியுடனும் ஒலித்த அவன் குரல் இடிமுழக்கம் போல் இருந்தது. 

அவன் கையிலிருந்த வானவில்லைப் போன்ற வில்லின் ஓசை இடி முழக்கம் போல் உரத்ததாக இருந்தது. சிறந்த அம்புகளைக் கொண்டிருந்த அவன், தன் வில்லின் நாணினால் ஒலி எழுப்பியபடியே போருக்கு அதி வேகமாக விரைந்தான். 

அவனுடைய வில் எழுப்பிய பெரும் சத்தம் விண்ணையும் எல்லாத் திசைகளையும் நிரப்பியது. செவ்வாய் கிரகத்தைப் போன்றும், உதய கால சூரியன் போலும் ஒளிர்ந்த அவன் செப்பினால் செய்யப்பட்ட கவசங்களால் பாதுகாக்கப்பட்டிருந்தான். ஹனுமானிடம் அவன் உரத்த குரலில் சவால் விட்டான்: "நில். நான் உனக்கு ஒரு பாடம் கற்பிக்கிறேன்."

குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அவன் வருவதைப் பார்த்த ஹனுமான் மனதுக்குள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அந்த உற்சாகத்தில் அவர் உரத்து கர்ஜனை செய்தார்.

சக்தி வாய்ந்த ஜம்புமாலி நுழைவாயில் கோபுரத்தின் மீது அமர்ந்திருந்த ஹனுமானைக் கூர்மையான அம்புகளால் தாக்கினான். ஹனுமானின் கைகளின் மீது அவன் பத்து அம்புகளைச் செலுத்தினான். அவற்றில் ஒன்றின் முனையில் ஒரு கத்தி பதிக்கப்பட்டிருந்தது. பிறை போன்ற அரை வட்ட வடிவில் இருந்த ஒரு அம்பை அவர் முகத்தை நோக்கிச் செலுத்தினான் அவன்.

இந்த அம்புகளால் காயப்படுத்தப்பட்டு சிவந்து போன ஹனுமானின் முகம் சூரியக் கதிர்கள் பட்டு முழுமையாக மலர்ந்த தாமரை போல் பிரகாசித்தது. ஹனுமானின் சிவந்த முகத்தில் வடிந்த ரத்தத்தினால் அவர் முகம் வானத்தில் ஒரு பெரிய தாமரைப்பூவில் சிவப்பு சந்தனம் கொட்டியது போல் இருந்தது.

இவ்வாறு அந்த அரக்கனின் அம்புகளால் தாக்கப்பட்டதும் அந்தச் சிறந்த வானரர் அப்போது ஆவேசமும் கோபமும் கொண்டவராக ஆனார். சக்தி வாய்ந்த போர் வீரரான ஹனுமான் அருகிலிருந்து ஒரு பெரிய பாறையை எடுத்து அதை அந்த அரக்கன் மீது மிகுந்த வேகத்துடன் வீசினார். 

ஆவேசம் கொண்ட அந்த அரக்கன் பத்து அம்புகளால் அந்தப் பாறையைத் தூள் தூளாக்கினான்.

அதிகத் துணிவும், மிகுந்த சக்தியும் கொண்டவரான ஹனுமான் தன் தாக்குதல் பயன்ற்றுப் போய் விட்டதைக் கண்டு, ஒரு பெரிய பனை மரத்தைப் பிடுங்கி அதைச் சுழற்றினார்.

அந்த வானரர் பனை மரத்தைச் சுழற்றுவதைக் கண்ட ஜம்புமாலி அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதை உணர்ந்து அவர் மீது அம்பு மழை பொழிந்தான். அவர் கையில் பிடித்திருந்த பனை மரத்தை நான்கு அம்புகளாலும், அவர் கைகளை ஐந்து அம்புகளாலும், அவர் உடலை ஒரு அம்பினாலும், அவர் மார்பைப் பத்து அம்புகளாலும் தாக்கினான்.

உடல் முவதிலும் காயம் ஏற்பட்டது ஹனுமானின் பெரும் கோபத்தைத் தூண்டியது. முன்பு பயன்படுத்திய உலக்கையை அவர் மீண்டும் சுழற்றினார். சக்தியில் தன்னிகரற்றவரும், கோபத்தினால் அச்சமூட்டுபவராகத் தோன்றியவருமான ஹனுமான் அந்த உலக்கையை இன்னும் அதிக விசையுடன் சுழற்றி, அதைக் கொண்டு ஜம்புமாலியின் அகன்ற மார்பைத் தாக்கினார்.

இவ்வாறு தாக்கப்பட்ட பின், ஜம்புமாலியின் தலையோ, கைகளோ, முழங்கால்களோ, வில்லோ, தேரோ, குதிரைகளோ எதுவுமே அவை இருந்த இடத்தில் இல்லை. ஏனெனில் ஹனுமான் அவனைத் தாக்கிய வேகத்தில் ஜம்புமாலி அவனுடைய எல்லா உடல் உறுப்புகளும், ஆபரணங்களும் உடைந்து சிதறி உயிரற்றவனாகக் கீழே விழுந்தான்.

ஜம்புமாலி மற்றும் சக்தி வாய்ந்த கிங்கரர்கள் ஆகியோரின் மரணத்தைப் பற்றிய செய்தியை அறிந்ததும் ராவணனின் கண்கள் பெரும் கோபத்தினால் ஏற்பட்ட உணர்ச்சியால் சிவந்தன.

பிரஹஸ்தனின் மகனான சக்தி வாய்ந்த ஜம்புமாலியின் மரணத்துக்குப் பிறகு கோபத்தினால் கண்களை உருட்டிய ராவணன் அவனுடைய மற்ற அமைச்சர்களின் சக்தி வாய்ந்த புதல்வர்களை உடனே போருக்கு அனுப்பினான்.

சர்க்கம் 45




2 comments:

  1. ஜம்பு மாலியின் வதம் சிறப்பாக சொல்லி உள்ளீர்கள்

    ReplyDelete