Sunday, August 9, 2020

46. 43ஆவது சர்க்கம் - சுக்ரீவனின் வெற்றியை அறிவித்தல்

ராவணனால் அனுப்பப்பட்டவர்களை இவ்வாறு கொன்ற பிறகு ஹனுமான் சிந்தித்தார்:

'நான் தோட்டங்களை அழித்து விட்டேன்.ஆனால் இந்த மலை மீது இருக்கும் அரண்மனையை நான் இன்னும் அழிக்கவில்லை. அந்த அழிவை இப்போது நிகழ்த்துகிறேன்.'

மனதில் இவ்வாறு முடிவு செய்தபின், வாயு குமாரரும் வானரர்களின் தலைவருமான ஹனுமான் மேரு மலையைப் போல் உயர்ந்திருந்த அரண்மனையின் உச்சியில் தன் சக்தியை வெளிப்படுத்தியபடி ஏறினார்.

மற்றவர்களால் நெருங்கக் கூட முடியாத அந்த உயர்ந்த மாளிகையைத் தாக்கியபோது, வெற்றியின் புகழில் ஹனுமான் தேவலோகத்து மலையான பாரியத்ராவைப் போல் மின்னினார். 

தன் இயல்பான சக்தியால் பிரம்மாண்டமான உருவத்தை எடுத்துக் கொண்ட அந்த வாயுகுமாரர் தன் வாலால் பெரும் சத்தத்துடன் இலங்கையே ஆடும் விதத்தில் தரையில் அடித்தார்.

ஹனுமானின் காதைத் துளைக்கும் கர்ஜனையைக் கேட்டுப் பறவைகள் அச்சத்தினால் கீழே விழுந்தன. அங்கே காவலுக்கு இருந்த காவலாளி பயமும், குழப்பமும் அடைந்தான். 

அவர் இப்போது உரத்த குரலில் கூவினார்:

" மிகச் சிறந்த வில்லாளியான ராமரும், சக்தி வாய்ந்த லக்ஷ்மணரும் புகழுடன் ஆட்சி செய்யட்டும். ராமரால் காக்கப்பட்டு அரசர் சுக்ரீவர் எல்லாப் புகழுடனும் ஆட்சி செய்யட்டும்!

"வாயுவின் குமாரனும், எதிரிகளை அழிப்பவனும், கடுமையான செயல்களைக் கூட எளிதாகச் செய்பவனுமான ஹனுமானாகிய நான் கோசல நட்டு அரசர் ராமரின் ஊழியன். நான் பெரிய பாறைகளாலும், மரங்களாலும் தாக்கும்போது ஆயிரம் ராவணர்களும் போரில் எனக்கு இணையாக மாட்டார்கள். 

"எல்லா அரக்கர்களும் கண்களைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே இலங்கையை அதன் அடித்தளத்தைப் பிடித்து ஆட்டி, மிதிலை நாட்டு இளவரசிக்கு வணக்கம் செலுத்தி விட்டு என் பணியை முடித்தவனாகத் திரும்புவேன். 

கோபுரத்தின் மீது அமர்ந்து அரக்கர்களிடம் இவ்வாறு அறைகூவல் விடுத்த ஹனுமான் இன்னொரு உரத்த கர்ஜனை செய்து அவர்கள் மனதில் அச்சத்தை உண்டாக்கினார். 

அந்த பயங்கரமான சத்தத்தைக் கேட்டதும் பெரிய உருவம் கொண்ட நூற்றுக்கணக்கன காவலர்கள் வெளியே வந்தனர். அவர்கள் வாயு குமாரரைச் சூழ்ந்து கொண்டு அவரை அம்புகளாலும் ஈட்டிகள், வாட்கள், கோடரிகள் போன்ற ஆயுதங்களாலும் தாக்கினர்.

அவர்கள் அவரைப் பல்வகையான கம்புகள், கட்டைகள், மின்னல் போன்ற தீக்கக்கும் அம்புகள் போன்றவற்றால் தாக்கினர். அந்த அரக்கர் கூட்டம் அவரை கங்கை வெள்ளம் போல் சூழ்ந்து கொண்டது. வாயுபுத்திரர் வெகுண்டு எழுந்து பயங்கரமான ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டார்.

பிறகு, வாயுவின் குமாரரான அந்த சக்தியுள்ள ஹனுமான் ஓரங்களில் தங்க வேலைப்பாடுகள் கொண்ட ஒரு பெரிய தூணைப் பிடுங்கி அதை அதிக வேகத்தில் பல முறை சுழற்றினார். அதனால் அதிலிருந்து தீக்கொழுந்துகள் உருவாகி அவை அந்த மாளிகையை எரித்தன.

அந்த மாளிகையின் மேல் தளங்கள் பற்றி எரிவதைப் பார்த்த அந்த சக்தியுள்ள வானரத் தலைவர் அந்தத் தூணை இன்னும் வேகமாகவும், பலமாகவும் சுழற்றினார். இந்திரன் தன் எதிரிகளை வஜ்ராயுதத்தால் தாக்கிக் கொன்றது போல் ஹனுமான் அந்த நூறு அரக்கர்களையும் அழித்தார்.

தன் சாதனையைப் பற்றி மனதுக்குள் திருப்தி அடைந்த அவர் அந்தரத்தில் நின்று கொண்டு இவ்வாறு கூறினார்

"என்னைப் போன்ற சக்தியும், உத்வேகமும் கொண்ட ஆயிரக் கணக்கான வானரர்களைக் கொண்ட சேனைகள் பூமி முழுவதும் தேடுவதற்காக அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

"அவர்களில் சிலர் பத்து யானை பலம் கொண்டவர்கள், மற்றவர்கள் அதை விடப் பத்து மடங்கு அதிக பலம் கொண்டவர்கள். சிலர் தங்கள் தாக்கும் வல்லமையில் ஆயிரம் யானைகளுக்குச் சமமானவர்கள்.

சிலர் வெள்ளம் போன்ற சக்தி கொண்டவர்கள், மற்றவர்கள் அதை விடப் பத்து மடங்கு அதிக சக்தி கொண்டவர்கள். சிலர் பலத்தில் கருடனுக்கு இணையானவர்கள், மற்றவர்கள் காற்றுக்கு இணையானவர்கள்.

அவர்களுக்குள் அளவிட முடியாத சக்தி கொண்ட வானரத் தலைவர்கள் இருக்கிறார்கள்.

தங்கள் பற்களையும், நகங்களையுமே முக்கிய ஆயுதங்களாகக் கொண்ட கணக்கிலடங்காத அந்த வானரர்களால் சூழப்பட்டவராக உங்கள் அனைவரின் அழிவையும் செயல்படுத்துவதற்காக எங்கள் அரசர் சுக்ரீவர் இங்கே வந்து கொண்டிருக்கிறார்.

இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த உயர்ந்த ஆத்மாவான ராமரின் மீது ஏற்படுத்திக் கொண்ட விரோதம் விரைவிலேயே இலங்கையின் அழிவிலும், ராவணன் உள்ளிட்டநீங்கள் அனைவரும் இல்லாமல் போவதிலும் முடியப் போகிறது. 



2 comments:

  1. அருமை. இராவணன் சந்திப்புக்காக காத்திருக்கிறேன். நன்றி

    ReplyDelete