Tuesday, January 15, 2019

28. 25ஆவது சர்க்கம் - சீதையின் துயரம்

கொடுமையான வார்த்தைகளைப் பேசி, அரக்கிகள் சீதையை பயமுறுத்தியபோது, மிதிலை நாட்டு இளவரசியான சீதை மனம் நொந்து கண்ணீர் வடித்தார். 

வெள்ளமாகப் பெருகிய கண்ணீரினால் தன் மார்புகளை நனைத்துக் கொண்டு, வருத்தமான சிந்தனையினால் மனம் கலங்கி, அவர் எல்லையற்ற சோகத்தில் மூழ்கினார்.
அரக்கிகளின் மிரட்டலால் நடுங்கி, முகம் வெளுத்துப் போய், புயலால் சாய்க்கப்பட்ட வாழைமரம் போல் கீழே சாய்ந்தார் சீதை. அவர் உடல் நடுங்கியபோது, ஒற்றைப் பின்னலாக இருந்த அவர் தலைமுடியும் ஒரு பாம்பு போல் ஆடியது
அரக்கிகளின் பேச்சுக்களால் இவ்வாறு நிலைகுலைந்து போயிருந்தாலும், தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்வது என்ற மன உறுதியுடன், கண்களில் நீர் மல்க கம்மிய குரலில் சீதை சொன்னார்.

"ஒரு மானிடப் பெண் ராவணனின் மனைவியாக இருப்பது முறையாகாது. நீங்கள் எல்லோரும் உங்கள் விருப்பப்படி என்னைக் கடித்துத் தின்னலாம். உங்கள் வார்த்தைகளுக்கு நான் இணங்கப் போவதில்லை."

கண்களிலிருந்து பெருகிய கண்ணீர் மார்பில் வழிந்த நிலையில், சீதை மேலும் சொன்னார்.

"மனிதர்களின் வாழ்நாள் பற்றிப் பெரியோர்கள் சொல்லியிருப்பது, அதாவது ஒருவர் அவருக்கு விதிக்கப்பட்ட நேரத்தில்தான் இறந்து போவார் என்று சொல்லியிருப்பது உண்மைதான்.இல்லாவிட்டால், இந்த அரக்கிகளின் கொடிய சொற்களால் காயப்படுத்தப்பட்டு, ராமரிடமிருந்து பிரிந்ததால் ஏற்பட்ட துயரால் பாதிக்கப்பட்டிருக்கும் நான் நான் எப்படி ஒரு கணம் கூட உயிர் வாழ முடியும்?"

ராவணனால் சிறை பிடிக்கப்பட்டு, அரக்கிகளால் இவ்வாறு அச்சுறுத்தப்பட்ட சீதைக்குத் தப்பிக்கும் வழி தெரியவில்லை. தன் கூட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, ஓநாய்களால் சூழப்பட்டு, அச்சுறுத்தப்பட்ட மான் குட்டியைப் போல் இருந்த சீதை, அந்தத் துயரைப் பொறுக்க முடியாமல் தனக்குள் சோகத்தில் மூழ்கினார்.

துயரத்தினால் மனம் உடைந்த சீதை, பூக்கள் மிகுந்த ஒரு அசோக மரத்தின் கிளையைப் பிடித்தபடி, தன் கணவனைப் பற்றி நினைக்க ஆரம்பித்தார்.

அவர் இவ்வாறு பலவிதங்களில் வருந்தினார். 

'ஓ ராமா, ஓ லக்ஷ்மணா, ஓ என் தாய் கௌசல்யா தேவி, ஓ சுமித்ரா தேவி! என்ன செய்வதென்று அறியாத இந்தப் பேதைப் பெண் புயலில் சிக்கிக்கொண்ட கப்பலைப் போல் மூழ்கிக் கொண்டிருக்கிறாள்.

'வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்படும் நதியின் கரையைப் போல், ராமரைப் பார்க்காததாலும், அரக்கிகள் காவலில் இருப்பதாலும் விளைந்த துயரத்தினால் நான் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

'தாமரை போன்ற கண்களும், சிங்கம் போன்ற நடையும் கொண்டு, எப்போதும் நன்றி உடையவராக, மற்றவர்களுக்கு இனிமையானதையும், நன்மை பயப்பதையும் பேசிக் கொண்டிருக்கும் ராமரைக் கண்ணால் கண்டு மகிழும் அதிர்ஷ்டசாலிகள் பலர் இருக்கிறார்கள்.

'உயிரைக் கொல்லும் விஷத்தைக் குடித்தவளைப் போல் நான் இருக்கும் நிலையில், ராமரிடமிருந்து பிரிக்கப்பட்ட என் உயிரைக் காப்பாற்றுவது கடினம். 
'இப்படி ஒரு துரதிர்ஷ்டமான நிலை எனக்கு நேர, நான் போன ஜென்மங்களில் என்ன பாவமெல்லாம் செய்திருக்க வேண்டுமோ! அந்தப் பாவங்களுக்காகத்தான் நான் இந்தக் கொடுமையான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் போலும்.

'அரக்கிகளின் காவலில் இருக்கும் என்னால் ராமரைப் பார்ப்பது இயலாத செயல். துயரினால் வாட்டப்பட்டிருப்பதால், நான் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புகிறேன். 
'மனித வாழ்க்கை வெறுக்கத்தக்கது, குறிப்பாக, அது மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது. ஏனெனில், அந்த நிலையில், ஒருவர் தன்  விருப்பப்படி இறந்து போகும் உரிமையைக் கூட அது அவரிடமிருந்து பறித்து விடுகிறது.'

இது போன்ற சோகமான எண்ணங்களில் ஈடுபட்டு, சீதை மிகுந்த துயரத்துக்கு ஆளானார்.
இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:




No comments:

Post a Comment