Tuesday, March 31, 2015

6. மூன்றாவது சர்க்கம் - இலங்கையின் காவல் தேவதையை வெற்றி கொள்ளுதல்

லம்பா சிகரத்தின் மீது மேகக் கூட்டங்கள் வந்து இறங்கியதைப் போல் அமைந்திருந்த, மிகப் பெரிய தோட்டங்களும், நீர்நிலைகளும் மிகுந்த, ராவணனால் பாதுகாக்கப்பட்ட இலங்கைக்குள்  இரவு நேரத்தில் நுழைய வாயு புத்திரரும், அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவருமான வானரத் தலைவர் ஹனுமான் முடிவு செய்தார்.

அந்த நகரத்தில் அமைக்கப்பட்டிருந்த வீடுகளிலிருந்து எழுந்த, கடலிலிருந்து வருவது போன்ற ஓசையினாலும், கடற்காற்று அவற்றை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருந்ததாலும், அந்த வீடுகள் மழைக்கால மேகங்கள் போல் தோற்றமளித்தன. 

அந்நகரம் குபேரப்பட்டினமான அழகாபுரி போலவே இருந்தது. நகரம் முழுவதும் போர் வீரர்கள் உற்சாகத்துடன் உலவிக் கொண்டிருந்தனர்.

இந்திரனின் தலைநகரமான அமராவதி நகரத்தில் இருந்தத்தைப் போல் வெள்ளை நிற நுழைவாயில்களைக் கொண்டிருந்தது அந்நகரம்

நகரின் உட்பகுதி முழுவதும் தங்கக் கற்கள் பதிக்கப்பட்ட உயரமான சுவர்கள் அமைக்கப் பட்டிருந்தன. பரவலாக நிறுவப்பட்டிருந்த கொடிக்கம்பங்களிலிருந்து எழுந்த மணி ஓசை நகரம் முழுவதும் பரவியிருந்தது. 

பாம்புகளின் நகரமான போகவதியைப் போல் அந்நகரம் பாதுகாக்கப்பட்டிருந்தது. விண்ணுயர எழும்பியிருந்த நகரின் கட்டிடங்களின் உச்சியில் படர்ந்திருந்த மேகங்கள் மின்னல்களினால் ஒளியூட்டப்பட்டுக் காட்சியளித்தன. 

வியப்பு நீங்காதவராக  மீண்டும் மீண்டும் அந்நகரத்தை நோக்கிய ஹனுமான் நகர எல்லையில் அமைக்கப்பட்டிருந்த சுவர்களின் மீது தாவிக் குதித்தார்.

அந்த இலங்கை நகரத்தை நெருங்கிய ஹனுமான் அதன் கதவுகள் தங்கத்தாலும், நடைமேடைகள் வைடூரியத்தாலும், அலங்காரச் சின்னங்கள் முத்துக்கள் மற்றும் பல வகை ரத்தினக் கற்களாலும் இழைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து ரசித்தார். 

அந்த நகரம் காற்றில் மிதப்பதுபோல் தோன்றியது. நகரத்தின் வெளிக்கதவுகள் தங்கம் போன்ற ஒரு உலோகத்தால் செய்யப்பட்டிருந்தன. படிகள் வைடூரியக் கற்கள் பதிக்கப்பட்ட வெள்ளியால் அமைக்கப்பட்டிருந்தன. 

நகரின் நடுவில் படிகம் போன்ற வெண்மணல் நிரப்பப்பட்ட முற்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

கிரௌஞ்சம், மயில், அன்னம் போன்ற பறவைகளின் இனிய கூவல்கள், முரசுகள் எழுப்பிய ஒலியுடனும், மக்கள் அணிந்திருந்த ஆபரணங்களின் கிண்கிணிச் சப்தத்துடனும் கலந்து ஒலித்தன. 

விண்ணளவுக்கு (இந்திர லோகம் வரை) உயர்ந்திருந்த கட்டிடங்கள் இந்திர லோகத்துக்கு அழகு கூட்டுவது போல் தோன்றின. 

வேறு எந்த நகரத்துடனும் ஒப்பிட முடியாத அளவுக்குப் பொருள் வளமும், கலை வளமும், சிறப்பும் கொண்டிருந்த இலங்கை நகரம் பற்றி ஹனுமான் இவ்வாறு சிந்தித்தார்:

"எப்போதுமே தயார் நிலையில் உள்ள போர் வீரர்களால் பாதுகாக்கப்பட்டு வரும் ராவணனின் நகரத்துக்குள் யாராலும் நுழைய முடியாது. 

"ஒருவேளை குமுதன், அங்கதன், சுஷேனன், மயிந்தன், த்விவிதன் போன்ற சில வானர வீரர்களால் முடியலாம். 

"சூரிய புத்திரரான சுக்ரீவர், குசபர்வணன், ஜாம்பவான், கேதுமாலன் போன்றோரும் நானும் கூட இதற்குள் நுழைய முடியும். 

"ஆனால் இவர்களால் எல்லாம் நகரத்துக்குள் நுழைய முடிந்தாலும், அதை வெல்ல முடியாது."

ஆயினும், ஹனுமான் உடனேயே ரகுவம்சத்தில் பிறந்த வீரர்களான ராமரையும், லட்சுமணரையும் நினைத்துப் பார்த்து நம்பிக்கை கொண்டார்.

அரக்கர்களின் நகரத்துக்குள் ஹனுமான் நுழைந்தபோது, அது  உயரமான கட்டிடங்களால் ஒளியூட்டப்பட்டு, ஒரு அழகான பெண்மணி போல் தோற்றமளித்தது. 

எங்கும் நிறைந்திருந்த நவரத்தினக் கற்கள் அந்தப் பெண்ணின் ஆடை போலவும், பசுக்கள் அடைக்கப்பட்டிருந்த தொழுவங்கள் காதணிகள் போலவும், தொழிற்சாலைகள் அவளுடைய மார்பகங்கள் போலவும் தோன்றின.

அந்த நகரத்தின் காவல் தேவதையான லங்காஸ்ரீ, வாயுபுத்திரரான ஹனுமான் நகருக்குள் நுழைவதைப் பார்த்தாள். 

ஹனுமான் முன் தனது உண்மையான உருவத்தில், கோபத்தினால் விகாரமான முகத்துடன் அவள் தோன்றினாள். 

அவரைப் பார்த்து உரத்த குரலில் கர்ஜனை செய்து விட்டு அவரிடம் பேசத் தொடங்கினாள்.

"ஏ குரங்கே! நீ எதற்காக இங்கே வந்திருக்கிறாய்? உயிர் பிழைக்க வேண்டுமானால் உண்மையைச் சொல். 

"அருவருக்கத்தக்க குரங்கே! எல்லாப்புறமும் ராவணனின் படைகளினால் சூழப்பட்டிருக்கும் இந்நகரத்துக்குள் உன்னால் ஒரு போதும் நுழைய முடியாது."

வழியை மறித்துக்கொண்டு நின்ற அவளிடம் ஹனுமான் கூறினார்: 

"நீ கேட்டதற்கு உண்மையான பதிலை நான் சொல்கிறேன். ஆனால் அதற்கு முன், நீ யார், நீ ஏன் என்னை வழிமறித்துக்கொண்டு என்னைக் கோபமாகப் பார்த்துக்கொண்டு நிற்கிறாய் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். 

"நீ உன் மிரட்டலான பேச்சினால் என்னை அச்சுறுத்தப் பார்க்கிறாய்."

பெண்ணுருவம் எடுத்து வந்த அந்த, எந்த உருவமும் எடுக்கக்கூடிய இலங்கையின் ஆத்மா, வாயுபுத்திரரான ஹனுமானைக் கோபத்துடன் பார்த்து மிரட்டும் தொனியில் பேசத் தொடங்கினாள்.

"அரக்கர்களின் அரசனான சக்தி வாய்ந்த ராவணனின் ஆணைக்கு உட்பட்டு அவரது கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக நான் இங்கே இருக்கிறேன். 

"என்னை யாராலும் வெல்ல முடியாது. இந்த நகரத்தை நான் பாதுகாத்து வருகிறேன். குரங்கே! என்னை மீறி நீ இந்த நகரத்துக்குள் நுழைய முயல்கிறாய். இந்தக் கணமே நீ கொல்லப்பட்டு மீளாத உறக்கத்தில் விழப் போகிறாய்.  

"நான் இந்த இலங்கையே பெண்ணுருவாக இருப்பவள். இந்த நகரத்தை நான் மிகவும் கவனமாகப் பாதுகாத்து வருகிறேன். நீ இதைப் புரிந்து கொள்ள வேண்டும்."

இந்த வார்த்தைகளைக் கேட்டுச் சற்றும் அஞ்சாத வாயுபுத்திரரான ஹனுமான் ஒரு மலையைப் போல் உறுதியாக நின்றார். 

தாவும் உயிர்களுக்குள் மிகச் சிறந்தவரான அந்த வானரத் தலைவர் அவளிடம் இதமான வார்த்தைகளால் பேசினார்: 

"கோபுரங்கள், நுழைவாயில்கள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் மிகுந்த இந்த இலங்கை நகரத்தைச் சுற்றிப் பார்க்க விழைகிறேன். 

"இந்த நகரத்தைக் காணும் ஆவலால் உந்தப்பட்டுதான் நான் இங்கே வந்திருக்கிறேன். இந்த நகரத்தில் உள்ள காடுகள், பயிர்கள், தோட்டங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றைக் கண்டு களிக்கத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்."

ஹனுமானின் இந்த பதிலைக் கேட்டும் கோபம் அடங்காத, பெண் உருவில் இருந்த இலங்கை சொன்னது: 

"தீய எண்ணம் கொண்ட குரங்கே!அரக்கர்களுக்குப் பணி செய்பவளான என்னை வெல்லாமல் உன்னால் இந்த நகரத்தைக் காண முடியாது."

அதற்கு ஹனுமான் சொன்னார்: "பெண்மணியே! இந்த நகரத்தைச் சுற்றிப் பார்த்த பிறகு நான் வந்த வழியாகவே போய் விடுவேன்."

இலங்கையின் ஆத்மா பெரிதாகக் குரல் எழுப்பிக்கொண்டு ஹனுமானை பலமாக அடித்தாள்.

அந்த அடியின் தாக்கத்திலிருந்து உடனே மீண்ட ஹனுமான் கோபமாக கர்ஜனை செய்தபடியே தன் இடது கை விரல்களை மடக்கி அவள் மீது ஒரு குத்து விட்டார். 

அவள் ஒரு பெண் என்பதால் அவர் தம் கோபத்தை முழுவதுமாக வெளிப்படுத்தவில்லை.

அவரது அடியின் தாக்கத்தினால் அந்த அரக்கி தனது அவயவங்கள் உடைபட்டு முகம் விகாரமாகித் தரையில் விழுந்தாள். 

கீழே விழுந்த உயிர் ஒரு பெண் என்பதால் ஹனுமான் அவள் மீது இரக்கம் கொண்டார்.

அவரை அச்சத்துடன் நோக்கிய அந்த இலங்கையின் ஆத்மா உடல் நடுங்க வாய் குழற இவ்வாறு சொன்னாள்: 

"மாவீரரே! கோபம் தணியுங்கள். வானர வீரரே! மனம் இரங்கி என்னைக் காப்பாற்றுங்கள். தர்மவான்கள் சக்தி படைத்தவர்களாக இருந்தாலும் நீதியின் வழி நடப்பார்கள். 

"சக்தி வாய்ந்த வானரரே! நான் இலங்கையின் ஆத்மா. என்னை நீங்கள் உங்கள் பலத்தால் வென்று விட்டீர்கள்.  

"வானர வீரரே! பிரம்ம தேவர் எனக்குக் வரம் கொடுத்தபோது சொன்னார், 'எப்போது உன்னை ஒரு வானரம்  தனது பலத்தால் வெற்றி கொள்கிறதோ, அப்போதே அரக்கர்களுக்குக் கெட்ட காலம் துவங்கி விட்டது' என்று. 

"உங்களுடனான எனது சந்திப்பு அந்த நேரம் வந்து விட்டதைக் காட்டுகிறது. பிரம்ம தேவர் விதித்தது நடந்துதான் தீரும். அது தவறாகப் போகாது. 

"தீய மனம் படைத்த அரக்கர்களின் தலைவனான ராவணனும், அவனைப் பின்பற்றும் அரக்கர்களும் சீதையின் பொருட்டு அழிந்து போகப் போகிறார்கள். 

"வானர வீரரே! ராவணனால் பாதுகாக்கப்பட்டு வரும் இந்த நகரத்துக்குள் நுழைந்து, நீங்கள் வந்திருக்கும் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதில் இனி எந்தத் தடையும் இல்லை. 

"வானர வீரரே! ராவணால் காக்கப்பட்டு வரும் இந்த நகரத்துக்குள் நீங்கள் புகுந்து, நீங்கள் விரும்பிய செயல்களைச் செய்யலாம். 

"செல்வச் செழிப்பு மிகுந்த, ஆனால் சாபத்துக்கு ஆளாகியிருக்கும் இந்த நகரத்துக்குள்  நீங்கள் சுதந்திரமாக உலாவி, தூய மகள் ஜானகியைத் தேடலாம்."

3ஆவது சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:

No comments:

Post a Comment