Wednesday, March 25, 2015

5. இரண்டாவது சர்க்கம் - இரவில் இலங்கைக்குள் நுழைதல்

அனாயாசமாகக் கடலைத் தாண்டி எவராலும் செய்ய முடியாத செயலைச் செய்த ஹனுமான் திரிலோக மலைச் சிகரத்தில் அமைந்திருந்த இலங்கை நகரத்தை வியப்புடன் நோக்கினார். 

தாம் சொன்னதைச் செய்து முடித்த அந்த வெற்றி வீரர் சுற்றியிருந்த மரங்களிலிருந்து தம் மீது விழுந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அந்த இலங்கை மண் மீது பிரகாசமாக ஒளிர் விட்டு நின்றார்.

நூறு யோஜனை தூரம் கடல் மீது பயணம் செய்த அலுப்பு சிறிதும் அவரிடம் இல்லை. நன்றாக மூச்சு விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளக் கூட அவர் முயலவில்லை.

"என்னால் பல நூறு யோஜனைகளைத் தாண்ட முடியும். இந்த நூறு யோஜனை எனக்கு எம்மாத்திரம்!" என்று அவர் தனக்குள் நினைத்துக் கொண்டார்.

சக்தி படைத்தவர்களில் மிகச் சிறந்தவரும், அதிவேகம் கொண்டவருமான அந்த வானர வீரர் இலங்கை நகரத்தை நோக்கி நடந்தார்.

அவர் நடந்து சென்ற சாலையின் இரு மருங்கிலும் பசுமையான புல்வெளிகளும், பாறைகள் மிகுந்த  மலர் வனங்களும் இருந்தன. மலர்களின் மணத்தைச் சுமந்து வந்த காற்று இதமாக வீசியது. 

பல உயரமான சிகரங்களைக் கொண்ட மலையின் மீது நின்ற வாயுபுத்திரர் சோலைகளும் காடுகளும் நிறைந்த இலங்கையைக் கண்ணுற்றார்.

தேவதாரு, கர்ணீகாரம், பேரீச்சை, ப்ரியாளம், முச்சுலிந்தம், குடஜம், கேடகம், ப்ரியங்கு, நீபம், சப்தசாடம் போன்ற மரங்களை அவர் அங்கே பார்த்தார். ஆசனம், கோவித்ரம், கரவீரம் போன்ற பூத்துக் குலுங்கிய மரங்களையும் அவர் பார்த்தார். 

ஏராளமான பூக்களும், இலைகளும் நிறைந்த மரக்கிளைகளில் பலவகைப் பறவைகள் கிளைகளில் அமர்ந்திருக்க, காற்றில் ஆடிக் கொண்டிருந்த பல மரங்களையும் அவர் பார்த்தார். 

அன்னப்பறவைகள், நீர்ப்பறவைகள், தாமரைகள் மற்றும், வேறு பல நீர்த்தாவரங்கள் ஆகியவற்றால் நிறைந்திருந்த பல குளங்களும் நீர்நிலைகளும் அங்கே மிகுந்து காணப்பட்டன. 

சில ஏரிகளைச் சுற்றிலும் அடர்ந்த மரங்களும், கண்ணுக்கினிய பூஞ்சோலைகளும் அமைந்திருந்தன.

ராவணனின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கைக்குள் நுழையத் தயாரானார் அந்தப் புகழ் பெற்ற வானர வீரர். 

ராவணனால் கடத்தப்பட்ட சீதை அங்கே காவலில் வைக்கப்பட்டிருந்ததால், ராவணன் உள்ளிட்ட சிறந்த வில்லாளிகளாலும், இரவும் பகலும் உலவிக்கொண்டிருந்த காவலாளிகளாலும் பாதுகாக்கப்பட்டு வந்தது அந்த இலங்கை. 

அந்த நகரம் எல்லாப்புறமும் அகழிகளால் சூழப் பட்டிருந்தது. நீலத்தாமரைகள் நிறைந்திருந்த அந்த அகழியின் சுவர்கள் தங்கத்தால் இழைக்கப் பட்டிருந்தன. 

அந்த நகரத்தில் இருந்த வீடுகள் எல்லாம் ஒவ்வொன்றும் ஒரு கிரகம் போல அற்புதமாகத் தோற்றமளித்தன. 

சாலைகள் அகலமாகவும், சுத்தமாகவும், மேட்டுப்பாங்காகவும் இருந்தன. 

வீடுகளின் நுழைவாயிலில் கொடிகள் படர்ந்திருந்தன. எதிரிகள் யாரும் உள்ளே நுழைந்தால் அவர்களை நோட்டமிட ஏதுவாக உயரமான மேடைகள் ஆங்காங்கே அமைக்கப் பட்டிருந்தன. 

எங்கு பார்த்தாலும் கொடிகளும், தோரணங்களும் தொங்கின. ஹனுமான் கண்ணுற்ற அந்த இலங்கை நகரம், எல்லா விதத்திலும் தேவலோகத்தை விஞ்சி நின்றது.

மலை உச்சியிலிருந்து பார்த்தபோது அந்த இலங்கை நகரின் பல கட்டிடங்கள் ஆகாயத்திலிருந்து தொங்கிக் கொண்டிருப்பது போல் காட்சியளித்தன.

விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டு, ராவணனால் பாதுகாக்கப்பட்டு வந்த அந்த நகரம் ஆகாயத்தில் மிதப்பது போலத் தோன்றியது. 

பாறைகளின் அடித்தளத்தில் அமைக்கப்பட்ட சுவர்கள் அந்த நகரத்தின் இடுப்புப் பகுதி போலவும், நீர் நிறைந்த அகழிகள் ஆடை போலவும், சுவர்களின் மீது பொருத்தப்பட்டிருந்த சூலங்கள், பீரங்கிகள் போன்ற ஆயுதங்கள் ரோமங்களைப் போலவும், நுழைவாயில்கள் காதணிகள் போலவும் தோற்றமளித்தன. 

விஸ்வகர்மாவால் கவனமாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட அந்நகரம் கைலாச மலையின் ஒரு சிகரம் போல் தோற்றமளித்தது. 

அடுக்கடுக்காக மேலே எழும்பியிருந்த கட்டிடங்கள் ஆகாயத்தில் பறப்பது போலத் தோற்றமளித்தன. 

பாம்புகளின் நகரமான போகவதி பாம்புகளால் நிறைந்திருந்தது போல், அந்த நகரம் பயங்கரமான தோற்றம் கொண்ட அரக்கர்களால் நிரம்பியிருந்தது.

பாம்புகள் தங்கள் இருப்பிடத்தைக் காவல் புரிவது போல், சூலங்கள், ஈட்டிகள் போன்ற ஆயுதங்களைத் தாங்கி நின்ற ராட்சஸர்கள் குபேரனால் உருவாக்கப்பட்ட அந்த நகரத்தைக் காவல் புரிந்தனர்.

கற்பனைக்கெட்டாத அளவுக்கு விரிந்திருந்த அந்த நகரத்தின் வடக்கு நுழைவாயிலை அணுகிய ஹனுமானின் மனதில் சில எண்ணங்கள் தோன்றின.

"வானரச் சேனையால் கடலைக் கடந்து இந்த இடத்தை அடைய முயன்றாலும், அதனால் பயன் இருக்காது. ஏனெனில் தேவர்களால் கூட இந்த இலங்கையைப் போரில் வெல்ல முடியாது. 

"அரக்கர் குல அரசன் ராவணனால் பாதுகாக்கப்பட்டு வரும் இலங்கைக்குள் நுழைவது மாவீரரான ராமரால் கூட இயலாது. 

"இந்த அரக்கர்களை நல்ல வார்த்தை பேசியோ, விலை உயர்ந்த பரிசுகளை அளித்தோ, நயமாகப் பேசியோ வழிக்குக் கொண்டு வர முடியாது. 

"இவர்களுடன் போர் புரிவது என்ற பேச்சுக்கே இடமில்லை. பலம் பொருந்திய வானரர்களில் கூட, வாலியின் மகன் அங்கதன், நீலன், எங்கள் அரசன் சுக்ரீவன், நான் ஆகிய நான்கு பேரால்தான் கடலைக் கடந்து இங்கே வர முடியும். 

"எப்படியிருந்தாலும், ஜனகபுத்ரியான வைதேஹி உயிருடன் இருக்கிறாரா என்பதை நான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். என்ன செய்யலாம் என்பதைப் பற்றி அப்புறம் யோசிக்கலாம்"

ராமருக்கு நன்மை செய்வதற்கே தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட அந்த வானரச் செம்மல், அந்த மலைச் சிகரத்தின் மீது நின்றபடி மேலும் யோசனை செய்தார்.

"கொடூரமான அரக்கர்களால் காவல் காக்கப்பட்டு வரும் இந்த இலங்கைக்குள் என்னால் இந்த உருவத்துடன் நுழைய முடியாது. 

"கொடூர குணம் கொண்ட, பலம் வாய்ந்த இந்த அரக்கர்கள் போரை விரும்புபவர்கள். எனவே எனக்குள்ள ஒரே வழி  இவர்களைத் தந்திரத்தினால் வெல்வதுதான். 

"யார் கண்ணுக்கும் புலப்படாத உருவத்தை எடுத்துக் கொண்டுதான் இரவு நேரத்தில் இலங்கைக்குள் புகுந்து அங்கே சீதையைத் தேட வேண்டும். நான் செய்ய வேண்டிய பெரும் பணியைத் துவக்க இதுதான் சரியான தருணம்."

இலங்கை நகரத்தை தேவர்களாலோ, அசுரர்களாலோ வெல்ல முடியாது என்று உணர்ந்த ஹனுமான் மூச்சை ஒருமுறை ஆழமாக இழுத்து விட்டு விட்டு, மீண்டும் சிந்திக்கத் தொடங்கினார்:

"தீய மனம் கொண்ட அரக்கர் தலைவன் ராவணனுக்குத் தெரியாமல் சீதையைத் தேடிக் கண்டு பிடிக்க என்ன வழியைக் கடைப்பிடிக்கலாம்? சீதை இருக்கும் இடத்தைக் கண்டறிந்து வருவதாக ராமருக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றியே ஆக வேண்டும். 

"ஆனால் எந்த ஒரு உதவியும் இல்லாமல் சீதை இருக்குமிடத்தை நான் தேடிக் கண்டு பிடிப்பது எப்படி?

"ஒரு வேலை செய்து முடிக்கக் கூடியதாக இருந்தாலும், இடம் பொருள் அறிந்து செயல் பட முடியாத மன உறுதியற்ற ஒருவன் அதில் ஈடுபட்டால், கிடைத்திருக்க வேண்டிய வெற்றி பகலவன் முன்பு கரையும் இருளைப் போல் காணாமல் போய் விடும். 

"ஒரு திட்டம் நன்கு உருவாக்கப்பட்டிருந்தாலும், தன் திறமையில் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவனால் செயல்படுத்தப்படும்போது, அத்திட்டம் வெற்றி பெறாமல் போகக் கூடும். 

"செய்யும் காரியத்தில் தோல்வி ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி? தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வது எப்படி? நான் இந்தக் கடலைக் கடந்து வந்தது வீணாகப் போகாமல் பார்த்துக் கொள்வது எப்படி? 

"என்னை அரக்கர்கள் யாராவது பார்த்து விட்டால், ராமபிரானால் ராவணனை அழிக்க முடியாமல் போய் விடும். நான் அரக்க உருவம் எடுத்துக்கொண்டால் கூட யாராவது என்னைக் கண்டு பிடித்து விடக் கூடும். 

"வேறு ஏதாவது உருவம் எடுத்துக் கொண்டால் என்னை இன்னும் சுலபமாகக் கண்டுபிடித்து விடுவார்கள். 

"வாயு பகவான் கூட இங்கே யார் கண்ணுக்கும் புலப்படாமல் உலவ முடியாது என்று தோன்றுகிறது. சக்தி வாய்ந்த இந்த அரக்கர்களின் கண்களுக்கு எதுவுமே தப்பாது. 

"நான் என் சுய உருவத்துடன்  இங்கே இருந்தால், நான் கொல்லப்படுவது நிச்சயம். என் எஜமானரின் நோக்கம் நிறைவேறாமலேயே போய் விடும். 

"அதனால் ஒரு சிறிய குரங்கின் வடிவம் எடுத்துக்கொண்டு, ராமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், இரவு நேரத்தில் இந்த நகரத்துக்குள் நுழைவேன். 

"எவராலும் உள்ளே புக முடியாத ராவணனின் நகரத்துக்குள் இரவில் நுழைந்து, ஒவ்வொரு வீடாகத் தேடி, ஜனகரின் மகளான சீதையைக் கண்டு பிடிப்பேன்."

விதேஹ நாட்டு இளவரசியைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆவலில் இவ்வாறு தன் மனதுக்குள் உறுதி செய்து கொண்ட ஹனுமான் சூரியன் மறைவதற்காகக் காத்திருந்தார். 

சூரியன் மறைந்து இருள் படரத் தொடங்கியதும் வாயுபுத்திரரான ஹனுமான் ஒரு சிறிய குரங்கின் வடிவத்தை எடுத்துக் கொண்டு, அகலமான சாலைகள் கொண்ட இலங்கைக்குள் தாவிக் குதித்துப் பிரவேசித்தார்.

பெரிய வீடுகள், தங்கத்தாலும், வெள்ளியாலும் இழைக்கப்பட்ட தூண்கள், தங்கத்தால் இழைக்கப்பட்ட ஜன்னல்கள், ஏழெட்டு தளங்கள் கொண்ட கட்டிடங்கள், கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தால் இழைக்கப்பட்ட வராந்தாக்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்த அந்த நகரம் கந்தர்வர்களின் நகரத்தை ஒத்திருந்தது. 

அரக்கர்களின் வீடுகள் வைடூரியத்தால் இழைக்கப்பட்ட நடைபாதைகளைக் கொண்டும், முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும் அற்புதமாகத் தோன்றின. 

தங்க வேலைப்பாடுகள் மிகுந்த இலங்கை மனம் கவரும் தோற்றத்தைக் கொண்டிருந்தது.

பல அடுக்குகளைக் கொண்டிருந்த கட்டிடங்கள், தங்கத்தால் வேலைப்பாடு செய்யபட்டிருந்த முற்றங்கள் ஆகியவையும் காவலுக்கு நின்ற அரக்கர்களும் பிரமிப்பூட்டும் விதமாக இருந்ததை ஹனுமான் ரசித்தார்.

அப்போது ஹனுமானுக்கு உதவி செய்யவே வந்தது போல் நட்சத்திரங்கள் சூழ வானில் எழுந்த  நிலா  தன் குளிர்ச்சியான வெளிச்சத்தால் உலகுக்கு அழகூட்டியது. 

சங்கைப் போன்றும், பாலைப் போன்றும்  வெண்மையாக இருந்த சந்திரன் வானில் உயரே எழுந்தபோது தாமரைக் குளத்தில் நீந்தும் அன்னத்தைப் போல் தோற்றமளித்தது. 

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:

No comments:

Post a Comment