Saturday, July 25, 2020

44. 41-ஆவது சர்க்கம் அசோக வனத்தை அழித்தல்

புகழ்ச்சியான வார்த்தைகளுடன் சீதையால் கிளம்புவதற்கு அனுமதிக்கப்பட்ட அந்த வானர வீரர் கிளம்பத் தயாராகி, தோட்டத்தின் இன்னொரு பகுதிக்குச் சென்று இவ்வாறு சிந்தித்தார்:

"அழகிய பெண்மணியான சீதை இருக்கும் இடத்தை நான் கண்டு பிடித்து விட்டேன். இன்னும் சில விஷயங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. மூன்று வழிமுறைகளைக் கைவிட்டு விட்டு இப்போது நான் நான்காவதைப் பின்பற்ற வேண்டி இருக்கிறது.

"நல்ல வார்த்தைகள் அரக்கர்களிடம் எடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை. செல்வம் மிகுந்தவர்களுக்குப் பரிசுகள் பயன்பட மாட்டா. சக்தி வாய்ந்த எதிரிகளுக்கிடையில் பிளவு ஏற்படுத்துதல்  அவர்களை சமாதானத்துக்கு வரவழைக்காது. 

"எனவே இந்த சந்தர்ப்பத்தில் பலத்தைப் பயன்படுத்துவது மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் பலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு எதுவும் பயனளிக்காது. ஏனெனில் இப்போது சண்டையில் பல அரக்கர்கள் இறந்தால், அரக்கர்கள் நியாயத்துக்குக் கட்டுப்பட வாய்ப்பு உள்ளது.

"கொடுக்கப்பட்ட பணியை முடிப்பதுடன், முக்கியப் பணிக்கு முரணல்லாத வேறு பல சாதனைகளையும் செய்பவன்தான் சிறந்த தூதுவன்.

இந்த உலகத்தில் ஒரு சிறிய செயலைக் கூட ஒரே விதமான வழிமுறையைப் பயன்படுத்திச் செய்ய முடியாது. எனவே ஒரு திறமையுள்ள தூதுவன் தன் நோக்கம் நிறைவேறுவதற்காகப் பல்வகை வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

"நான் இங்கே இருக்கும்போதே எதிரியின் பலத்தையும், போரில் அவன் பயன்படுத்தக் கூடிய தந்திரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். இவை பற்றித் திருப்தி செய்து கொண்ட பிறகு வானரர்களின் நகரத்துக்குத் திரும்பினால்தான் எனக்குக் கொடுக்கப்பட்ட பணியை முடித்தவனாக ஆவேன்.

"இந்த அரக்கர்களை ஒரு பயங்கரமான போருக்கு நான் எப்படி இழுப்பது? அது நடந்தால்தான் பத்து தலைகள் கொண்ட ராவணன் நன்கு பயிற்சி அளிக்கப்பட தன் படைகளை என்னுடன் போரிட அனுப்புவான். 

"அப்படி நடந்தால்தான் ராவணனை அவன் அமைச்சர்கள், ராணுவத் தலைவர்கள் ஆகியோருடன் நான் நேருக்கு நேராகச் சந்தித்து, அவர்களுடைய பலங்களையும், திட்டங்களையும் அறிந்து கொள்ள முடியும். அப்போதுதான் நான் இங்கிருந்து முழுத் திருப்தியுடன் திரும்ப முடியும்.

"தேவலோகத்தில் இருக்கும் நந்தனத் தோட்டத்துக்கு இணையான, கண்களுக்கும், மனதுக்கும் மகிழ்ச்சியூட்டும் அடர்த்தியான மரக் கூட்டங்களையும், கொடிகளையும் கொண்ட இந்த அழகான தோட்டம் இந்தப் பாவப் பிறவிக்குச் சொந்தமானது.

"வறண்ட காட்டை நெருப்பு அழிப்பது போல் இதை நான் அழிக்கப் போகிறேன். இந்தத் தோட்டம் அழிக்கப்பட்டால் பத்து தலைகள் கொண்ட ராவணன் நிச்சயம் கோபம் கொள்வான். 

"அப்போதுதான் அரக்கர்களின் அரசன் குதிரைப்படை, ரதப்படை மற்றும் யானைப்படை உள்ளிட்ட, சூலங்கள், ஈட்டிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கொண்ட ஒரு பெரிய சேனையை அனுப்புவான். அப்போது இந்தச் சண்டை ஒரு பெரிய போராகும்.

"அசைக்க முடியாத பலம் கொண்ட நான் இந்த பயங்கரமான அரக்கர்களுடன் ஒரு உக்கிரமமான போரில் ஈடுபடுவேன். இவ்வாறு ராவணனால் அனுப்பபட்ட படைகளை நான் அழித்த பிறகு, நான் மகிழ்ச்சியுடன் வானரர்களின் தலைவரிடம் திரும்பிச் செல்வேன்."

பிறகு எதிர்க்க முடியாத வல்லமை பெற்ற வாயுபுத்திரர் ஒரு சூறாவளியைப் போன்ற பயங்கரமான நிலை பெற்றவராகத் தன் தொடைகளால் அந்தத் தோட்டத்தில் இருந்த மரங்களை அடித்து வீழ்த்தத் தொடங்கினார்.

போதை கொண்ட பறவைகள் வசித்து வந்த மரங்களும் கொடிகளும் நிறைந்த அந்த அரண்மனைத் தோட்டத்தை வீரரான ஹனுமான் இவ்வாறு அழித்தார்.

கீழே விழுந்த மரங்கள், நிரம்பிய குளங்கள், சிதைந்த மேடுகள் ஆகியவற்றால் அந்தத் தோட்டம் விரைவிலேயே ஒரு ஒழுங்கற்ற தோற்றம் கொண்டதாக ஆகியது. 

பயத்தில் பறவைகள் கீச்சிட, குளங்கள் மண்ணால் நிரம்ப மென்மையான இலைகளைத் தாங்கி நின்ற மரக் கிளைகள் உடைந்தும், கீழே விழுந்தும் இருக்க, அந்தத் தோட்டம் தீயினால் எரிக்கப்பட்டு வறண்டு போன ஒரு கானகத்தைப் போன்ற அழிவுத் தோற்றத்துடன் காணப்பட்டது.

தங்களைத் தாங்கி நின்ற வேலிகள் அழிக்கப்பட்டதால் கொடிகள் பயத்தினால் நடுங்கும் பெண்களைப் போல் தோற்றமளித்தன.

கொடி மண்டபங்கள் அழிக்கப்பட்டும், மேடைகள் இடிபாடு அடைந்தும், மிருகங்களும், பாம்புகளும் நசுக்கப்பட்டும் குடில்களும், மண்டபங்களும் நொறுக்கப்பட்டும் அந்தத் தோட்ட நிலத்தில் பெரும் குழப்பம் நிலவியது.

பத்து தலைகள் கொண்ட ராவணனின் அந்தப்புரப் பெண்கள் விளையாடுவதற்காக உருவாக்கப்பட்ட, அசோகக் கொடிகள் எல்லா இடங்களிலும் மிக அழகான வடிவங்களில் படர்ந்திருந்த அந்த உல்லாச வனம், அந்த வானரரின் தாக்குதலால், சாய்ந்த கொடிகள் தங்களுக்கு நேர்ந்த கதியை நினைத்து வருந்துவது போன்ற தோற்றத்துடன் ஒரு அழிவுக் காட்சியாகத் தோற்றமளித்தது.

எல்லா இடங்களிலும் தாவிக் குதித்துக் கொண்டு அரசன் ராவணனின் கோபத்தைத் தூண்டுவதற்காக திட்டமிட்டு அழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்த அந்தச் சிறந்த வானரர் அந்த இடத்தில் இருந்த பல அரக்கர்களுடன் தனி ஒருவராகப் போரிட விருப்பம்  கொண்டு, ஜொலிக்கும் தோற்றத்துடன்  அந்தத் தோட்ட வாயிலில் நின்றார்.

2 comments:

  1. அசோக வனத்தை அழிக்கும் படலம் நன்றாக உள்ளது!

    ReplyDelete