Saturday, February 6, 2021

71. 68ஆவது சர்க்கம் - சீதைக்கு ஆறுதல் கூறியது பற்றிய விவரம்

 

ஹனுமான் தொடர்ந்து கூறினார்:
மனிதர்களுக்குள் அதிகத் துணிவானவரே! நான் கிளம்பிய சமயம், சீதாப்பிராட்டி தங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக அடுத்தபடி செய்யப்பட வேண்டியது என்ன என்பது பற்றி என்னிடம் கூறினார்.

'போரில் ராவணனை அழித்து விட்டு என்னை உடனே திரும்ப அழைத்துச் செல்வதற்கு தசரத குமாரரான ராமர் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

'எதிரிகளை அழிப்பவரே! நீ விரும்பினால் இங்கே எங்காவது தனியாக ஒரு இடத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டு நாளை கிளம்பிச் செல்லலாம்.

'ஓ, வீரனே! நீ அருகில் எங்காவது இருக்கும் வரை, என் பாவங்களின் காரணமாக எனக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய என் துயரத்திலிருந்து எனக்குச் சிறிது ஆறுதல் கிடைக்கும்.

'நீ இங்கே திரும்ப வரும் நோக்கத்துடன்தான் இங்கிருந்து கிளம்பிச் செல்கிறாய் என்றாலும், நீ இந்த இடத்திலிருந்து கிளம்பிச் சென்றதும் என் உயிரும் கிளம்பிச் சென்று விடும் என்று தோன்றுகிறது.

'ஒரு துயரத்துக்குப் பின் இன்னொரு துயரம் என்று நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். உன்னைப் பார்த்ததால் இது ஓரளவுக்குக் குறைந்திருக்கிறது. உன்னுடனான இந்தச் சந்திப்பு முடிவுக்கு வந்ததும், என் துயரம் முன்னை விடப் பன்மடங்கு அதிகரித்து விடும்.

'வானரர்களின் தலைவனே! குரங்குகளையும் கரடிகளையும் கொண்ட உன் சேனை பற்றி ஒரு விஷயம் எனக்குக் குழப்பமாக இருக்கிறது. அது பற்றி எனக்கு நீ விளக்க வேண்டும்.

'வானரர்களையும், கரடிகளையும் கொண்ட அந்தச் சேனை இந்தப் பரந்த கடலை எப்படிக் கடக்கும்? அந்த இரண்டு இளவரசர்கள் கூட எப்படி அதைக் கடப்பார்கள்?

'வான் வழியே இந்தக் கடலைக் கடக்கும் வல்லமை வாயு, கருடன், நீ ஆகிய மூவருக்கு மட்டுமே உள்ளது. ஓ, வீரனே! அனைத்திலும் நிபுணனே! இந்தக் கடினமான செயலை எப்படிச் செய்ய முடியும்? இந்தப் பிரச்னயைச் சமாளிப்பதற்கு என்ன உத்தியை நீ  சிந்தித்திருக்கிறாய்?

'எதிரிகளை அழிப்பவனே! இந்தச் செயலை முழுமையாக நிறைவேற்றக் கூடியவன் நீ ஒருவன்தான். அதனால், நீ உலக அளவில் புகழ் பெறப் போகிறாய்.

'ராமர் சேனையுடன் வந்து ரவணனைப் போரில் அழித்து அந்த வெற்றிக்குப் பின், என்னை அவருடைய நகரத்துக்கு அழைத்துச் செல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

'ராமரை நேருக்கு நேர் பார்க்க பயந்து, தந்திரமான முறையில் இந்த அரக்கன் என்னைக் காட்டிலிருந்து கடத்திச் சென்றான். ஆனால் எதிரிகளைப் போரில் வெல்லாமல் என்னை அழைத்துச் செல்வது வீரரான ராமருக்குப் பொருத்தமாக இருக்காது.

ஒரு சேனையின் தலைமையில் வந்து இலங்கையைத் தரைமட்டமாக ஆக்கிய பிறகு அவர் என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றால்தான் அது அவருடைய உயர்ந்த புகழுக்கு இசைந்ததாக இருக்கும்.

'எனவே உயர்ந்தவரான அந்தப் போர்வீரரின் வீரத்துக்குப் பொருந்தும் வகையில் நீ எல்லாவற்றையும் ஏற்பாடு செய்.'

"இந்த அர்த்தமுள்ள, அறவழியிலான, நியாயமான வார்த்தைகளைக் கேட்டதும், நான் சொல்ல வேண்டிய இன்னும் சிலவற்றை அவரிடம் கூறினேன்:

'தேவி! கரடிகள் மற்றும் குரங்குகளின் அரசரும், அந்த இனத்தவருள் மிகவும் உயர்ந்தவருமான சுக்ரீவர் வலிமை மிக்கவர். உங்கள் விஷயத்தில் அவர் ஒரு சபதம் செய்திருக்கிறார்.

'அவர் சேனையில் உள்ள வானரர்கள் மிகுந்த திறமை கொண்டவர்கள். அவர்கள் துணிவுள்ளவர்கள், வலிமை மிகுந்தவர்கள், அசைக்க முடியாத மன உறுதி கொண்டவர்கள். அவர்கள் தாங்கள் செய்யத் தீர்மானித்த செயலை எப்போதும் செய்து முடிப்பவர்கள்.

'மேலும், கீழும், பக்கவாட்டிலும் அவர்கள் செல்வதை யாராலும் தடை செய்ய முடியாது. எல்லையற்ற துணிவு கொண்ட அவர்கள் எந்தப் போரிலும் தோற்கடிக்கப்படுவதில்லை.

'காற்றில் பறந்து செல்லக் கூடிய இந்த உயர்ந்த, சக்தி வாய்ந்த வானர சேனை பலமுறை இந்த உலகத்தைச் சுற்றி வந்திருக்கிறது.

'சுக்ரீவரின் தலைமையில் உள்ள வானரர்களில் எனக்குச் சமமான மற்றும் என்னை விடத் திறமை வாய்ந்த பல வானரர்களும் இருக்கிறார்கள், ஆனல் என்னை விடக் குறைவான திறமையுள்ளவர்கள் யாரும் இல்லை.

'சாதாரண நபர்கள்தான் தூதூவர்களாக அனுப்பப்படுவார்கள். உயர்ந்தவர்கள் அனுப்பப்படுவதில்லை. எனவே, என்னாலேயே இங்கே வர முடிந்ததென்றால், என்னை விட உயர்வான என் தோழர்கள் பற்றி என்ன சந்தேகம் இருக்க முடியும்?

'எனவே, தேவி! துயரத்தினால் சோர்ந்து விடாதீர்கள். துயரத்திலிருந்து விடுபடுங்கள். இந்த வானர வீரர்களால் ஒரே தாவலில் இலங்கைக்கு வர முடியும்.

'ஓ, உயர்ந்த பெண்மணியே! சூரியனையும், சந்திரனையும் ஒத்த இரண்டு வீர இளவரசர்களும் என் தோள்களின் மீது அமர்ந்து இஙுகு உங்கள் முன் வருவார்கள்.

'எல்லா எதிரிகளையும் அழிப்பவரான சிங்கம் போன்ற அந்த வீரர் லக்ஷ்மணருடன் கூட, கையில் வில்லுடன் இலங்கையின் நுழைவாயிலில் நிற்பதை நீங்கள் விரைவிலேயே காண்பீர்கள்.

'புலிகளையும், சிங்கங்களையும் போல் அச்சமூட்டும் தோற்றமும், துணிவும் கொண்ட, யானைகளைப் போல் பிரும்மாண்டமான தோற்றம் கொண்ட, நகங்களையும், பற்களையுமே ஆயுதமாகக் கொண்ட, வீரம் மிகுந்த வானரரர்களின் கூட்டத்தை நீங்கள் விரைவிலேயே பார்ப்பீர்கள்.

'மழை கொண்ட மேகங்களின் இடி முழக்கம் போன்ற வானரர்களின் உரத்த கர்ஜனைகள் இலங்கையின் மலைச் சிகரங்களில் ஒலிப்பதை நீங்கள் விரைவிலேயே கேட்பீர்கள்.

'இந்த எதிரிகளை அழித்து, தன் வனவாச காலம் முடிந்த பின், ராமபிரான் அயோத்தியில் உங்களுடன் சேர்ந்து முடிசூட்டப்படும் மகிழ்ச்சியான அனுபவத்தை விரைவிலேயே நீங்கள் பெறுவீர்கள்.;

"இத்தகைய உறுதியான. தீவிரமான வார்த்தைகளால் என்னால் ஆறுதல் படுத்தப்பட்ட பிறகு, உங்கள் துயரத்தை நினைத்தே எப்போதும் துயரத்தில் ஆழ்ந்திருந்த மிதிலை நாட்டு இளவரசியான சீதாப்பிராட்டி, தன் துயரம் சற்றே குறைந்ததாக எண்ணிச் சிறிது ஆறுதல் அடைந்தார்.'

(சுந்தர காண்டம் நிறைவு பெற்றது)

(சுந்தர காண்டத்தை எளிய தமிழில் மொழி பெயர்க்கும் என் சிறு முயற்சி அனுமனின் அருளால் நிறைவு பெற்றது. இந்தப் பதிவைப் படித்தவர்கள், கருத்துப் பதிவிட்டு என்னை ஊக்குவித்தவர்கள், தங்கள் மனதுக்குள்ளேயே என்னை வாழ்த்தி ஊக்குவித்தவர்கள் அனைவருக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.)

ஶ்ரீராமஜயம்


சுந்தர காண்டத்தை முதலிலிருந்து படிக்க

பகவத் கீதை பொழிப்புரை

Wednesday, February 3, 2021

70. 67ஆவது சர்க்கம் - சீதை பேசியவற்றை ஹனுமான் விவரமாக எடுத்துக் கூறல்

 

உயர்ந்தவரான ராமர் இவ்வாறு கூறியதும், ஹனுமான் சீதை தெரிவித்தது அனைத்தையும் விவரமாகக் கூறினார்.

"மனிதர்களில் உயர்ந்தவரே! நீங்கள் சித்திரகூடத்தில் வசித்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியைத் தன் நினைவுகளின் அடையாளமாக ஜனகரின் புதல்வி என்னிடம் விவரித்தார்.

"ஒருநாள் சீதாப்பிராட்டி உங்களுடன் இருந்தபோது, அவர் சற்று நேரம் தூங்கி விட்டுப் பிறகு விழித்துக் கொண்டார். ஒரு காகம் அவர் மார்பில் முரட்டுத்தனமாகத் தாக்கி அவரைக் காயப்படுத்தியது.

"பரதரின் சகோதரரே! அதற்குப் பிறகு நீங்கள் தேவியின் மடியில் தலை வைத்துப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தீர்கள். அப்போது அதே பறவை அவரை மீண்டும் தாக்கிப் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.

"காகம் பலமுறை அவரைத் தாக்கிக் காயப்படுத்தியது. கீழே வழிந்த ரத்தம் உங்கள் உடலை நனைத்தது. அதன் விளைவாக நீங்கள் விழித்துக் கொண்டீர்கள்.

"விரோதிகளை அழிப்பவரே! ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நீங்கள், அந்தக் காகத்தால் தொடர்ந்து தாக்கப்பட்ட தேவியால் எழுப்பப்பட்டீர்கள்.

"வலுவான கரங்களை உடையவரே! அவர் மார்பகத்தில் காயம் ஏற்பட்டிருந்ததைப் பார்த்து நீங்கள் மிகுந்த கோபம் கொண்டு பாம்பு போல் சீறியபடி அவரைக் கேட்டீர்கள்:

'ஓ, பயந்த சுபாவமுள்ளவளே! உன் மார்பகத்தில் நகங்களால் காயப்படுத்தியது யார்? மிகுந்த கோபத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ள ஐந்து தலை நாகத்துடன் விளையாடுபவன் யார்?'

"சுற்றிலும் பார்த்தபோது, கூர்மையான ரத்தம் படிந்த நகங்களுடன் அவர் முன் நின்று கொண்டிருந்த அந்தக் காகத்தை நீங்கள் பார்த்தீர்கள். இந்திரனின் மகனும், பறவைகளின் தலைவனுமான அந்தக் காகம் காற்றைப் போன்ற வேகம் கொண்டது. எனவே அது உடனே பூமிக்கடியில் மறைந்து கொண்டது. 

"அறிவில் சிறந்தவரும் துணிவு மிக்கவருமான இளவரசே! அப்போது நீங்கள் அந்தக் காகத்தின் மீது மிகுந்த கோபம் கொண்டு அதை தண்டிப்பது என்ற சபதத்தை மேற்கொண்டீர்கள்.

"நீங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து ஒரு புல்லைப் பிடுங்கி, அதில் பிரம்மாஸ்திரத்தின் மந்திரத்தை ஏற்றி அதை அந்தக் காகத்தின் மீது செலுத்தினீர்கள். இவ்வாறு ஏவப்பட்ட அந்த மந்திரம் உலகம் அழியும் காலத்தில் எழும் நெருப்பைப் போல் ஜொலித்தது.

"எரியும் அந்த நெருப்பை  நீங்கள் அந்தக் காகத்தை நோக்கிச் செலுத்தினீர்கள். அந்த அஸ்திரம் அந்தக் காகத்தை எல்லா இடங்களிலும் துரத்திச் சென்றது.

"எல்லா உலகங்களுக்கும் வேகமாக ஓடிய அந்தக் காகத்துக்குப் பெரிய முனிவர்களிடமும், தேவர்களிடமும் புகலிடம் கிடைக்கவில்லை. அதன் தந்தையான இந்திரனால் கூடக் கைவிடப்பட்ட அது தன்னைக் காக்க  யாரும் இல்லை என்பதைக் கண்டது.

"காகுஸ்த குலத் திலகரே! எதிரிகளை அழிப்பவரே! பயத்தில் நடுங்கிக் கொண்டு அது உங்களிடம் திரும்பி வந்து, பாதுகாப்புக் கேட்டு உங்கள் காலடியில் விழுந்தது. அது கொல்லத் தகுந்தது என்றபோதும் நீங்கள் அதற்கு அடைக்கலம் அளித்தீர்கள். 

"ரகுவின் வழி வந்த இளவரசே! அந்த அஸ்திரம் வீணாகக் கூடாது என்பதால், நீங்கள் அந்த அஸ்திரத்தால் அந்தக் காகத்தின் வலது கண்ணை அழித்தீர்கள்.

"ஓ, ராமா! அந்தக் காகம் உங்களுக்கும், தசரதருக்கும் தன் வணக்கத்தைத் தெரிவித்தது. பிறகு, நீங்கள் அதைச் செல்ல அனுமதித்ததும், அது பறந்து சென்றது.

"சீதாப்பிராட்டி மேலும் கூறினார்: 'ரகு வம்சத்தில் வந்தவரான ராமர் தெய்வீக அஸ்திரங்களைப் பிரயோகிப்பவர்களில் முதன்மை பெற்றவராக இருந்தும், அவர் ஏன் அவற்றை இந்த அரக்கர்களை நோக்கிச் செலுத்தாமல் இருக்கிறார்?

'நாகர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, மருத்களோ தனியாகவோ, மொத்தமாகவோ போரில் ராமருக்கு எதிரே நிற்க முடியாது. அந்த வீரருக்கு என் மீது சிறிதளவாவது அன்பு இருக்குமானால், அவர் தன் கூரிய அம்புகளால் ராவணனை உடனடியாக அழிக்க வேண்டும்.

'எதிரிகளை அழிப்பவரும், மனிதர்களுக்குள் உயர்ந்தவரும், ரகுவம்சத்தில் வந்த ஒரு இளவரசருமான லக்ஷ்மணர் ஏன் தன் சகோதரரின் அனுமதி பெற்று என்னை மீட்கவில்லை?

'காற்றையும், நெருப்பையும் போல் சக்தி வாய்ந்தவர்களான, தேவர்களைக் கூட பிரமிக்க வைப்பவர்களுமான இந்த இரு மனிதச் சிங்கங்களும் ஏன் இவ்வாறு என்னைக் கைவிட்டு விட்டார்கள்?

'இந்த இரு திறமைசாலிகளும் என்னை மறந்து விட்டார்கள் என்பது என்னிடம் இருக்கும் ஏதோ ஒரு பெரிய குற்றத்தின் காரணமாகத்தான் இருக்க வேண்டும். இதில் எந்த ஐயமும் இல்லை.'

"பெருகி வரும் கண்ணீருக்கிடையே வெளிப்பட்ட விதேஹ நாட்டு இளவரசியின் இந்தப் பரிதாபமான வார்த்தைகளைக் கேட்டதும், அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் நான் மீண்டும் பேசினேன்.

"ஓ, தேவி! நான் கூறுவது உண்மை. உங்கள் விஷயத்தில் ஏற்பட்ட துயரத்தின் காரணமாக, ராமர் வாழ்க்கையில் அனைத்திலும் ஆர்வமற்றவராக ஆகி விட்டார். ராமர் இவ்வாறு சோகத்தில் ஆழ்ந்திருக்கும்போது, லக்ஷ்மணரும் அவர் மீது கொண்ட அன்பின் காரணமாகத் துன்புறுகிறார்.

"ஓ, உயர்ந்தவரே! நீங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ஷ்டவசமாகத்தான், துயரப்படுவதற்கான காலம் இனி இல்லை. நீங்கள் விரைவிலேயே உங்கள் துயரின் முடிவைக் காண்பீர்கள்.

"உங்களைக் காண வேண்டும் என்ற பெரும் ஆர்வத்தினால், அந்த இரண்டு வீரர்களும் விரைவிலேயே இலங்கையைச் சாம்பலாக்கப் போகிறார்கள்.

"உயர் குலத்து இளவரசியே! தன் கோபத்தினால் ராமர் விரைவிலேயே ராவணனையும் அவன் எல்லா உறவினர்களையும் போரில் கொன்று விட்டு உங்களைத் தன் நகருக்குத் திரும்ப அழைத்துச் செல்லப் போகிறார். 

"இந்த விஷயங்கள் பற்றிய உண்மையை ராமர் அறிந்து கொள்வதற்காக, அவருக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒரு அடையாளத்தை  நீங்கள் கொடுக்க வேண்டும்.

"எல்லையற்ற சக்தி கொண்ட ராமபிரானே! அந்த மாதரசி சீதை சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, இந்தச் சூடாமணியைத் தன் முடியிலிருந்து கழற்றி அதை என்னிடம் கொடுத்தார்.

"ரகு குல திலகரே! உங்கள் சார்பாக அந்த மணியை அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட பின், நான் அவரை வணங்கி விட்டு இங்கு திரும்பி வருவதற்காக விரைந்தேன்.

"கிளம்பத் தயாராக என் உடலை நான் பெரிதாக்கிக் கொண்டதைப் பார்த்ததும், இப்போது மிகவும் துயரமான நிலையில் உள்ள, உயர்ந்தவரான ஜனகரின் மகள் தேற்ற முடியாத அளவுக்கு மீண்டும் அழ ஆரம்பித்தார். கம்மிய குரலில் என்னிடம் கூறினார்:

'ஓ, ஹனுமான்! இந்த மகிழ்ச்சியான செய்தியைச் சக்திவாய்ந்த இளவரசர்கள் ராமர் மற்றும் லக்ஷ்மணருக்கும், சுக்ரீவர் மற்றும் அவருடைய அமைச்சர்களுக்கும் தெரிவித்து விடு.

'ஓ, வீரம் மிகுந்தவனே! ரகுகுல திலகரான ராமர் தானே இங்கு வந்து என்னை இந்தத் துன்பக் கடலிலிருந்து தூக்கிச் செல்வதற்கான எல்லா உதவிகளையும் நீ செய்ய வேண்டும்.

'ஓ, உயர்ந்த வானரனே! நீ ராமர் இடத்துக்குச் சென்றவுடனேயே, என் துன்பத்தின் தீவிரத்தை - இந்த அரக்கிகளால் நான் எப்படி அச்சுறுத்தப்பட்டுள்ளேன் என்பதை - அவரிடம் தெரிவிக்க வேண்டும். நீ திரும்பச் செல்லும் பயணம் உனக்குத் தடங்கல்கள் ஏதுமின்றி அமையட்டும்.'

"அரசர்களுக்கெல்லாம் அரசரே! தன் கொடிய துன்பத்தைத் தங்களிடம் மிகவும் பணிவுடன் தெரிவிக்கும்படி சீதாப்பிராட்டி என்னிடம் கூறினார். 

"சீதாப்பிராட்டி தன் கற்பை முழுவதுமாகக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிவீர்களாக. இந்த விஷயத்தில் அடுத்த நடவடிக்கையை எடுக்க வேண்டியது உங்களுக்குத் தகும்."

சர்க்கம் 68


Monday, January 25, 2021

69. 66ஆவது சர்க்கம் - சீதையின் செய்தி குறித்த கேள்விகள்

தசரதரின் புதல்வரான ராமர், லக்ஷ்மணன் உடனிருக்கையில், ஹனுமான் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டார். பிறகு அந்தச் சூடாமணியைத் தன் மார்பில் வைத்துக்கொண்டு அவர் கண்ணீர் உகுத்தார்.

அந்த அற்புதமான மணியைப் பார்த்ததும், ராமர் தன் கண்களில் நீர் வழிந்தோட மிகுந்த மனவேதனையுடன் சுக்ரீவனிடம் கூறினார்.

"ஒரு பசு தன் கன்றின் மீது இருக்கும் மிகுந்த அன்பின் காரணமாக உணர்ச்சிகரமாகச் செயல்படுவது போல், இந்த மணியைப் பார்த்ததும் என் உள்ளம் உருகுகிறது.

"இந்த உயர்ந்த மணி விதேஹ நாட்டு இளவரசிக்கு என் மாமனாரால் (அவளுடைய தந்தையால்) பரிசாக அளிக்கப்பட்டது. எங்கள் திருமணத்தின்போது அவள் இதைத் தன் தலையில் அணிந்திருந்தபோது அவள் அழகு, இப்போது பார்த்தால் தெரிவதை விடப் பல மடங்கு அதிகமாக இருந்தது.

"இந்த மணி நீரிலிருந்து தோன்றியது. பெரியோர்கள் இதைப் பற்றி மிக உயர்வாக நினைக்கிறார்கள். ஒருமுறை இது ஒரு யாகத்தில் இந்திரனால் அவன் மகிழ்ச்சியின் காரணமாக அளிக்கப்பட்டது.

"ஓ, அன்புள்ளவனே! இந்த உயர்ந்த மணியைப் பார்க்கும்போது, என் தந்தை மற்றும் தவ வாழ்க்கை வாழ்ந்த என் மாமனார் இவர்களின் முகங்களைப் பார்க்கும் அதே மனத் திருப்தி எனக்குக் கிடைக்கிறது.

"இந்த மணி மீண்டும் என் மனைவியின் தலைமுடியை அலங்கரிக்கும். இதைப் பார்க்கும்போது எனக்கு அவளையே நேரில் பார்ப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது.

"ஓ, ஹனுமான்! சீதை என்ன சொன்னாள் என்பதை மீண்டும் சொல். தாகத்தால் தவிப்பவனுக்குத் தண்ணீர் எப்படி இருக்குமோ, அவள் வார்த்தைகள் எனக்கு அப்படி இருக்கும்.

"ஓ, லக்ஷ்மணா! வைதேஹியிடமிருந்து பிரிந்திருக்கும்போது, நீரில் தோன்றிய இந்தச் சூடாமணியை என் கையில் வைத்துக் கொண்டிருப்பதை விட அதிகத் துயரளிப்பது எதுவாக இருக்கும்?

"ஓ, அருமை நண்பனே! வைதேஹி இன்னும் ஒரு மாதம் உயிர் தரித்திருப்பாளேயானால், அவள் உண்மையில் நீண்ட காலம் உயிர் வாழ்வதாகத்தான் கொள்ள வேண்டும். ஏனெனில், அவளைப் பிரிந்த நிலையில் என்னால் ஒரு கணம் கூட உயிர் வாழ முடியாது. 

"என் அருமை மனைவி இருக்கும் இடத்துக்கு என்னை இட்டுச் செல். அவள் இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட பின் நான் ஒரு கணத்தைக் கூட இங்கிருந்து கொண்டு வீணாக்க முடியாது.

"தன்னை எப்போதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கரமான அரக்கிகளின் நடுவில் இருந்து கொண்டு என் கற்புள்ள மனைவி வாழ்ந்து கொண்டிருப்பது எத்தகைய கொடுமை!

"என்னைப் பற்றிய செய்தியைக் கேட்டதும் சரத் (இலையுதிர்) காலச் சந்திரனைப் போல் மலர்ச்சி அடையத் தொடங்கி இருக்கும் அவளுடைய முகம் அவளைச் சூழ்ந்து கொண்டிருக்கும் அரக்கிகள் என்னும் மேகங்களால் மறைக்கப்பட்டு மீண்டும் மங்கலாகி இருக்கும்.

"ஓ, ஹனுமான்! சீதை உன்னிடம் என்ன கூறினாள்? எல்லாவற்றையும் என்னிடம் விவரமாகச் சொல். நோயுற்ற ஒருவன் மருந்துகள் மூலம் உயிர் தரிப்பிருப்பது போல், நான் இப்போது அவளைப் பற்றிய தகவல்களைக் கொண்டுதான் உயிர் வாழ வேண்டும்.

"கற்புள்ளவளும். அழகானவளும், இனிமையாகப் பேசுபவளும், பணிவுள்ளவளும் இப்போது என்னிடமிருந்து பிரிந்திருப்பவளுமான என் மனைவி உன் மூலம் எனக்கு என்ன செய்தி அனுப்பினாள்?

"ஓ, ஹனுமான்! எல்லாவற்றையும் எனக்கு விவரமாகச் சொல்."

சர்க்கம் 66

Friday, January 22, 2021

68. 65 ஆவது சர்க்கம் - சூடாமணியை ராமனிடம் அளித்தல்

அடர்ந்த காடுகள் மிகுந்த பிரஸ்ரவண மலைக்கு வந்த அவர்கள் ராமருக்கும், சக்தி வாய்ந்த லக்ஷ்மணருக்கும், சுக்ரீவருக்கும் வணக்கம் தெரிவித்த பின், அங்கதனை முன்னே நிற்கச் செய்து சீதையைப் பற்றிய விவங்களை விரிவாகச் சொல்ல, சுக்ரீவனின் உத்தரவுக்குக் காத்திருந்தனர்.

பிறகு சீதை ராவணனின் மாளிகையின் அந்தப்புரத்தில் சிறை வைக்கப்பட்டிருப்பதையும், அரக்கிகளால் அவர் மிரட்டப்பட்டுவதையும், ராமரிடம் அவர் பக்தியுடனும், விஸ்வாசத்துடனும் இருப்பதையும், அவர் முடிவைத் தெரிவிக்க அவருக்கு கெடு வைத்திருப்பதையும் அவர்கள் தெரிவித்தனர்.

சீதையின் கற்புக்குச் சேதம் ஏற்படவில்லை என்பதைக் கேட்டறிந்ததும், ராமர் வானரர்களிடம் கூறினார்: 

"சீதை இப்போது எங்கே வைக்கப்பட்டிருக்கிறார் என்று கூறுங்கள். என்னைப் பற்றிய அவர் மனநிலை என்ன? சீதை தொடர்பான இந்த எல்லா விவரங்களையும் என்னிடம் கூறுங்கள்."

ராமரின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், சீதையின் நிலை பற்றி நேரடியாக அறிந்திருந்த ஹனுமானை முன் வந்து விவரங்களைத் தெரிவிக்குமாறு வானரர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் வாயுவின் குமாரரும், சிறந்த பேச்சாற்றல் கொண்டவருமான ஹனுமான் சீதை இருக்கும் திசையைப் பார்த்து வணங்கி விட்டு, தான் சீதையைச் சந்தித்ததைப் பற்றிய விவரங்களைக் கூற ஆரம்பித்தார்:

"ஜனகரின் மகளான சீதையைச் சந்திப்பதற்காக, நான் கடலில் நூறு யோஜனைகளைக் கடந்து சென்றேன். தெற்கே உள்ள கடலின் கரையில் தீய மனம் கொண்ட ராவணனின் இலங்கை நகரம் இருக்கிறது.

"ஓ, ராமா! அங்கே ராவணனின் அந்தப்புரத்தில், மங்களம் வழங்கும் சீதை தூய கற்புடன் இருப்பதை நான் கண்டேன். அங்கே அவர் தன் எப்போதும் உங்களைப் பற்றிய எண்ணங்களுடனேயே இருந்து கொண்டிருக்கிறார்.

"ராவணனின் அந்தப்புரத் தோட்டத்தில் அவர் பயங்கரமான தோற்றம் கொண்ட அரக்கிகளால் சூழப்பட்டு, தொடர்ந்து மிரப்பட்டு வருவதை நான் என் கண்ணால் பார்த்தேன்.

"அந்தக் கற்புடைய பெண்மணிக்கு இத்தகைய துயரம் ஏற்படுவதற்குச் சிறிதளவும் நியாயமில்லாத நிலையில் அவர் இந்தத் துன்பங்களுக்கெல்லாம் ஆட்படுத்தப்பட்டிருக்கிறார்.

"அவர் தன் கூந்தலை ஒற்றையாக முடிந்து கொண்டிருக்கிறார். அவர் தரையில் படுத்திருக்கிறார். அவர் அரக்கிகளால் கடுமையாகப் பாதுகாக்கப்பட்டு ராவணனின் அந்தப்புரத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.

"பனிக்காலத் தாமரையைப் போன்ற தோற்றத்தில், ராவணனின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் அவர் நம்பிக்கை இழந்த நிலையில் இருக்கிறார்.

"நம்பிக்கை இழந்த அந்த நிலையில் அவர் தன் உயிரை விடக் கூடத் தீர்மானித்து விட்டார்.

"இவற்றையெல்லாம் மீறி, ஓ, காகுஸ்த குலச் செம்மலே, அவர் மனம் முழுவதும் உங்களிடம் பக்தி கொண்டு மிகுந்த வேதனையுடன், உங்களைப் பற்றிய நினைவுடனேயே இருக்கிறார்.

"இவற்றையெல்லாம் நான் மிகவும் சிரமப்பட்டுத்தான் கண்டறிந்தேன்.

"ஓ, வீரமுள்ளவராகவும், குற்றமற்றவராகவும் உள்ளவரே! இக்ஷ்வாகு குல மன்னர்களப் புகழ்ந்து பேசியதன் மூலம் என்னால் அவரிடம் நம்பிக்கையை உருவாக்க முடிந்தது.

"அதற்குப் பிறகு என்னால் அவரிடம் உரையாடி இங்குள்ள நிலவரங்கள் பற்றிய முழு விவரங்களையும் அவரிடம் தெரிவிக்க முடிந்தது. உங்களுக்கும் சுக்ரீவருக்குமிடையே ஏற்பட்டுள்ள நட்பு பற்றி அறிந்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

"உங்களிடம் அவருக்கு இருக்கும் பக்தியால், அவர் கவலைப்படுவது உங்களிடம் அவருக்கு இருக்கும் விஸ்வாசத்தை நிலைநிறுத்திக் கொள்வது பற்றி மட்டும்தான்.

"ஓ, உயர்ந்தவரே! உங்களிடம் நிலையான பக்தி மற்றும் விஸ்வாசம் என்ற இந்தத் தவத்தைச் செய்து கொண்டிருக்கும் அந்த உயர்ந்த பெண்மணியை என்னால் காண முடிந்தது.

"எல்லாம் அறிந்தவரான ரகுகுல திலகரே! நீங்கள் சித்ரகூடத்தில் இருந்தபோது ஒரு காகம் தொடர்பான ஒரு சம்பவத்தை உங்களுக்கு நினைவூட்டும்படி அவர் என்னிடம் கூறினார். 

"அவர் கூறினார்:
'வாயுகுமாரரே! நான் தெரிவித்த எல்லா விவரங்களையும் ராமரிடம் கூறுங்கள். மனத்துக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கக் கூடிய இந்தச் சூடாமணியை நான் பாதுகாத்து வருகிறேன். அதை யாரும் பார்க்காத வண்ணம் நான் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

'சுக்ரீவருடன் இருந்து கொண்டு என்னைப் பற்றிய விவரங்களை ராமர் உங்களிடமிருந்து கேட்டுக் கொண்டிருக்கும்போது, இதை நீங்கள் அவரிடம் கொடுங்கள்.'

"அவர் இதை உங்களுக்கு என் மூலம் அனுப்பி இருக்கிறார். நீங்கள் அவருக்குச் சாயப்பொட்டு வைத்த சம்பவத்தையும் அவர் உங்களுக்கு நினைவு படுத்தினார். 

"அளவற்ற பெருமை கொண்ட ராமபிரானே! மான் போன்ற கண்களும், சக்தி இழந்த உடலும் கொண்ட, ராவணனின் அந்தப்புரத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும், இன்னமும் ஒரு பத்தினிப் பெண்ணுக்கான கடமைகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்மணி, உங்களிடம் இவ்வாறு கூறுமாறு என்னிடம் தெரிவித்தார்:

'நான் மிகுந்த மனச்சோர்வு அடையும்போதெல்லாம் இந்தச் சூடாமணியைப் பார்த்து, உங்களிடமிருந்து பெறும் ஆறுதலைப் போன்ற ஆறுதலை அடைவேன். 

'இன்னும் ஒரு மாதம்தான் நான் உயிர் தரித்திருப்பேன். அதற்குப் பிறகு இந்த அரக்கிகளுக்கிடையே நான் உயிர் வாழ மாட்டேன்.'

"இவ்வாறு அவர் என்னிடம் கூறினார். ரகுகுல திலகரே! எல்லா விவரங்களையும் அப்படியே உங்களிடம் கூறி விட்டேன். கடலுக்குக் குறுக்கே ஒரு பாலம் அமைக்கப்பட நீங்கள் ஆணையிட வேண்டும் என்று நான் கருதுகிறேன்."

இரண்டு இளவரசர்களும் அமைதி அடைந்ததைக் கண்டு வாயுகுமாரர் மகிழ்ச்சி அடைந்தார். அடையாளமாகச் சீதையால் கொடுக்கப்பட்ட சூடாமணியை ராமரின் கையில் கொடுத்து விட்டு, நடந்தவை அனைத்தையும் முதலிலிருந்து இறுதி வரை அவரிடம் கூறினார் ஹனுமான்.

சர்க்கம் 66

 

Sunday, January 17, 2021

67. 64 ஆவது சர்க்கம் - ஹனுமானும் மற்றவர்களும் திரும்பி வருதல்

சுக்ரீவனின் வார்த்தைகளைக் கேட்டதும் ததிமுகன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். 

ரகுவம்சத்தைச் சேர்ந்த மேன்மையுடைய இளவரசர்களான ராமர், லக்ஷ்மணர் ஆகியோரையும் சுக்ரீவனையும் வணங்கி விட்டு அவன் தன் ஆட்களுடன் ஆகாய வழியாகவே மதுவனத்துக்குத் திரும்பிச் சென்றான்.

சென்ற அதே வேகத்தில் திரும்பி வந்த அவன் ஆகாயத்திலிருந்து தரையில் இறங்கினான். 

மதுவனத்தை அடைந்ததும் அந்த வானர வீரர்கள் அனைவரும் தேன் குடித்த போதை தெளிந்து தாங்கள் குடித்தவற்றைச் சிறுநீராக வெளியேற்றிக் கொண்டிருந்ததைக் கண்டான்.

மதுவனத்தின் பாதுகாவலனான அந்த ததிமுகன் அவர்களிடம் சென்று அங்கதனுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு இவ்வாறு கூறினான்: 

"இனிய குணம் கொண்ட இளவரசரே! அறியாமையாலும், கோபத்தாலும் எங்கள் தோட்டக் காவலர்கள் உங்களைத் தடுக்க முயன்றனர். அவர்களுடைய விவேகமற்ற செயல் குறித்து தயவு செய்து அவர்களிடம் கோபம் கொள்ளாதீர்கள்,

"சக்தி மிகுந்தவரே! நீங்கள் இளவரசர், மற்றும் இந்தக் காட்டின் அதிபதி. முட்டாள்தனத்தினால் நாங்கள் உங்களிடம் தவறாக நடந்து கொண்டு விட்டோம். அதற்காக எங்களை மன்னித்து விடுங்கள்.

"குற்றமற்றவரே! உங்கள் சிறிய தந்தையிடம் வானர வீரர்களான நீங்கள் திரும்பி வந்தது பற்றி நான் கூறி விட்டேன். இந்த வானர வீரர்கள் அனைவருடன் நீங்கள் திரும்பி வந்ததை அறிந்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். எனவே இந்த மதுவனம் அழிக்கப்பட்டது பற்றி அவரிடம் சிறிது கூடக் கோபமில்லை.

"வானரர்களின் அரசரும் உங்கள் சிறிய தந்தையுமான சுக்ரீவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தவராக சற்றும் தாமதிக்காமல் உங்கள் அனைவரையும்  திருப்பி அனுப்பும்படி எனக்கு உத்தரவிட்டிருக்கிறார்."

உத்தரவுகளின் உண்மையான பொருளைப் புரிந்து கொள்வதில் நிபுணனான அங்கதன், ததிமுகனின் இனிய சொற்களக் கேட்டதும் தன் தோழர்களிடம் கூறினான்:

"ஓ, வானரத் தலைவர்களே! நாம் திரும்பி வந்த செய்தி ராமரைச் சென்றடைந்து விட்டது என்று அறிகிறேன். வெற்றிகரமான போர் வீரர்களே! வேறு இடங்களில் இனியும் நாம் நேரத்தை வீணாக்கி, தேவையற்ற கேளிக்கைகளில் ஈடுபட்டு தாமதம் ஏற்படுத்துவது முறையல்ல.

"ஓ, வானரர்களே! நீங்கள் திருப்தியடையும் அளவுக்குத் தேன் குடித்து விட்டீர்கள். போதுமான அளவு ஓய்வும் எடுத்துக் கொண்டு விட்டீர்கள். இனி நாம் மேலும் தாமதிக்காமல் நம் எஜமானரான சுக்ரீவரின் இருப்பிடத்துக்குச் செல்லலாம்.

"ஓ, வானர வீரர்களே! நான் உங்கள் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன். நீங்கள் கூடிப் பேசி விட்டு என்னிடம் என்ன சொல்கிறீர்களோ, அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். 

"ஒரு வெற்றிகரமான பணியை முடித்து விட்டு வந்திருக்கும் உங்களுக்கு நான் உத்தரவிடுவது முறையாக இருக்காது. எனவே, நான் இளவரசனாக இருந்தாலும், உங்களுக்கு உத்தரவிட நான் தகுதி படைத்தவன் என்று நான் நினைக்கவில்லை."

அங்கதனின் இந்தக் குற்றமற்ற வார்த்தைகளைக் கேட்டு வானரர்கள் மகிழ்ச்சியடைந்து இவ்வாறு பதில் கூறினர்.

"ஓ, உயர்ந்த வானர இளவரசரே! கட்டளையிடக் கூடிய நிலையில் இருக்கும் யார் இவ்வளவு அடக்கமாகப் பேசுவார்? தன் அதிகாரத்தையும் செல்வத்தையும் உணர்ந்திருப்பவர்கள் எல்லாச் சாதனைகளையும் தங்களுடையதாக ஆக்கிக் கொள்வார்கள்.

"இந்த வார்த்தைகள் உங்களுக்கு ஏற்றவையாக இருக்கின்றன. இவற்றை எல்லோரிடமும் பார்க்க முடியாது. உங்களுடைய இந்த அடக்கம் எதிர்காலத்தில் நாம் அதிக சிறப்புகளைப் பெற நீங்கள் எவ்வளவு பொருத்தமானவர் என்பதைக் கூறுகிறது.

"மிகுந்த சக்தி படைத்த வானர அரசர் சுக்ரீவர் இருக்கும் இடத்துக்குத் திரும்பிச் செல்ல உங்கள் உத்தரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். உங்கள் உத்தரவில்லாமல் வானரர்களான நாங்கள் எந்தத் திசையிலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டோம்.

"ஓ, உயர்ந்த வானரரரே! நாங்கள் இந்த வார்த்தைகளை உண்மையாக உணர்ந்து உங்களிடம் கூறுகிறோம்."

அவர்கள் இவ்வாறு கூறியதும் அங்கதன் அவர்கள் கிளம்புவதற்கான உத்தரவைப் பிறப்பித்தான். உடனே அந்த சக்தி வாய்ந்த வானரர்கள் அனைவரும் வானில் எழும்பினர்.

உண்டிவில்லிலிருந்து செலுத்தப்பட்ட கற்களைப் போல், அந்த வானரர்கள் ஒருவர் பின் ஒருவராக வானத்தை மறைப்பது போல் வான்வெளியில் தாவிச் சென்றனர்.

வேகம் மிகுந்த அந்த வானரர்கள் வான் வழியே சென்றபோது, மேகங்கள் நகர்ந்து செல்லும்போது ஏற்படும் ஒலிகளைப் போன்ற ஒலிகள் உருவாயின.

அங்கதனும் அவன் ஆட்களும் அருகில் வந்து கொண்டிருந்தபோது  வானரர்களின் அரசனான சுக்ரீவன் சோகத்தில் ஆழ்ந்திருந்த தாமரைக்கண் கொண்ட ராமரிடம் இவ்வாறு கூறினான்.

"தயவு செய்து மனச் சமாதனம் அடையுங்கள். உங்களுக்கு விரைவிலேயே நல்ல காலம் பிறக்கும். சீதாப்பிராட்டி கண்டு பிடிக்கப்பட்டு வீட்டார். அதில் எந்த ஐயமும் இல்லை. இல்லாவிட்டால் அவர்கள் திரும்ப வருவதற்காக விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை அவர்கள் மீறி இருக்க மாட்டார்கள்.

"தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செய்யாமல் என் வாரிசும் வானரத் தலைவர்களில் ஒருவனுமான அங்கதன் என்னிடம் ஒரு போதும் திரும்பி வர மாட்டான்.

"தன் பணியைச் செய்து முடிப்பதில் வெற்றி அடையாதவர்களின் மனப்பான்மை இவ்வாறு இருக்காது. அவர்கள் அச்சத்துடன் இருப்பார்கள். அவர்கள் முகங்கள் வாடி இருக்கும்,

"அங்கதன் மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் இல்லாமல் இருந்திருந்தால், எங்கள் பாட்டன்கள், முப்பாட்டன்கள் என்று பழைய தலைமுறையிலிருந்து எங்களுக்கு வந்திருக்கும், நாங்கள் மிகவும் கவனமாகப் பாதுகாத்து வந்திருக்கும் மதுவனத்தை அவன் அழித்திருக்க மாட்டான்.

"ஓ, ராமரே! நீங்கள் கௌசல்யாவின் நற்றவப் பலனின் வடிவம். நீங்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வாழ்பவர். ஹனுமான் சீதையைக் கண்டு பிடித்திருப்பார் என்று நம்பி மன அமைதியுடன் இருங்கள். வேறு யாராலும் இதைச் சாதிக்க முடியாது. இந்த உண்மைகள் பற்றி எந்த ஐயமும் இல்லை.

"மிகுந்த அறிவாற்றல் உள்ளவரே! இதைச் சாதித்ததில் ஹனுமானைத் தவிர வேறு யாரும் கருவியாக இருக்க முடியாது. அத்தகைய சாதனைச் சக்தி, அறிவுக் கூர்மை, சிந்தனை உறுதிப்பாடு, துணிவு அத்தனையும் ஒருங்கே பெற்று சூரியனின் ஒளி போன்ற பிரகாசத்துடன் திகழ்பவர் ஹனுமான் மட்டும்தான். 

"அது மட்டுமல்ல, அங்கதன் தளபதியாகவும், ஜாம்பவான் தலைவராகவும், ஹனுமான் வழிகாட்டுபவராகவும் இருக்கும்போது எந்தப் பணியும் தோல்வியில் முடியாது.

"ஓ, துணிவுள்ளவரே! எனவே, உங்கள் வருத்தத்தை விட்டொழியுங்கள்."

அப்போது ஹனுமானின் சாதனையில் பெருமை கொண்டு, தங்கள் வெற்றியை அறிவிக்கும் ஆவலுடன் கிஷ்கிந்தைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த வானரர்களின் பேச்சுக் குரல்கள் வானில் கேட்டன. 

வானரர்களிடமிருந்து வந்த ஒலிகளைக் கேட்டதும், வானர்ளின் அரசன் தன் மகிழ்ச்சியின் அடையாளமாக, வளைந்திருந்த தன் வாலை நிமிர்த்திக் கொண்டான்.

ராமரைச் சந்திக்க ஆவலாக இருந்த வானரர்கள் அங்கதன் மற்றும் ஹனுமானால் வழி நடத்தப்பட்டு அங்கே வந்து சேர்ந்தனர்.

அங்கதனும் மற்ற வானரர வீரர்களும் உற்சாகமான மனநிலையில் அரசன் சுக்ராவன் மற்றும் ராமர் முன் வானிலிருந்து வந்து இறங்கினர். 

வீரரான ஹனுமான் முதலில் ராமரின் காலடிகளில் விழுந்து வணங்கி, சீதை உடலளவில் காயப்படாமலும், கற்புடனும் இருக்கிறார் என்பதை அவரிடம் தெரிவித்தார்.

"சீதை கண்டு பிடிக்கப்பட்டார்" என்ற வார்த்தைகளை ஹனுமானின் வாயிலிருந்து, லக்ஷ்மணருடன் சேர்ந்து ராமர் கேட்டதும், அந்த  வார்த்தைகள் அமிர்தம் போன்று அவர்களுக்கு மகிழ்ச்சியளித்தன.

தன் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக ஹனுமானுக்கு சுக்ரீவன் பாராட்டுத் தெரிவித்தான். லக்ஷ்மணன் ஹனுமானிடம் மிகவும் மகிழ்ச்சியடைந்து அவர் முகத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்தார்.

பிறகு எல்லா எதிரிகளையும் அழிப்பவரான ராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவராக ஹனுமானை மலர்ச்சியுடனும், மரியாதையுடனும் நோக்கினார்.

சர்க்கம் 65


 

Saturday, January 9, 2021

66. 63ஆவது சர்க்கம் - மதுவனம் அழிக்கப்பட்ட செய்தியைக் கூறுதல்

தன் காலடியில் தலையைப் பதித்தபடி கிடந்த ததிமுகனைப் பார்த்து, சுக்ரீவன் அவனிடம் கவலையுடன் கேட்டான்.

"ஓ, வீரனே! எழுந்து நில். ஏன் என் காலில் விழுகிறாய்? எல்லாவற்றையும் என்னிடம் வெளிப்படையாகச் சொல். உனக்குத் தேவையான பாதுகாப்புக் கிடைக்கும்."

ததிமுகன் எழுந்து நின்று சுக்ரீவனிடம் சொன்னான்.

"அரசரே! வானரர்களின் அரசர்கள் மதுவனத்தில் யாரையும் நுழைய அனுமதித்ததில்லை. வாலி எப்போதும் அனுமதித்ததில்லை, நீங்களும் அனுமதித்ததில்லை. 

"அப்படி இருந்தும், இந்த வானரச் சேனைகள் இப்போது அந்த வனத்துக்குள் நுழைந்து எல்லாவற்றையும் உண்டும் அழித்தும் விட்டன.

"தோட்டக் காவலர்கள் அவர்களைத் தடுத்த போதும், காவலர்களைப் பொருட்படுத்தாமல் அந்த வானரர்கள் எல்லாத் தேன்கூடுகளிலிருந்தும் தேனைக் குடித்து விட்டார்கள். அவர்கள் இன்னும் குடித்துக் கொண்டும் தோட்டத்தை அழித்துக் கொண்டும்இருக்கிறார்கள். 

"சிலர் நிறையத் தேனைக் குடித்து விட்டு, தேன்கூடுகளைத் தரையில் தூக்கிப் போடுகிறார்கள். எல்லோருமே அழிவுச் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களைத் தடுத்தால் தங்கள் புருவங்களை உயர்த்தி எங்களை முறைக்கிறார்கள்.

"ஓ, வானரர்களின் உயர்ந்த தலைவரே, கோபமான, கண்கள் சிவந்த அந்த வானரர்களால் இந்த வானரக் காவலர்கள் மிகவும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

"சிலர் கைகளால் அடிக்கப்பட்டிருக்கிறார்கள், சிலர் முழங்கால்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள், சிலர் தரையில் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த வானரர்கள் எல்லோருக்கும் தங்கள் பின்பக்கத்தைக் காட்டி இருக்கிறார்கள்.

"நீங்கள் எங்கள் அரசர். ஆயினும் அந்த வானரர்கள் எங்களைத் தாக்கத் துணிந்திருக்கிறார்கள். மதுவனம் அவர்களால் மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது."

இந்த வார்த்தைகளைக் கேட்டதும், எதிரிகளை அழிப்பவனும், மிகுந்த அறிவு படைத்தவனுமான லக்ஷ்மணன் இவ்வாறு கூறினான்:

"அரசனே! காட்டின் காவலரான இந்த வானரர் இங்கு ஏன் வந்திருக்கிறார்? இவர் எதனால் வருத்தமடைந்திருக்கிறார்?"

லக்ஷ்மணன் இவ்வாறு கேட்டதும், பேச்சில் வல்லவனான சுக்ரீவன் இவ்வாறு பதில் கூறினான்:

"ஓ, உயர்ந்த லக்ஷ்மணரே! ததிமுகன் என்னிடம் சொல்ல விரும்புவது அங்கதனும் மற்ற வானரர்களும் சேர்ந்து மதுவனத்தை அழித்து விட்டார்கள் என்பதை. இப்போது அவர்கள் மதுவனத்தை வந்தடைந்து விட்டார்கள். அப்படியானால் அவர்கள் தங்கள் பணியில் வெற்றியடைந்து விட்டார்கள் என்று பொருள்.

"உயர்ந்தவரான சீதையை ஹனுமான் கண்டு பிடித்திருக்க வேண்டும். இதில் எந்த ஐயமும் இல்லை. வேறு எவராலும் இதைச் செய்திருக்க முடியாது. இந்தப் பணியைச் செய்வது ஹனுமானைத் தவிர வேறு யாராலும் இயலாது.

"சாதனை புரிவதற்கான வல்லமை, அறிவுக் கூர்மை, உறுதிப்பாடு, பணிவு, விஷயங்கள் பற்றிய அறிவு ஆகிய இந்தச் சிறந்த குணங்கள் தன்னிடம் ஒருங்கே இருக்கப் பெற்றவர் அந்த வானரர் மட்டுமே.

"அங்கதன் வழிநடத்துபவனாகவும், ஜாம்பவான் தலைவராகவும், ஹனுமான் இயக்குபவராகவும் இருக்கும்போது, எந்தப் பணியும் முடிக்கப்படுவது நிச்சயம்.

"தென் பகுதிக்குச் சென்று தேடி விட்டுத் திரும்பிய அங்கதன் தலைமையிலான வீர வானரர்களால்தான் மதுவனம் அழிக்கப்பட்டிருக்கும். திரும்பி வந்த வானரர்களால் மதுவனம் அழிக்கப்பட்ட விதம் தங்கள் பணியில் தோல்வியுற்றவர்களால் நிகழ்த்தப்பட்டிருக்க முடியாது. எவ்வாறு தேன் முழுவதும் அருந்தப்பட்டு தோட்டம் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். 

"அது மட்டுமல்ல. அவர்hளை விரட்டியடிக்க மொத்தமாகச் சென்றவர்கள் முழங்கால்களில் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

"துணிவுக்கும் இனிமையான பேச்சுக்கும் பெயர் பெற்ற ததிமுகன் இந்த நிகழ்வுகளைப் பற்றிப் புகார் செய்ய இங்கே வந்திருக்கிறான். ஓ, சுமித்ரையின் வீரப்புதல்வரே! இது எதைக் காட்டுகிறது என்பதை யோசித்துப் பாருங்கள். அவர்களால் சீதை கண்டு பிடிக்கப்பட்டிருப்பது உறுதி.

"ஓ, உயர்ந்தவரே! இல்லாவிட்டால், மதுவனத்தின் பாம்பரியம் அனைத்தையும் பற்றி நன்கு அறிந்த இந்த வானரர்கள் ஒரு தெய்வீக வரத்தின் மூலம் நமக்குக் கிடைத்த அந்தத் தோட்டத்தை அழித்திருக்க மாட்டார்கள்."

உயர்வான புகழைப் பெற்றிருந்த லக்ஷ்மணன் சுக்ரீவரின் இந்த வார்த்தைகளை மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தபோது, நல்ல காலம் நெருங்கி விட்டதை நினைத்து ராமர் இன்னும் அதிக மகிழ்ச்சி அடைந்தார். 

ததிமுகனின் வார்த்தைகளைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்த சுக்ரீவன் உடனே செய்யப்பட வேண்டியது என்ன என்பதை அவனிடம் கூறினான்:

"தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்து விட்டுத் திரும்பி இருப்பதால்தான் அவர்கள் தோட்டத்தில் இருந்த தேனைக் குடித்திருக்கிறார்கள். எனவே அவர்கள் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தங்கள் பணியை முடித்த பிறகு அவர்கள் நடந்து கொண்ட விதம் என் விருப்பத்தின்படிதான் இருக்கிறது.

"தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்து விட்டுத் திரும்பி வரும் ஹனுமான் தலைமையிலான அந்த வானரர்களின் வருகையையும், ராமர், லக்ஷ்மணருடன் சேர்ந்து சீதையை மீட்க நாம் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் பற்றி அவர்கள் கூறுவதைக் கேட்கவும் நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்."

தங்கள் நோக்கம் நிறைவேறியது குறித்து வானரர்களின் அரசனான சுக்ரீவனும், அரசகுமாரர்களான ராமர், லக்ஷ்மணர் ஆகியோரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர். மகிழ்ச்சியால் அவர்களுடைய கண்கள் விரிந்தன.

அளவிட முடியாத மகிழ்ச்சியடைந்த அவர்கள் வரப் போகும் வெற்றியை நினைத்து உடல் முழுவதும் மயிர்க்கூச்செரிந்தனர். 

சர்க்கம் 64



Monday, January 4, 2021

65. 62ஆவது சர்க்கம் - தோட்டக் காவலர்கள் தாக்கப்படுதல்

வானரர்களின் தலைவர்களில் ஒருவரான ஹனுமான் வானரர்களிடம் கூறினார்:

"வானரர்களே! எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நீங்கள் தேனை அருந்துங்கள். உங்களைத் தடுக்க வருபவர்களை விரட்டியடிக்க நான் இருக்கிறேன்."

எல்லா வானரச் சேனைகளுக்கும் தலைவனான இளவரசன் அங்கதன் ஹனுமானின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்து இவ்வாறு உத்தரவிட்டான்:

"வானரர்கள் மதுவை (தேனை) அருந்தட்டும். நம் பயணத்தின் நோக்கத்தை வெற்றியடையச் செய்த ஹனுமானின் வார்த்தைகள், அவை முறையற்றதாக இருந்தாலும், பின்பற்றப்பட வேண்டும். அப்படி இருக்கும்போது முறையான செயல்பாட்டின் வரம்புக்குள் இருக்கும் இந்த விஷயம் பற்றிக் கேட்க வேண்டுமா என்ன?"

அங்கதனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், அந்த உயர்ந்த வானரர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அவனை வாழ்த்தினர். 

உற்சாகமூட்டிய வார்த்தைகளைக் கூறியதற்காக அங்கதனைப் புகழ்ந்த அந்த வானரர்கள் கரையைக் கடந்து ஓடும் நதியைப் போல் தேன் அதிகம் இருந்த தோட்டத்தின் பகுதிகளை நோக்கி விரைந்தனர்.

மிதிலை நாட்டு இளவரசியைக் கண்டு பிடித்து விட்டதால் அளவு கடந்த மகிழ்ச்சியிலும், தாங்கள் விரும்பியபடி தேனை அருந்த அனுமதி கிடைத்து விட்ட உற்சாகத்திலும், அவர்கள் தோட்டத்தின் காவலர்கள் தடுத்ததை மீறி அந்தக் காட்டுத் தோட்டத்தின் எல்லாப் பகுதிகளுக்குள்ளும் நுழைந்தனர்.

தாங்கள் மனத் திருப்தி அடையும் அளவுக்கு அவர்கள் தேனை அருந்தி, அங்கிருந்த சுவையான பழங்களையும் உண்டனர்.

அந்த மதுவனத்தின் மீது மிகவும் விருப்பம் கொண்ட காவலர்கள் தங்கள் கடமையைச் செய்வதற்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வானரர்களால் தாக்கப்பட்டனர்.

வானரர்கள் பெரிய பாத்திரங்கள் அளவுக்கு இருந்த தேன்கூடுகளை எடுத்துக் கொண்டு அவற்றிலிருந்த தேனைப் பருகினர். சிலர் காலியான தேன்கூடுகளைக் காவலர்கள் மீது வீசி அவற்றை உடைத்தனர்.

தேனைப் போன்ற உடல் நிறம் கொண்ட குரங்குகள், தாங்கள் மனத் திருப்தி அடையும் அளவுக்குத் தேனைக் குடித்த பின், மிகுந்தவற்றைக் கீழே கொட்டி வீணடித்தனர். குடிபோதையில் தேன்கூடுகளை ஒருவர் மீது ஒருவர் வீசத் தொடங்கினர்.

அதிக போதை கொண்டிருந்த அவர்களில் சிலர் மரங்களின் கிளைகளைப் பிடித்துக் கொண்டு கீழே விழாமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். சிலர் மரங்களுக்குக் கீழே இலைகளைப் பரப்பி அவற்றின் மீது படுத்துக் கொண்டனர்.

போதை கொண்ட சில வானரர்கள் தரையில் உருண்டனர். தங்கள் சிந்திக்கும் திறனை இழந்து விட்ட சிலர் போதையால் ஏற்பட்ட உற்சாகத்தில் ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ள ஆரம்பித்தனர்.

தேன் குடித்த மயக்கத்தினால் சிலர் உறங்கினர், சிலர் நடனமாடினர், சிலர் உரத்த குரலில் கூச்சல் எழுப்பினர். சிலர் ஒன்றைச் செய்து விட்டு வேறொன்றைச் செய்ததாகப் பாசாங்கு செய்தனர்.

சிலர் குறும்பகள் செய்து விட்டுச் சிரித்தனர். சிலர் கத்தினர். போதை தெளிந்த சிலர் எழுந்து கொண்டனர்.

அந்தக் காட்டுத் தோட்டத்தில் இருந்த தேன் வளங்களைப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருந்த ததிமுகனின் எல்லா வேலையாட்களும் அந்தச் சக்தி வாய்ந்த வானரர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்கள் அந்தத் தோட்டத்தின் பலவேறு மூலைகளுக்கும் ஓடினர்.

முழங்கால்கள் பிடித்து இழுக்கப்பட்டு, வானரர்களின் அலங்கோலமான நிலைகளைக் காணும் நிலைக்குத் தள்ளப்பட்ட ததிமுகனின் ஆட்கள்  தங்கள் எஜமானனிடம் சென்று இவ்வாறு புகார் செய்தனர்:

"ஹனுமானின் அனுமதியோடு வானரர்கள் மதுவனத்தை அழித்து விட்டனர். அவர்கள் எங்கள் முழங்கால்களைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளித் தங்கள் பின்புறங்களை எங்களுக்குக் காட்டினர்."

வானரர்களின் இந்த அழிவுச் செயல்கள் குறித்து தோட்டங்களின் பாதுகாவலன் ததிமுகன் மிகவும் கோபமடைந்தாலும், அவன் தன் வானர ஊழியர்களிடம் இவ்வறு கூறி அவர்களைச் சமாதானம் செய்தான்:

"வாருங்கள். நாம் போய், தேனைக் குடித்த போதையுடனும், தங்கள் பலத்தைக் குறித்த கர்வத்தால் ஏற்பட்ட போதையுடனும் இருக்கும் அந்த வானரர்களை விரட்டி அடிப்போம்."

ததிமுகனின் வார்த்தைகளைக் கேட்டதும், வீரம் மிகுந்த அந்த வானரக் காவலர்கள் அவனுடன் மீண்டும் மதுவனத்துக்கு விரைந்து சென்றனர். வழியில் ததிமுகன் ஒரு மரத்தைப் பிடுங்கி அதைத் தூக்கிக் காட்டியபடியே ஓடினான். அவன் ஆட்கள் அவனைப் பின் தொடர்ந்து ஓடினர்.

ததிமுகனும் அவன் ஆட்களும் மிகவும் கோபம் கொண்டவர்களாக கைகளில் மரங்களையும், மலைப்பாறைகளையும் தூக்கிக் கொண்டு வீரமிக்க வானர சேனையை நெருங்கினர்.

தங்கள் எஜமானனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்களாக, தைரியம் மிகுந்த காவல் வீரர்கள் பனை மரம், பிற மரங்கள், மற்றும் பாறைகளை ஆயுதமாகக் கொண்டு வேகமாக ஓடினர்.

பிறகு பல காவலர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு தங்கள் வலிமையில் நம்பிக்கை கொண்டவர்களாக, வானரர்களையும் அவர்களின் தலைவர்களையும் சூழ்ந்து கொண்டு தாக்கினர்.

ததிமுகன் கோபமாக இருப்பதைப் பார்த்த ஹனுமான் முதலான வானரத் தலைவர்கள் விரைந்து அவனிடம் சென்றனர்.

மிகுந்த வலிமையும், திறமையும் கொண்ட மதிப்பு நிறைந்த ததிமுகன் கையில் ஒரு மரத்தைத் தூக்கிக் கொண்டு அவர்களைத் தாக்க வந்து கொண்டிருந்தான். 

அங்கதன் கோபத்துடன் ததிமுகனை நெருங்கி அவனைத் தன் இரண்டு கைகளாலும் அடித்தான். போதையின் உச்சத்தில் இருந்த அங்கதன் தன் எதிரில் நிற்பவன் தன்னை விட வயதில் மூத்த மரியாதைக்குரியவன் என்பதை உணரத் தவறியவனாக, ததிமுகனைக் கீழே தள்ளி அவனைத் தன் கால்களால் உதைத்தான்.

அந்தச் சிறந்த வானரன் தோள்களிலும், தொடைகளிலும், கால்களிலும் அடிபட்டு  உடல் முழுதும் ரத்தம் வழிய சிறிது நேரம் மூர்ச்சையற்று இருந்தான்.

சுக்ரீவனின் மாமனான ததிமுகன் விரைவிலேயே எழுந்து நின்று, இன்னும் அதிகக் கோபம் கொண்டவனாக தேன் குடித்த போதையில் இருந்த குரங்குகளை ஒரு தடியால் அடித்து விரட்டினான். 

வானரர்களிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ததிமுகன் ஒதுக்குப்புறமான ஒரு இடத்துக்குச் சென்று தன் ஆட்களிடம் கூறினான்:

"இவர்கள் இங்கேயே இருக்கட்டும். ராமருடன் இருக்கும் நம் எஜமானர் சுக்ரீவரிடம் நாம் செல்வோம். இந்த அழிவுச் செயல்கள் அனைத்துக்கும் முழுக் காரணம் அங்கதன்தான் என்று அரசர் சுக்ரீவரிடம் நான் சொல்கிறேன். 

"அவர் உடனே கோபமடைந்து இந்த வானரர்களைக் கொன்று விடுவார். ஏனெனில் தேவர்களால் கூட நுழைய முடியாத இந்த மதுவனம் சுக்ரீவருக்கு அவர் முன்னோர் வழி வந்த சொத்து. இது அவருக்கு மிகவும் பிரியமானது.

"அதனால் இந்த வானரர்களுக்கு அழிவு நிச்சயம், இந்தத் தேன் பித்துக் கொண்ட வானரர்களை சுக்ரீவர் அடித்துக் கொன்று விடுவார்.

"அரசரின் ஆணையை மீறிய இந்தத் தீய பிறவிகள் கொல்லப்பட வேண்டியவர்கள்தான். பொறுக்க முடியாத நம் கோபத்துக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்."

இதைத் தன் ஆட்களிடம் தெரிவித்த பிறகு, சக்தி வாய்ந்த ததிமுகன் அவர்களுடன் சுக்ரீவனிடம் விரைந்து சென்றான். உயர்ந்த வானரத் தலைவரும், சூரியனின் புதல்வனுனான விவேகமுள்ள சுக்ரீவன் இருந்த இடத்தை அவன் கண நேரத்தில் அடைந்தான்.

ராமருடனும், லக்ஷ்மணருடனும் சுக்ரீவனைப் பார்த்ததும் ததிமுகன் வானிலிருந்து இறங்கினான். சக்தி வாய்ந்த ததிமுகன் தன் ஆட்களுடன் சுக்ரீவன் முன்பு சோகமான முகத்துடன் நின்று அவன் கால்களில் விழுந்து வணங்கி விட்டு அவன் ஆணையை எதிர்பார்த்து நின்றான்.

சர்க்கம் 63