Saturday, July 4, 2015

12. ஒன்பதாவது சர்க்கம் - ராவணனின் அந்தப்புரம்

ராவணனின் அரண்மனை ஒரு யோஜனை (சுமார் 10 மைல்) நீளமும், அரை யோஜனை (சுமார் 5 மைல்) அகலமும் கொண்டிருந்தது. எதிரிகளை அழிக்கும் வல்லமை பெற்றவரான ஹனுமான், மற்ற எல்லா அரக்கர்களின் இல்லங்களிலும் தேடி அலைந்து அங்கெல்லாம் சீதையைக் காணாததால், கடைசியாக ராவணனின் இல்லத்துக்குள் நுழைந்தார்.

ராவணனின் அந்தப் பெரிய அரண்மனை, எப்போதும் தயார் நிலையில் இருந்த ஆயுதம் தாங்கிய காவலர்களாலும், மூன்று மற்றும் நான்கு தந்தங்கள் கொண்ட யானைகளாலும் காக்கப்பட்டு வந்தது.

அந்த அரண்மனைக்குள், ராவணனின் மனைவிகளும், அவனால் சிறை பிடிக்கப்பட்ட அரச குலப் பெண்களும் இருந்தனர். முதலைகள், திமிங்கிலங்கள், பாம்புகள், மீன்களால் நிறைந்த, அலைகளால் பொங்கிக் கொண்டிருக்கும் கடலைப்போல், அணுகுவதற்கு அரிதானதாக இருந்தது அந்த அரண்மனை.

குபேரன், இந்திரன், சூரியன் ஆகியோரின் இல்லங்களுக்கே உரித்தான செல்வங்களும், சிறப்புகளும் ராவணனின் அரண்மனையிலும் இருந்தன. ராவணனின் அரண்மனையின் செல்வச் செழிப்பு இந்திரன், குபேரன், வருணன், யமன் ஆகியோரின் இல்லங்களின் செல்வச் செழிப்பை விட அதிகமாகவே இருந்தது.

ராவணனின் அரண்மனைக்குள் வேலைப்பாடுகள் மிகுந்த ஒரு விமானத்தைப் பார்த்தார் அந்த வாயுபுத்திரர். மாளிகை போன்று பிரும்மாண்டமாக அமைந்திருந்த அந்தப் புஷ்பக விமானத்தை விண்ணுலகில் விஸ்வகர்மா உருவாக்கியிருந்தார். விமானத்தில் அமர்ந்திருப்பவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப எங்கும் செல்லக் கூடிய சக்தி படைத்தது அந்த விமானம்.

முழுவதும் நவரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட, மூவலகில் வசிப்பவர்களாலும் போற்றப்பட்ட அந்த விமானத்தை, குபேரன் கடுமையான தவம் செய்து பிரம்மாவிடமிருந்து பெற்றான். குபேரனை வெற்றி கொண்டு, ராட்சஸ அரசன் ராவணன் அந்த விமானத்தைத் தனதாக்கிக் கொண்டான்.

அந்த விமானத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த மான் போன்ற பல உருவங்கள் செதுக்கப்பட்ட தூண்கள் தங்கள் பளபளப்பினால் நெருப்புத் தூண்கள் போல் ஒளிர்ந்தன. வேலைப்பாடுகள் மிகுந்த அதன் நுழைவாயில் கோபுரங்கள் மேரு மலை போலவும், மந்தர மலை போலவும் உயர்ந்து விண்ணைத் தொட்டன.

அந்தப் புஷ்பக விமானத்திற்குள் நுழைந்து பார்த்தார் ஹனுமான். அதைச் சுற்றிப் பல தாழ்வாரங்கள் இருந்தன. உள்ளே நுழைந்தபோதே பல்வேறு உணவுப் பண்டங்கள், பானங்கள் ஆகியவற்றின் இனிய நறுமணம் வீசியது. அந்த நறுமணம் உள்ளே வருமாறு அவரை நட்புடன் வரவேற்பது போல் இருந்தது.

பிறகு, அந்த அரண்மனையில் ராவணனின் அந்தப்புரத்தை அவர் பார்த்தார். ஒரு அழகான உயர் குலப் பெண்ணைப் போல் அது பார்ப்போரைக் கவர்வதாகவும், மங்களகரமாகவும் இருந்தது. அதன் படிகளில் எண்ணற்ற நவரத்தினக் கற்கள் பதிக்கப் பட்டிருந்தன. அந்த அறையின் சாளரங்கள் தங்கத்தகடுகளால் ஆன பலகைகளைக் கொண்டிருந்தன.

அதன் தரை வைரத்தாலும் தந்தத்தாலும் அமைக்கப்பட்டிருந்தது. தங்கம், மற்றும் வெள்ளியால் அமைக்கப்பட்டிருந்த தூண்களில் பவளம் மற்றும் முத்துச் சரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடிய சில உயரமான தூண்களைப் பார்த்தபோது, அவை அந்த அரண்மனையை வானுக்கு இட்டுச் செல்வதற்காக அமைக்கப்பட்ட இறக்கைகள் போல் தோன்றின.

ராட்சஸ அரசன் வசதியாக உட்காருவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஆசனங்கள் பறவைகளின் இனிமையான கூவல்களும், இனிமையான நறுமணமும் நிறைந்திருக்கும் சூழலில் அமைக்கப்பட்டிருந்தன. பல்வகை ஊதுவத்திகளின் நறுமணம் எங்கும் நிறைந்திருந்தது. அங்கிருந்த எல்லாப் பொருட்களுமே அன்னப்பறவையைப்போல் வெண்மையாகவும், பிரகாசமாகவும், மனதுக்கு மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருந்தன.

தரை முழுவதிலும் பலவகை மலர்கள் பரப்பப் பட்டிருந்தன. விரும்பியதைக் கொடுக்கும் காமதேனுவைப்போல் இருந்த அந்த அந்தப்புரம், செல்வத்தின் இருப்பிடமாகக் காட்சி அளித்தது. மக்கள் மனதிலிருந்த வருத்தம் அனைத்தையும் போக்கும் சிறப்பைப் பெற்றிருந்த அந்த அந்தப்புரம் உலகத்தில் எல்லோர் போற்றுதலுக்கும் உள்ளாகி இருந்தது.

ஒரு தாய் தன் குழந்தைகளின் ஐம்புலன்களையும் மகிழ்விக்கும் வண்ணம் அவர்களுக்குப் பரிசுகளை வழங்குவதுபோல் அந்த அந்தப்புரம் அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம் அமைந்திருந்தது.

அதன் அழகைப் பார்த்த ஹனுமான், "இதென்ன தேவலோகமா, தெய்வங்களின் இல்லமா, இந்திரனின் மாளிகையா அல்லது கந்தர்வர்களின் கோட்டையா!" என்று வியந்தார். அங்கிருந்த விளக்குகளின் அழகைக் கண்டு பிரமித்தார்.

அங்கு திகழ்ந்த ஒளி, ஆபரணங்களின் பிரகாசம், அந்த இடத்தில் வெளிப்பட்ட ராவணனின் சக்தி இவை எல்லாம் அங்கே காமத்தீ கொழுந்து விட்டு எரிவதைக் காட்டுவதாக ஹனுமானுக்குத் தோன்றின.

அங்கே விலையுயர்ந்த படுக்கை விரிப்புகளில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த, பலவகை ஆபரணங்கள், மாலைகள், அழகு சாதனங்களின் துணையுடன் அழகாகத் தோன்றிய பல பெண்களை ஹனுமான் பார்த்தார்.

காமக் கேளிக்கைகளால் ஏற்பட்ட உடல் சோர்வினாலும், இனிய மதுவகைகள் ஏற்படுத்திய போதையாலும் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்கள் ஏற்படுத்திய கிண்கிணிச் சத்தத்தினால், அந்தப் பெண்கள் அன்னப்பறவைகளும், தேனீக்களும் அமைதியில் ஆழ்ந்திருக்கும் தாமரைக் குளம்போல் தோற்றம் அளித்தனர்.

கண்களும், உதடுகளும் மூடிய நிலையில், தாமரை மலர்களின் நறுமணத்தை வெளிப்படுத்தியபடி உறங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்களின் முகத்தை ஹனுமான் பார்த்தார்.

மது அருந்தியதால் போதை அடைந்திருந்த தேனீக்கள் அந்தப் பெண்களின் முகங்களைத் தாமரை மலர்கள் என்று நினைத்து அம்முகங்களின் மீது திரும்பத் திரும்ப வந்து அமர்ந்தன.

அழகிய பெண்களால் நிறைந்திருந்த ராவணனின் அந்தப்புரம் விண்மீன்கள் நிறைந்த வானம்போல் நிலவியது. அந்தப் பெண்களின் நடுவில் இருந்த ராவணன் விண்மீன்களுக்கு இடையில் திகழும் சந்திரன் போல் இருந்தான்.

அந்தப் பெண்களைப் பார்த்தபோது, ஹனுமானுக்கு, அவர்கள் தங்கள் நற்பலன்கள் தீர்ந்து விட்டதால் பூமியில் விழுந்து விட்ட வானத்து நட்சத்திரங்களைப் போல் தோன்றினர். 

தங்கள் வெண்மையான நிறத்தினாலும், பிரகாசமான உருவத்தாலும், அமைதியான தோற்றத்தாலும் அவர்கள் அந்த அந்தப்புரத்தில் ஒளி விடும் பெரிய நட்சத்திரங்கள் போல் தோற்றமளித்தனர்.

போதையூட்டும் பானங்களை அருந்தியதாலும், காமக்கேளிக்கைகளால் களைப்படந்ததாலும், அவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அவர்கள் அணிந்திருந்த மாலைகளும் ஆபரணங்களும் அங்கே சிதறிக் கிடந்தன.

சிலரது நெற்றிப் பொட்டுகள் கலைந்திருந்தன. சிலரது கொலுசுகள் கழன்றிருந்தன. சிலரது முத்துமாலைகள் தரையில் விழுந்திருந்தன.

முத்துமாலைகள் உடைந்து சிதறியும், ஆடைகள் கலைந்தும், ஒட்டியாணங்கள் உடைந்தும் இருந்த நிலையில், அப்பெண்கள், பாரம் சுமந்ததால் ஏற்பட்ட களைப்பைப் போக்கிக் கொள்ள தரையில் விழுந்து கிடந்த வண்டிச் சக்கரங்கள் போல் தோற்றமளித்தனர். 

யானைகளால் மிதித்துத் தள்ளப்பட்ட சில காட்டுக்கொடிகள் சில பூக்களுடன் தரையில் கிடப்பது போல், சில பெண்கள், மற்ற ஆபரணங்கள் கீழே விழுந்த நிலையில், காதணிகள் மட்டும் அப்படியே இருந்த நிலையில் படுத்திருந்தனர்.

வேறு சில பெண்களின் மார்புகளை அலங்கரித்த முத்து மாலைகள் சந்திரன் போலப் பிரகாசித்தன. அவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அன்னப் பறவைகள் போல் தோற்றமளித்தனர். 

சில பெண்கள் அணிந்திருந்த வைடூர்ய ஆபரணங்கள் மீன் கொத்திப் பறவைகள் போல் பிரகாசித்தன. வேறு சில பெண்கள் அணிந்திருந்த தங்க ஒட்டியாணங்கள் சக்ரவாகப் பறவைகள் போல் தோற்றமளித்தன. 

நதிக்கரை போல் பரந்திருந்த அவர்கள் இடுப்பு அப்பெண்களுக்கு அன்னம், கொக்கு, சக்ரவாகம் போன்ற பறவைகள் நிறைந்த நதியைப் போன்ற தோற்றத்தை அளித்தது.

மணிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒட்டியாணங்களை அணிந்து உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் நதிகள் போல் தோற்றமளித்தனர். 

அவர்கள் முகங்கள் நதிகளில் மிதக்கும் தங்கத் தாமரைகள் போலவும், அவர்கள் உடல்களில் இருந்த நகக் கீறல்கள் முதலைகள் போலவும், அவர்கள் அழகு, நதியின் இரு கரைகள் போலவும் காணப்பட்டன. 

ஆபரணங்களின் அழுத்தத்தினால் அந்தப் பெண்களின் மென்மையான உடல்களில் ஏற்பட்டிருந்த தழும்புகள் அந்த ஆபரணங்களைப் போலவே அழகாக இருந்தன. 

அவர்களின் மூச்சுக் காற்றினால் படபடத்த அப்பெண்களின் உடைகளின் ஓரங்கள் அவர்கள் முகங்களின் மீது பட்டும் விலகியும் விளையாடிக் கொண்டிருந்தன.

பல்வகை ஆடைகள் அணிந்திருந்த, உடல் நிறத்தில் வேறுபட்டிருந்த பெண்களின் கன்னங்களைத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்த அழகிய உடைகள் காற்றில் ஆடும் தோரணங்கள் போல் பளபளத்தன. 

சில அழகிய பெண்கள் அணிந்திருந்த காதணிகள் கூட அவர்கள் மூச்சுக் காற்று பட்டதால் படபடத்துக் கொண்டிருந்தன.

அந்தப் பெண்களின் முகங்களிலிருந்து வெளிப்பட்ட மணம் மிகுந்த மூச்சுக் காற்று ராவணனின் முகத்திலிருந்து வெளி வந்த இனிய மதுவின் மணம் கொண்ட மூச்சுக் காற்றுடன் கலந்தது. 

ராவணன் மீது அந்தப் பெண்களுக்கு இருந்த மயக்கத்தினால் ஒவ்வொரு பெண்ணும் ராவணனின் பிற மனைவிகளுடன் நேசமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. 

சில பெண்கள் தாங்கள் அணிந்திருந்த உடையையே தரை விரிப்பாகவும் தங்கள் வளைக்கரங்களையே தலையணைகளாகவும் பயன்படுத்தி உறங்கிக் கொண்டிருந்தனர்.

போதை மயக்கத்தினாலும், காம வசப்பட்டதாலும் அந்தப் பெண்கள் மற்ற பெண்களைத் தொட்டுக்கொண்டும் தழுவிக்கொண்டும் உறங்கிக் கொண்டிருந்தனர். 

சிலர் மற்றவர்களின் கைகளைத் தலையணைகளாகக் கொண்டு உறங்கினர். எல்லோருமே மிக மகிழ்ச்சியான மன நிலையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

மற்ற பெண்களுடன் கைகோத்தபடி உறங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்களின் தோற்றம் ஆங்காங்கே மயங்கிய நிலையில் சில தேனீக்கள் அமர்ந்திருக்கும் பூமாலை போல் தோற்றமளித்தது.

அங்கே உறங்கிக் கொண்டிருந்த ராவணனின் அந்தப்புரப் பெண்களின் தோற்றம் வைகாசி மாதத்தில் பூத்துக் குலுங்கும் ஒரு பூந்தோட்டம் போல் காட்சி அளித்தது.

எல்லாப் பெண்களின் உடைகள், கை கால் போன்ற உறுப்புகள், ஆபரணங்கள் ஆகியவை இருக்க வேண்டிய இடத்தில் இருந்தாலும் எது யாருடையது என்று இனம் காண முடியாதவையாக இருந்தன.

அங்கிருந்த தங்க விளக்குகள் ராவணன் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தைப் பயன்படுத்தி, அந்தப் பெண்களைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பது போல் தோற்றமளித்தன.

அந்தப் பெண்களில் அரக்கர் குலப் பெண்களைத் தவிர, அரச குமாரிகள், முனிவர்களின் பெண்கள், தேவர் குல மற்றும் கந்தர்வ குலப் பெண்களும் இருந்தனர். 

அவர்கள் எல்லோரும் ராவணால் விரும்பப்பட்டவர்கள். அவர்களில் பெரும்பாலோர் போரில் வெற்றி பெற்ற பின் ராவணனால் கொண்டு வரப் பட்டவர்கள். மற்றவர்கள் ராவணனிடம் மையல் கொண்டு அவனிடம் வந்து சேர்ந்தவர்கள்.

சீதையைத் தவிர மற்ற எல்லாப் பெண்களுமே ராவணனின் வீரத்தால் கொண்டு வரப்பட்டவர்கள். 

அவர்கள் யாருமே தங்கள் விருப்பத்துக்கு விரோதமாக அவனால் கொண்டு வரப் படவில்லை. அவர்களில் யாருமே வேறு யாரையும் காதலித்தவர்களோ மணந்து கொண்டவர்களோ இல்லை. 

அவர்கள் யாருமே மோசமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் யாருமே அழகில்லாதவர்கள் இல்லை. யாருமே அறிவிலிகளோ, அவமானத்துக்கு உள்ளானவர்களோ, அமங்கலமானவர்களோ இல்லை. காதலுக்குத் தகுதியற்றவர்களும் அவர்களில் யாரும் இல்லை.

"ராவணனின் மனைவிகள் அவனுடன் இருப்பது போல் ராமபிரானின் மனைவியும் அவருடன் இருந்தால் நான் எவ்வளவு பாக்கியம் செய்திருப்பேன்! என் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறி இருக்குமே!" என்று நினைத்தார் அறிவாளியான ஹனுமான்.

"சீதாப்பிராட்டி நற்பண்புகள் நிறைந்தவர். இலங்கை அரசன் ராவணன் அவர் விஷயத்தில் அக்கிரமாக நடந்து கொண்டிருக்கிறானே!" என்று நினைத்து வருந்தினார் அந்த வானர வீரர்.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:


No comments:

Post a Comment