Sunday, December 27, 2020

64. 61ஆவது சர்க்கம் - மதுவனம் அழிக்கப்பட்டது!

உயர்ந்த வானரத் தலைவர்களான அங்கதன், ஹனுமான் முதலியோர் ஜாம்பவானின் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.  

மந்தர மலை போலவும், மேரு மலை போலவும் பிரம்மாண்டமான உருவம் கொண்டிருந்த, தடத்தில் செல்லும் யானைகள் போல் தோற்றமளித்த அந்த வானரர்கள் ராமரின் புகழுக்கும், தங்கள் நோக்கத்துக்கும் உகந்த வகையில் செய்யக் கூடியது எதுவாக இருக்கும் என்று தங்களுக்குள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தாங்கள் செய்தவை பற்றிப் பெருமை கொண்டிருந்த அவர்கள் தங்கள் நோக்கம் வெற்றியடைந்ததை அறிவிப்பதில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தனர். 

ராமரிடம் நன்றி கொண்டவர்காளாகவும், தங்கள் உற்சாகத்தால் உந்தப்பட்டவர்களாகவும், எல்லா வானரர்களும் வலிமை, திறமை மற்றும் அறிவுக்காகப் பெயர் பெற்ற ஹனுமானை முன்னே நிறுத்தி அவர் பின்னே நடந்து சென்றனர். அவர்கள் எல்லா உயிரினங்களாலும் புகழப்பட்டனர்.

பிறகு அவர்கள் மஹேந்திர மலையிலிருந்து, தங்கள் பெரிய உடல்களால் வானத்தை மறைத்துக் கொண்டு பெரும் வேகத்துடன் விரைந்து சென்றனர். 

அந்தரத்தில் தாவிக் குதித்துச் சென்று பழகிய வானரர்கள் தேவர்களின் தோட்டமான நந்தவனத்துக்கு நிகரான, மரங்கள் நிறைந்த ஒரு காட்டுத் தோட்டத்தைச் சென்றடைந்தனர்.

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அந்த கண்ணுக்கினிய காட்டுத் தோட்டம் சுக்ரீவனின் மதுவனம் என்று அழைக்கப்பட்டது. யாரும் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு அது நன்றாகப் பாதுகாப்பட்டு வந்தது, அது சுக்ரீவனின் மாமனான ததிமுகன் என்ற  திறமை வாய்ந்த வானரத் தலைவனின் பொறுப்பில் இருந்தது.

கட்டுக்கடங்காத உற்சாகத்துடன் அந்த வானரர்கள் வானர அரசனுக்கு மிகவும் விருப்பமான அந்தக் காட்டில் கூடினர். மதுவனத்தைக் கண்டதும் தேன் நிறம் கொண்ட அந்த வானரர்கள் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்து  அங்கே இருக்கும் தேனை அருந்த அனுமதிக்குமாறு அங்கதனிடம் கேட்டனர்.

ஜாம்பவான் போன்ற மூத்தவர்களின் ஒப்புதலைப் பெற்றுத் தேனை அருந்த வானரர்களுக்கு அனுமதி அளித்தான் அங்கதன். 

ஏற்கெனவே உற்சாக மனநிலையில் இருந்த அந்த வானரர்கள், இந்த அனுமதி கிடைத்ததும் இன்னும் அதிக உற்சாகம் கொண்டனர். சிலர்  முரட்டுத்தனமாக நடனம் ஆடவும் தொடங்கினர்.

சிலர் பாடினர், சிலர் ஆடினர், சிலர் சிரித்தனர், சிலர் தாவிக் குதித்தனர், சிலர் அங்குமிங்கும் ஓடினர், சிலர் அதிவேகமாக ஓடினர், சிலர் இனம் காண முடியாத வார்த்தைகளை, உளறுவது போல் பேசினர்.

சிலர் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர், சிலர் ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளினர், சிலர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர், சிலர் கூடி விளையாடினர்.

சிரித்துக் கொண்டிருந்த ஒரு வானரர் பாடிக் கொண்டிருந்த வானரர் ஒருவருக்கு அருகில் சென்றார். பாடிக் கொண்டிருந்த ஒரு வானரர் அழுது கொண்டிருந்த ஒரு வானரருக்கு அருகே சென்றார். 

அழுது கொண்டிருந்த ஒரு வானரரின் அருகே இன்னொரு வானரர் வந்து அவரைப் பிடித்து உலுக்கினார். பிடித்து உலுக்கிக் கொண்டிருந்த வானரருக்கு தண்டனை கொடுப்பது போல் இன்னொரு வானரர் அவரைப் பிடித்துத் தள்ளினார்.

தேனைக் குடித்ததும் அந்த வானரர் கூட்டம் பெரும் போதையில் ஆழ்ந்தது. அந்தக் கூட்டதில் ஒருவர் கூட போதை அடையாமல் இல்லை. ஆயினும் ஒருவர் கூட மது அருந்தியதில் திருப்தி கொள்ளவில்லை. 

அப்போது, அந்தத் தோட்டத்தைப் பராமரிப்பவனான ததிமுகன், பூக்கள் மிகுந்த மரங்கள் அழிக்கப்பட்டதையும், அந்தத் தோட்டமே சிதைக்கப்பட்டதையும் பார்த்து அந்த வானரர்களைக் கடிந்து கொண்டான்.

அந்தத் தோட்டத்தின் பாதுகாவலனான வயது முதிர்ந்த, சக்தி வாய்ந்த அந்த வானரன் போதை அடைந்திருந்த, சிந்தனையையே இழந்திருந்த வானரர்களால் பல விதங்களிலும் அவமதிக்கப்பட்டான். தோட்டத்தை அவர்களிடமிருந்து பதுகாக்க அவன் வேறு வழிகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

அவர்களில் சிலரைத் தன் வாயில் வந்த கடிய சொற்களால் எல்லாம் வைதான். சில பேரைக் காலால் உதைத்தான். சிலருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டான். வேறு சிலரிடம் நல்ல விதமாகப் பேசிப் புரிய வைக்க முயன்றான்.

தோட்டத்தின் பாதுகாவலனான ததிமுகன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தும் விதத்தில் அவர்களைக் கடிந்து பேசி அவர்களை எதிர்த்து நின்றபோது, தாங்கள் செய்வது தவறு என்பதையே உணராத வானரர்கள் மொத்தமாக அவனைச் சூழ்ந்து கொண்டு, போதையில் அவன் மீது விழுந்து அவனை அங்கும் இங்கும் இழுத்துச் சென்றனர்.

போதையில் இருந்த வானரர்கள் அவனை நகங்களால் கீறினர். பல்லால் கடித்தனர். அந்தக் காட்டுத் தோட்டம் முழுவதையும் தங்கள் கைகளாலும், கால்களாலும் தொடர்ந்து நாசம் செய்தனர். 

சர்க்கம் 62






Tuesday, December 22, 2020

63. 60ஆவது சர்க்கம் - அங்கதன் பேச்சு

ஹனுமான் கூறியதைக் கேட்டதும் வாலியின் புதல்வனான அங்கதன் கூறினான்:

"ஹனுமான் தான் சென்று வந்தது பற்றிய எல்லா விவரங்களையும் உங்களிடம் கூறி விட்டார். 

"ஜாம்பவான் முதலான உயர்ந்த வானரர்களிடம் அனுமதி பெற்று ராமர், லக்ஷ்மணர் என்ற அந்த இரண்டு இளவரசர்களையும் சீதையுடன் ஒன்று சேர்க்கும் பணியில் நாம் ஈடுபட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

"இலங்கை நகரத்தை அந்த அரக்கர் சேனைகளுடனும், ராவணனுடனும் சேர்த்து அழிப்பதற்கு நான் ஒருவனே போதும். போரில் துணிவு காட்டுவதில் பெயர் பெற்றவர்களும், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் திறமையானவர்களூமான சக்தி வாய்ந்த வானரர்களான நீங்களும் உடனிருந்தால் இன்னும் என்ன வேண்டும்?

"நான் ராவணனை அவன் சேனைகளுடனும் அவன் ஆதரவாளர்கள், புதல்வர்கள், சகோதரர்கள் ஆகியோருடனும் போரில் அழித்து விடுவேன்.  பிரம்மா, இந்திரன், ருத்ரன், வாயு, வருணன் ஆகியோரின் அஸ்திரங்களையும், இந்திரஜித்தின் கண்ணுக்குப் புலப்படாத அஸ்திரங்களையும் என்னால் முறியடிக்க முடியும்.

"ராவணனுடன் போரிட நீங்கள் என்னை அனுமதித்தால், என்னால் எல்லா அரக்கர்களையும் கொன்று விட முடியும். போரில் எதிரிகளை நோக்கி நான் வீசும் தொடர்ச்சியான பாறை மழை தேவர்களைக் கூட அழித்து விடும். அரக்கர்கள் மீது அது என்ன விளைவை ஏற்படுத்தும் என்று சொல்ல வேண்டியதில்லை.

"கடல் நிரம்பி வழிந்து நீர் கரையில் ஓடலாம், மந்தர மலை அதிரலாம், ஆனால் ஜாம்பவானைப் போரில் எதிரிகளால் அசைக்க முடியாது. முக்கியமான எல்லா அரக்க வீரர்களையும் அழிக்க வாயுவின் வீரப் புதல்வரான ஹனுமான் ஒருவரே போதும். 

"பனசன், உயர்ந்தவனான நீலன் ஆகியோரின் தாக்குதலில் மந்தர மலையே தூள் தூளாக உடைந்து விடும் என்றால் அரக்கர்களைப் பற்றிக் கூறுவதற்கு என்ன இருக்கிறது?

"தேவர்கள், அசுரர்கள், அரக்கர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், பட்சிகள் ஆகியோரில், மைந்தன், த்விவிதன் ஆகியோரைப் போரில் எதிர்கொள்ளக் கூடிய ஒருவரைக் குறிப்பிடுங்கள். 

"அஸ்வினி தேவர்களின் புதல்வர்களான இந்த இரண்டு உயர்ந்த வானரர்களும் பெரும் சக்தி கொண்டவர்கள். அவர்களைப் போரில் எதிர்கொள்ளக் கூடிய எவரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

"இவர்கள் இருவரும் பிரம்மாவிடம் வரம் பெற்ற பெருமை கொண்டவர்கள், சாகாவரம் அளிக்கும் அமிர்தத்தை அருந்தியவர்கள், வானரர்களுக்குள் முன்னிலை வகிப்பவர்கள்.

"முன்னொரு காலத்தில், எல்லா உலகங்களுக்கும் தந்தையான பிரம்மா அஸ்வினி தேவர்களுக்கு நன்மை செய்ய விரும்பி அவர்களுடைய புதல்வர்கள் யாராலும் கொல்லப்பட மாட்டார்கள் என்ற அரிய வரத்தை அவர்களுக்கு அருளினார். 

"இந்த வரத்தின் சக்தியின் காரணமாக, இவர்கள் தேவர்களுடன் போரிட்டு அவர்களின் தளையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு சாகாவரம் அளிக்கும் பானமான அமிர்தத்தை அருந்தினர்.

"மற்ற எல்லா வானரர்களையும் விட்டு விடுவோம். எதிர்க்கப்பட முடியாத இந்த இரண்டு வானரர்களால் மட்டுமே தனியாகவே இலங்கையை அதன் எல்லா யானை, குதிரை, தேர்ப் படைகளுடன் சேர்த்து அழிக்க முடியும் என்பதில் ஐயமில்லை.

"ஓ, வானரர்களே! சீதையைக் கண்டு பிடித்து விட்டதால், அவரை நம்முடன் அழைத்துச் செல்லாமல் நாம் ராமர் முன் போய் நிற்பது முறையல்ல. வீரத்துக்குப் பெயர் பெற்ற நீங்கள் 'சீதையை நாங்கள் கண்டு விட்டோம், ஆனால் அவரை எங்களுடன் அழைத்து வர முடியவில்லை' என்று அவரிடம் தெரிவிப்பது முறையாக இருக்காது என்று நான் கருதுகிறேன்.

"ஓ, உயர்ந்த வானரர்களே! எல்லா உலகங்களிலும் வசிக்கும் எல்லா தேவர்கள் மற்றும் அசுரர்களில் நம்மைப் போல் தாவிச் செல்லக் கூடியவர்கள் யாரும் இல்லை. வீரத்திலும், தாக்கும் சக்தியிலும் கூட நம்முடன் ஒப்பிடக் கூடியவர்கள் எவரும் இல்லை.

"அரக்கர்களின் தலைவர்கள் ஹனுமானால் இவ்வாறு கொல்லப்பட்ட பிறகு, சீதையை நம்முடன் அழைத்துக் கொண்டுதான் நாம் ராமரிடம் செல்ல வேண்டும். இதை விடப் பொருத்தமான செயல் வேறென்ன இருக்க முடியும்?

எனவே, இந்தத் தருணத்தில் நாம் செய்ய வேண்டியது இதைத்தான்."

விவேகத்துக்கும் சிறப்பாக முடிவெடுத்துச் செயல்படுவதற்கும் பெயர் பெற்ற, வானரர்களின் தலைவரான ஜாம்பவான் அங்கதனின் இந்தப் பேச்சைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்  அப்போது ஒரு முக்கியமான ஆலோசனையை அவர் கூறினார்.

அவர் சொன்னார்: "இளவரசரே! நீங்கள் கூறியது நம்மால் செய்ய இயலாலதல்ல. ஆயினும், நம் நோக்கம் வெற்றி பெற வேண்டுமானால், இந்த விஷயத்தில் ராமரின் எண்ணம் என்ன என்று அறிந்து கொண்ட பிறகு நாம் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும்."

சர்க்கம் 61




Thursday, December 17, 2020

62. 59ஆவது சர்க்கம் - செய்ய வேண்டியவை பற்றிய ஆலோசனை

 நடந்தவற்றை விவரித்த பின் வாயுபுத்திரரான ஹனுமான் ஒரு விஷயத்தை வலியுறுத்திக் கூறினார்:

"சீதையின் தூய்மையைப் பார்த்த பின் என் மனத்தில் பெரும் நிம்மதி ஏற்பட்டிருக்கிறது. ராமரின் நோக்கமும், சுக்ரீவரின் கடின முயற்சிகளும் இப்போது நிறைவேறி இருக்கின்றன. 

"தவத்தினால் மேன்மை அடைந்துள்ள ராவணன் இந்த உலகங்களைப் பாதுகாக்கும் வல்லமை பெற்றவன். அவற்றை அவனால் அழிக்கவும் முடியும். இந்தத் தவம்தான் சீதையைக் கடத்துகையில் ராவணன் அவரைத் தொட்டபோது அவனை எரிந்து போகாமல் காப்பாற்றியது. உத்தம பத்தினியான சீதையின் கற்பு, அவருடைய கோபத்தைத் தூண்டும் எவரையும் எந்த ஒரு நெருப்பாலும் செய்ய முடியாத அளவுக்கு எரித்து விடக் கூடியது.

"அந்த உயர்ந்த பெண்மணி, தீய மனம் படைத்த ராவணனின் அரண்மனை நந்தவனத்தில் உள்ள அசோக வனத்தில் ஒரு சிம்ஸுபா மரரத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்ட நிலையில் பெரும் துயத்தில் உள்ளார். 

"சந்திரன் மேகங்களால் சூழப்பட்டிருப்பது போல், அந்த வைதேஹி அரக்கப் பெண்களால் சூழப்பட்டிருக்கிறார். ஆனால் அந்தப் பத்தினி தன் சக்தியால், போதை கொண்டிருக்கும் ராவணனை லட்சியம் செய்யவில்லை.

"இந்திராணி இந்திரனையே நினைத்துக் கொண்டிருப்பதைப் போல், தூய்மையே உருவானவரான வைதேஹி ராமரைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ராமரிடம் மட்டும்தான் அன்பும், நம்பிக்கையும் உள்ளன.

"சீதை (தான் தூக்கிச் செல்லப்பட்டபோது அணிந்திருந்த) அதே ஆடையைத்தான் உடுத்திக் கொண்டிருக்கிறார். அவர் உடலில் தூசி படிந்து, அவர் துயரத்தினால் இளைத்திருக்கிறார். தன் கணவரின் நலம் பற்றிய ஒரே சிந்தனையுடன் மட்டும்தான் அவர் இருக்கிறார்.

"இலங்கையில் இருந்த அந்தத் தோட்டத்தில் கொடூரமான தோற்றம் கொண்ட அரக்கிகள் அவரை அச்சுறுத்த முயல்வதை நான் என் கண்களால் பார்த்தேன்.

"அந்த அழகிய பெண்மணி எப்போதும் தன் கணவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதையே தன் கடமையாகக் கருதுகிறார். 

"அவருடைய கூந்தில் ஒற்றையாக முடியப் பட்டிருக்கிறது. அவர் தரையில் படுத்திருக்கிறார். அவருடைய நிலை குளிர்காலத் தாமரை மலரைப் போல் இருக்கிறது.

"ராவணனின் பிடியிலிருந்து தப்பும் வழி அறியாததால் அவர் ஏமாற்றத்தின் உச்சத்துக்குச் சென்று தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்திருந்தார்.

"ஆயினும் நான் மிகவும் கஷ்டப்பட்டு அவருக்கு ஆறுதல் கூறி, நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தினேன். 

"அதற்குப் பிறகு அவர் என்னிடம் கூறியவற்றை நான் உங்களிடம் முழுமையாகத் தெரிவித்திருக்கிறேன்.

"ராமருக்கும் சுக்ரீவருக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தைப் பற்றி அறிந்து அவர் மிகவும் திருப்தி அடைந்திருக்கிறார். பெரும் உறுதி படைத்தவரும், உயர்ந்த நடத்தை உள்ளவருமான ராமர்தான் ராவணனை அழிக்கும் கருவியாக இருக்க வேண்டும் என்பது அவருடைய உறுதியான எண்ணம்.

"தன் கணவரின் கௌரவம் பற்றி அவர் கொண்டுள்ள இந்த அக்கறைதான் குற்றம் புரிந்த ராவணனைத் தன் கற்பின் சக்தியால் அழிக்காமல் அவரைத் தடுத்து நிறுத்தி இருக்கிறது.

"இயல்பாகவே மெலிந்திருக்கும் அவர் உடல் கணவரிடமிருந்து பிரிந்திருப்பதால் பிரதமையன்று கற்ற கல்வியைப் போல் பலவீனமானதாக ஆக்கி இருக்கிறது. 

"உயர்ந்த பெண்மணியான சீதை இவ்விதமாக சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார். எனவே அவரை இந்த நிலையிலிருந்து மீட்பதற்கான அனைத்தும் செய்யப்பட வேண்டும்."

சர்க்கம் 60

Tuesday, December 15, 2020

61. 58ஆவது சர்க்கம் - இலங்கையில் நடந்தவற்றை விவரிக்கிறார் ஹனுமான்

மஹேந்திர மலையின் உயர்ந்த சிகரத்தில் ஹனுமானும் மற்ற சக்தி வாய்ந்த வானரர்களும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தனர். 

உடல் முழுவதும் மயிர்க் கூச்செரியும் உணர்வு ஏற்படுத்திய மகிழ்ச்சியுடன் எல்லா வானரர்களும் அமர்ந்திருந்தபோது, முழுமையான மனத்திருப்தியுடன் இருந்த ஹனுமானிடம், இலங்கையில் நிகழ்ந்தவை குறித்த கேள்விகளை ஜாம்பவான் கேட்டார்.

"சீதையை நீ எவ்வாறு பார்த்தாய்? அவர் நிலைமை எப்படி இருக்கிறது? கொடிய மனம் கொண்ட பத்துத் தலை ராவணன் அவரிடம் எப்படி நடந்து கொள்கிறான்? இவற்றையெல்லாம் நாங்கள் கேட்டு அறிய விரும்புகிறோம்.

"குரங்குகளின் தலைவனே! இந்த விஷயங்களைப் பற்றிய முழுமையான விவரங்களை எங்களுக்குச் சொல். நிலைமையை அறிந்த பிறகு அடுத்து என்ன செய்வதென்று நாம் முடிவு செய்வோம். 

"நாம் எவற்றைச் சொல்ல வேண்டும், நாம் எப்போது திரும்பிச் செல்ல வேண்டும், நாம் என்ன செய்யக் கூடாது என்பவற்றையெல்லாம் நீயே முடிவு செய். அறிவுக் கூர்மை படைத்த நீதான் இது பற்றி முடிவு செய்ய வேண்டும்."

அதற்குப் பிறகு, மனதில் நிறைந்திருந்த மகிழ்ச்சியால் உடல் முழுவதும் மயிர்க் கூர்ச்செறிந்தவராக இருந்த ஹனுமான் சீதையை மனதில் நினைத்து வணங்கி விட்டு இவ்வாறு பதிலளித்தார்:

கடலின் தென்கரைக்குச் செல்ல விரும்பி, இந்த மஹேந்திர மலையின் உச்சியிலிருந்து நான் வானத்தில் எழும்பியது உங்கள் முன்னிலையில்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

வழியில், தெய்வீக உருவம் கொண்ட மனம் கவரும் ஒரு மலைச் சிகரம் என் பாதையை மறைத்துக்கொண்டு என் முன் வந்தது. என் வழியை மறைத்ததால் அந்த மலையை ஒரு தடை என்று நான் கருதினேன். 

அந்த தெய்வீக மலையை நான் நெருங்கியபோது, அதை உடைத்துக் கொண்டு அதனூடே வழி ஏற்படுத்திக் கொண்டு செல்ல வேண்டுமென்று என் மனதில் தீர்மானித்தேன்.

சூரியன் போல் ஒளிவிட்ட அந்த மலையின் சிகரம் என் வாலால் அடிக்கப்பட்டு சுக்குநூறாக உடைந்தது. 

ஆனால் என்ன ஒரு ஆச்சரியம்! என் பணி என்ன என்பதை அறிந்தது போல் அந்த உயர்ந்த மலை "ஓ, குழந்தாய்!" என்று என்னிடம் இனிய வார்த்தை பேசியது - என் இதயத்தைக் கரைத்த அன்பான சொல் அது.

அந்த மலை கூறியது:
"கடலுக்குள் வசிக்கும் மைனாகம் என்னும் மலை என்று என்னை அறிவாயாக. நான் வாயுதேவரின் நண்பன். உன் தந்தையுடன் எனக்கிருக்கும் தொடர்பால் நான் உன் நலன் விரும்பி.

"குழந்தாய்! அந்நாட்களில் மலைகளுக்கு இறக்கைகள் இருந்தன. அவை தங்கள் விருப்பப்படி பூமியின் மீது பறந்து பலருக்கும் இழப்புக்களை ஏற்படுத்தின. 

"பகன் என்ற அசுரனைக் கொன்ற, தேவர்களின் பெருந்தலைவனான இந்திரன் மலைகளின் இந்தத் தீய பழக்கத்தை அறிந்ததும், தன் வஜ்ராயுத்ததால் அவற்றின் இறக்கைகளை வெட்டி விட்டான்.

"பிரியமானவனே! உன் தந்தை வாயுதேவர் உரிய காலத்தில் செய்த உதவியால் நான் மட்டும் இந்திரனின் கோபத்திலிருந்து தப்பினேன். என்னை ஆழ் கடலை நோக்கித் தள்ளிச் சென்று, கடலில் மூழ்க வைத்ததன் மூலம் உன் தந்தை என்னைக் காப்பாற்றினார்.

"எதிரிகளை அழிப்பவனே! ராமர் விஷயத்தில் நான் உனக்கு உதவியாக இருப்பதுதான் முறை. ஏனெனில், ராமர் சக்தியில் இந்திரனுக்கு ஒப்பானவர், அத்துடன் அறவழியில் நிலைபெற்றவர்களுக்குள் அவர் மிக உயர்ந்தவர்."

மகாத்மாவான அந்த மலையின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், என் திட்டங்களை அவரிடம் கூறி, என் பணியைத் தொடர ஆயத்தமானேன். 

அது ஒரு பெரிய மலையாக இருந்தாலும், அது ஒரு மனித வடிவை எடுத்திருந்தது. உயர்ந்த ஆத்மாவான அந்த மைனாகம் நான்  என் பயணத்தைத் தொடர அனுமதித்தது. பிறகு அது தன் மனித வடிவத்தை விட்டு விட்டுக் கடலின் நடுவே ஒரு மலையாக அமர்ந்தது.

கடந்து செல்ல வேண்டிய தூரத்தைக் கருத்தில் கொண்டு நான் நீண்ட நேரம் வேகமாகப் பயணம் செய்தேன்.

அதற்குப் பிறகு நான் நாகர்களின் தெய்வீகத் தாயான சுரஸையைப் பார்த்தேன். நடுக்கடலில் என் முன் நின்ற அவள் கூறினாள்:

"ஓ, குரங்கே! தேவர்கள் உன்னை எனக்கு உணவாக அளித்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் உன்னைப் போன்ற ஒருவன் எனக்குக் கிடைத்திருக்கிறான். எனவே உன்னை நான் உண்ணப் போகிறேன்."

சுரஸையின் வார்த்தைகளைக் கேட்டதும், என் முகம் வெளிறியது. கைகளைக் கூப்பியபடி அவள் முன் நின்று, நான் இவ்வாறு கூறினேன்:

"தசரதரின் புதல்வரான ராமர் தன் தம்பி லக்ஷ்மணருடனும், மனைவி சீதையுடனும் தண்டகாரண்யத்தில் வசித்து வருகிறார். தீய மனம் கொண்ட ராவணனால் அவர் மனைவி சீதை கடத்திச் செல்லப்பட்டார். 

"ராமரின் கட்டளைப்படி சீதையிடம் நான் ஒரு தூதனாகச் செல்கிறேன். ராமரின் நாட்டில் வசிக்கும் ஒரு பிரஜையாக, ராமர் விஷயத்தில் தேவையான உதவிகளை நீ எனக்குச் செய்வதுதான் பொருத்தமானது.

"இல்லாவிட்டால், மிதிலை நாட்டு இளவரசியைப் பார்த்து விட்டு , அவரைப் பற்றிய செய்தியை ராமரிடம் தெரிவித்து விட்டு, நான் இங்கே திரும்ப வந்து உன் வாய்க்குள் நுழைகிறேன். இந்த விஷயத்தில் என் சத்தியமான வாக்கை நான் உனக்குக் கொடுக்கிறேன்."

என் வேண்டுகோளை நான் கூறியதும், தான் விரும்பும் வடிவத்தை எடுக்கக் கூடிய வல்லமை பெற்ற சுரஸை கூறினாள்:

"நீ என்னைத் தாண்டிச் செல்ல முடியாது. உன்னை உண்பதற்கான வரம் பெற்றவள் நான்."

அவள் இவ்வாறு கூறியதும், கண் சிமிட்டும் நேரத்துக்குள், பத்து யோஜனை உயரமும், அதில் பாதி உயரமும் கொண்ட ஒரு வடிவத்தை நான் எடுத்துக் கொண்டேன்.

உடனே அவள் தன் வாயைத் திறந்து அதை என் உடலின் அகலத்துக்குப் பெரிதாக்கினாள். அவளுடைய மிகப் பெரிய வாயைப் பார்த்தததும், உடனே நான் என் உடம்பின் அளவை மீண்டும் குறைத்துக் கொண்டேன். 

அந்தக் கணமே, என் உடலைக் கட்டை விரல் அளவுக்குக் குறுக்கிக் கொண்டு, உடனே அவள் வாய்க்குள் புகுந்து ஒரு கணத்தில் வெளியே வந்தான்.

அந்த தேவ மங்கை சுரஸை அப்போது தன் உண்மையான வடிவத்தை எடுத்துக் கொண்டு என்னிடம் இவ்வாறு கூறினாள்:

"ஓ, வீரனே! நீ செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீ தொடர்ந்து பயணித்து உன் பணியை நிறைவு செய். உயர்ந்த வானரனே! விதேஹ நாட்டு இளவரசியை உயர்ந்த ராமருடன் இணைப்பதற்கான அனைத்தையும் செய். ஓ, வானரனே! நீ மகிழ்ச்சியாக இருப்பாயாக!"

பிறகு எல்லா உயிர்களும் என்னைப் பாராட்டின. நான் கருடனைப் போல் எளிதாக வானத்தில் பறந்தபடி என் பயணத்தைத் தொடர்ந்தேன். 

நான் பறந்து கொண்டிருந்தபோது, என் நிழல் தடுக்கப்படுவதையும், என் வேகம் குறைந்ததையும் உணர்ந்தேன். ஆனால் இதைச் செய்வது யார் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை.

இவ்வாறு தடைப்படுத்தப்பட்டதும், என் வேகத்தைக் குறைத்தது யார் என்று பத்துத் திசைகளிலும் கண்களைச் சுழற்றிப் பார்த்தேன். ஆனால் என்னால் யாரையும் காண முடியவில்லை.

நான் நினைத்துப் பார்த்தேன்: 'என்னால் யாரையும் காண முடியவில்லை. வானம் தெளிவாக இருந்தும், நான் ஒரு தடையை உணர்கிறேன். இது எதனால் இருக்கலாம்?'

இது போன்ற சிந்தனைகள் என் மனதில் எழுந்தன. நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, என் பார்வை கீழே செல்லவில்லை. எனவே நீரில் மிதந்து கொண்டிருந்த ஒரு பயங்கரமான அரக்கப் பெண்ணை நான் கவனிக்கத் தவறி விட்டேன்.

அந்தப் பெரிய பிறவி அப்போது தன் தீய நோக்கங்கள் பற்றி என்னிடம் தன் தெளிவான, உரத்த குரலில் கூறினாள்:

"பருத்த உருவம் கொண்டவனே! நீ எங்கே செல்கிறாய்? பசியுடன் இருக்கும் எனக்கு நீ சிறந்த உணவாக இருக்கிறாய். கடந்த பல நாட்களாக உணவு கிடைக்காததால் எனக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் பசியை நீதான் போக்க வேண்டும்."

"அவ்வாறே இருக்கட்டும்" என்று சொல்லி நான் என் உடலை அவள் வாயை விடப் பெரிதாக ஆக்கிக் கொண்டேன். 

என்னை உண்ண வேண்டும் என்ற அவளுடைய ஆவலால், அவளுடைய பயங்கரமான வாய் மேலும் மேலும் பெரிதாகியது. ஆனால் என் பலத்தைப் பற்றியோ, என் திட்டத்தைப் பற்றியோ அவள் ஏதும் அறியவில்லை.

கண நேரத்தில் என் உடலைச் சிறிதாக்கிக் கொண்டு, அவள் வாய்க்குள் புகுந்து, அவள் இதயத்தைப் பிய்த்து வெளியில் இழுத்துப் போட்டு விட்டு மீண்டும்  வானில் எழும்பினேன்.

இவ்வாறு அவள் இதயம் வெளியே இழுத்துப் போடப்பட்டதால், மலை போன்ற உருவம் கொண்ட, உப்புக்கடலில் வசித்து வந்த அந்தப் பிறவி, உயிரிழந்து தன் கைகளை விரித்தபடி கடலுக்குள் மூழ்கினாள்.

அப்போது வானத்தில் சென்று கொண்டிருந்த சித்தர்கள் மற்றும் சாரணர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்டேன்:

''சிம்ஹிகை என்னும் கொடிய அரக்கி ஹனுமானால் ஒரு கணத்தில் எளிதாகக் கொல்லப்பட்டாள்."

அவளைக் கொன்ற பிறகு, நான் கடந்து வந்த ஆபத்துகளைப் பற்றித் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்தபடி வானில் நீண்ட தூரம் பறந்த பிறகு, இலங்கை நகரம் இருக்கும் கடலின் மறு கரையில்  இருந்த மலைகள் என் கண்ணுக்குப் புலப்பட்டன. 

சூரியன் மறைந்த பிறகு, யாராலும் காண முடியாத ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு, மிகுந்த சக்தி கொண்ட அரக்கர்களின் நகரத்துக்குள் நான் நுழைந்தேன்.

நான் அங்கே நுழைந்ததும், நெருப்பைப் போல் கனன்ற தலைமுடியுடன் இருந்த ஒரு பெண் பிரளய காலத்து இடியைப் போல் முழங்கிக் கொண்டு என்னை எதிர்ப்பது போல் எதிரே வந்து நின்றாள்.

என்னைக் கொல்வதற்காக அவள் என் எதிரே வந்தபோது, நான் என் இடது கை முஷ்டியால் அவளை ஒரு குத்து விட்டேன். இவ்வாறு முறியடிக்கப்பட்டதும், அவள் பணிந்து போய் என்னிடம் கூறினாள்:

"வீரனே! நான் பெண் உருவில் வந்திருக்கும் இலங்கையின் தேவதை. உன் வல்லமையால் நான் வெல்லப்பட்டேன்.அதனால், நீ எல்லா அரக்கர்களையும் வெல்லும் வல்லமை பெற்றவன்."

அதற்குப் பிறகு, விடியற்காலையில் நான் இலங்கைக்குள் நுழைந்தேன்.

இரவு முழுவதும் நான் ஜனகரின் மகளைத் தேடினேன். ராவணனின் அந்தப்புரத்துக்குள் கூட நுழைந்தேன், ஆனால் அங்கேயும் அவரைக் காணவில்லை. 

ராவணனின் அரண்மனைக்குள் எங்கும் அவரைக் காணாமல் நான் கரை காண முடியாத துயரக் கடலுக்குள் விழுந்தேன்.

இவ்வாறு நான் ஆழ்ந்த சோகத்தில் இருந்தபோது, தங்கத்தால் இழைக்கப்பட்ட அற்புதமான சுவர்களால் சூழப்பட்ட ஒரு தோட்டத்தைப் பார்த்தேன். அந்தச் சுவற்றைத் தாண்டிக் குதித்துப் பல மரங்கள் நிறைந்த ஒரு தோட்டத்துக்குள் நுழைந்தேன்.

அசோக மரங்கள் மிகுந்த அந்தத் தோட்டத்தின் நடுவே நான் ஒரு பெரிய சிம்ஸுபா மரத்தைப் பார்த்தேன். அதன் மீது ஏறி, தங்க நிறம் கொண்ட வாழை மரங்கள் நிறைந்த ஒரு தோட்டத்தைப் பார்த்தேன்.

அத்தனை சிரமங்களுக்குப் பிறகு, சிம்ஸுபா மரத்தில் நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து, சற்றுத் தொலைவில் அந்த அழகிய சீதை போன்ற தோற்றம் கொண்ட ஒரு நபரை என்னால் காண முடிந்தது.

அவர் இளமையான உடல் வண்ணமும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களும் கொண்டிருந்தார். பயங்கரமான தோற்றம் கொண்ட, இறைச்சியையும், ரத்தத்தையும் புசிக்கும் அரக்கப் பெண்களால் அவர் சூழப்பட்டிருந்தார்.

பட்டினி கிடந்ததால் அவர் பொலிவிழந்தவராக இருந்தார். அவர் முகம் வெளுத்திருந்தது. அவர் தலைமுடியில் தூசு படர்ந்திருந்தது. அவர் மிகவும் பலவீனமான தோற்றம் கொண்டிருந்தார். ஒற்றை ஆடைஅணிந்திருந்தார். 

தன் கணவரின் நலம் பற்றியே எப்போதும் நினைத்தபடி, இடை விடாமல் தன்னை அச்சுறுத்திக் கொண்டிருந்த அரக்கிகளுக்கு நடுவே அவர் பரிதாபமாக அமர்ந்திருந்தார்.

தன் கணவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது மட்டுமே அவருடைய ஒரே செயல்பாடு. அவருடைய கூந்தல் ஒற்றையாக முடியப்பட்டிருந்தது.  

குளிர்காலத் தாமரையைப் போல் அவர் தரையில் கிடந்தார். ராவணனிடமிருந்து தப்பித்துச் செல்ல எந்த வழியும் அறியாமல் அவர் விரக்தியில் இருந்தார். தன் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூட அவர் முடிவு செய்து விட்டார். 

அந்த நிலையிலும் தன் நற்புகழுக்கு ஒரு களங்கமும் இல்லாமல் இருந்த அவரைப் பார்த்த நான் அனைத்தையும் கவனமாகப் பார்த்துக் கொண்டு அந்த சிம்ஸுபா மரத்தின் மீது அமர்ந்திருந்தேன்.

அப்போது ராவணனின் அரண்மனையிலிருந்து வந்த கொலுசுகள் மற்றும் ஒட்டியாணங்களின் உரத்த ஒலியை நான் கேட்டேன். 

அதனால் அதிகம் கவலையடைந்த நான் என் உருவத்தைச் சிறிதாக்கிக் கொண்டு, இலைகள் மிகுந்த அதே சிம்ஸுபா மரத்தின் மேல் ஒரு பறவையைப் போல் அமர்ந்திருந்தேன்.

சீதை வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அந்தச் சக்தி வாய்ந்த ராவணனும், அவன் மனைவிகளும் வருவதைப் பார்த்தேன். 

அரக்கர்களின் அரசன் வருவதைக் கண்டதும், சீதை தன் கால்களை ஒடுக்கிக் கொண்டும், கைகளை மார்பின் குறுக்கே வைத்தும் தன் உடலை மறைத்தபடி அமர்ந்து கொண்டார்.

தலையைக் கீழே குனிந்து கொண்டு, இந்தப் புறமும், அந்தப் புறமும் நோக்கிக் கொண்டு மிகவும் பரிதாபமான, அச்சுறுத்தப்பட்ட தோற்றத்துடன் விரக்தியடைந்த நிலையில் இருந்த அந்த அறநெறி வழுவாத பெண்மணியிடம், கீழான நடத்தை உள்ள பத்துத் தலைகள் கொண்ட ராவணன் இவ்வாறு கூறினான்:

"ஓ, சீதா! என்னை மதித்து நடந்து கொள், கர்வம் பிடித்தவளே! உன் கர்வத்தினால்தான் நீ என்னை ஏற்க மறுக்கிறாய். என் கோரிக்கையை ஏற்காமல் இதே நிலையில் நீ தொடர்ந்தால், இன்னும் இரண்டு மாதங்களில் நான் உன் ரத்தத்தைக் குடித்து விடுவேன்."

தீய எண்ணம் கொண்ட அரக்கனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், சீதை மிகுந்த கோபம் கொண்டு அவனுக்குப் பொருத்தமான பதிலை இவ்வாறு கூறினார்:

"தீய எண்ணம் படைத்த அரக்கனே! இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த பெருமை மிக்க அரசர் தசரதரின் மருமகளும், அளவற்ற வல்லமை கொண்ட ராமரின் மனைவியுமான என்னைப் பார்த்து, கூறக் கூடாத இத்தகைய வார்த்தைகளைக் கூறிய உன் நாக்கு இன்னும் ஏன் அறுந்து விழவில்லை?

"வெட்கமற்ற பாவியே! என் கணவர் அருகில் இல்லாதபோது, அவர் பார்வையில் நீ இல்லாதபோது,  என்னைக் கடத்தி வந்த உன் வீரம் மிகப் பெருமை வாய்ந்ததாகத்தான் இருக்க  வேண்டும்!

"நீ எப்போதும் ராமருக்குச் சமமாக மாட்டாய். எப்போதும் உண்மையாக இருப்பவரும், எப்போதும் மரியாதைக்குரியவராக இருப்பவரும், போரில் எப்போதும் தோற்கடிக்கப்பட முடியாதவருமான ராமரின் வேலைக்காரனாக இருக்கக் கூடத் தகுதியற்றவன் நீ."

ஜனகரின் மகளின் இந்தக் காதைக் குத்தும் பேச்சைக் கேட்டு ராவணன் கோபத்தில் நெருப்பாகக் கனன்றான். 

ரத்தம் பாய்ந்த தன் இரண்டு கண்களையும் உருட்டியபடி, அவரைக் கொல்லும் எண்ணத்தில் வலது முஷ்டியை மடக்கி உயர்த்தினான். அப்போது பெண்கள் "ஐயோ! ஐயோ!" என்று அலற ஆரம்பித்தனர்.

ராவணனின் மனைவி, உயர்ந்தவளான மண்டோதரி, பெண்களுக்கு நடுவிலிருந்து முன்னே வந்து அவனுடைய கொலைச் செயலைத் தடுக்கும் விதத்தில் நின்றாள். 

காமத்தின் பிடியில் இருந்த அந்த ராவணனிடம் அவள் இந்த இனிமையான வார்த்தைகளைப் பேசினாள்:

"இந்திரனுக்கு நிகரானவரே! இந்தச் சீதையிடம் நீங்கள் எதைச் சாதிக்கப் போகிறீர்கள்? ஓ, பிரபுவே! இங்கிருக்கும் தேவ, கந்தர்வ மற்றும் யக்ஷப் பெண்களைக் கொண்டே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாமே! இந்தச் சீதையிடம் நீங்கள் இன்னும் என்ன சாதிக்கப் போகிறீர்கள்?"

அந்தச் சக்தி வாய்ந்த ராவணன் பெண்களால் இவ்வாறு சமாதானப்படுத்தப்பட்டு உடனே தன் அரண்மனைக்குத் திரும்ப அழைத்துச் செல்லப்பட்டான். 

பத்துத் தலைகள் கொண்ட ராவணன் கிளம்பிச் சென்றதும், கோர முகமும், இரக்கமற்ற இதயமும் கொண்ட அரக்கப் பெண்கள் எல்லா விதமான கொடிய சொற்களாலும் சீதையை அச்சுறுத்தத் தொடங்கினர்.

விதேஹ நாட்டு இளவரசி அவர்கள் பேச்சையெல்லாம் துரும்பாக மதித்து, அவற்றைப் புறம் தள்ளினார். எனவே அவர்களுடைய கடுஞ்சொற்கள் அவரிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

தங்கள் அச்சுறுத்தும் பேச்சுக்கள் பயனற்றுப் போனதை உணர்ந்து, இறைச்சியை உண்டு வாழும் அந்த அரக்கிகள் ராவணனுக்கு இணங்கப் போவதில்லை என்ற தன் முடிவில் சீதை உறுதியாக இருக்கிறார் என்பதை அவனிடம் தெரிவித்தனர்.

பிறகு அவர்கள் அனைவரும் விரக்தியும், தோல்வி உணர்வும் மிகுந்தவர்களாக, சீதையைச் சூழ்ந்து கொண்டு தூங்க ஆரம்பித்தனர்.

அவர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, தன் பரிதாபமான நிலையிலும் தன் கணவரின் நன்மையைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்த சீதை துயரத்தால் மனம் நொந்து அழுதார்.

அரக்கிகளில் திரிஜடை என்பவள் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, பிற அரக்கிகளிடம் இவ்வாறு பேச ஆரம்பித்தாள்:

"தசரதரின் மருமகளும், ஜனகரின் மகளும், கற்புடைய மனைவியுமான சீதையைத் தின்ன நினைப்பதற்கு பதில் உங்களையே தின்று கொள்வதைப் பற்றிச் சிந்தியுங்கள். அவர் எப்போதுமே அழிக்கப்பட முடியாதவர்.

"உண்மையில் இப்போதுதான் நான் ஒரு கனவு கண்டேன். அது நினைக்கவே மிகவும் பயங்கரமானது. அது என் உடலில் மயிர்க் கூச்சத்தை ஏற்படுத்துகிறது. அது அரக்கர்களின் அழிவு பற்றியும், இந்தப் பெண்ணின் கணவரின் வெற்றியையும் பற்றியது. 

"யாரைப் பற்றி நான் இப்படி ஒரு கனவு கண்டேனோ அந்தத் துயருறும் பெண்ணான இவர் நிச்சயம் அவருடைய துன்பங்களிலிருந்து விடுபட்டு இணையற்ற மகழ்ச்சி நிலவும் நிலைக்குத் திரும்ப எடுத்துச் செல்லப்படப் போகிறார். 

"ஜனகரின் மகளும், மிதிலை நாட்டு இளவரசியுமான சீதை தன்னை வணங்குபவர்களிடம் கனிவு காட்ட எப்போதுமே தயாராக இருக்கிறார்.அதில் எந்த ஐயமும் இல்லை."

இதைக் கேட்டதும் அந்த உயர்ந்த பெண்மணி தன் கணவர் வெற்றி பெறப் போவதை நினைத்து மகிழ்ந்து, "இது உண்மையாகுமானால் நான் உங்கள் அனைவரையும் பாதுகாப்பேன்" என்று அவர்களிடம் கூறினார்.

சீதை இருந்த துயமான நிலையைக் கண்ட நான், அது பற்றி என் மனதில் பொறுமையாக நினைத்துப் பார்த்தேன். என்னால் என் மனத்தைச் சமாதானப்படுத்த முடியவில்லை.

அப்போது ஜனகரின் மகளுடன் உரையாடுவதற்கான ஒரு வழி என் மனதில் தோன்றியது. அதன்படி, இக்ஷ்வாகு குலத்து மன்னர்களின் மேன்மைகள் பற்றி நான் பேச ஆரம்பித்தேன்.

அந்த அரச குலம் பற்றிய என் புகழுரைகளைக் கேட்டதும், பெருகி வந்த கண்ணீர் தன் பார்வையை மறைத்த நிலையில், சீதை என்னைப் பார்த்து  சில கேள்விகள் கேட்டார்:

"ஓ, உயர்ந்த வானரமே! நீ யார்? நீ எதற்காக இங்கே வந்திருக்கிறாய்? உன்னால் எப்படி இங்கே வர முடிந்தது? ராமர் மீது உனக்கு அன்பு ஏற்பட்டது எதனால்? இவற்றையெல்லாம் என்னிடம் கூறுவாயாக."

அவருடைய வார்த்தைகளைக் கேட்டதும், நான் இவ்வாறு பதில் கூறினேன்:

"ஓ, உயர்ந்த பெண்மணியே! உங்கள் கணவருக்கு உதவ இப்போது அவருக்கு சுக்ரீவர் என்ற நண்பர் கிடைத்திருக்கிறார். அவர் மிகவும் சக்தியும், துணிவும் கொண்டவர். அவர் ஒரு பெரிய போர் வீரர். அவர் வானரர்களின் அரசர்.

"உங்களிடம் வந்திருக்கும் நான் அந்த அரசரின் அமைச்சர் ஹனுமான் என்று அறிவீர்களாக. பெரும் செயல்களைப் புரிந்த உங்கள் கணவர் ராமர் என்னை உங்களிடம் ஒரு தூதுவனாக அனுப்பி இருக்கிறார்.

"ஓ, புகழ் மிக்க பெண்மணியே! தசரதரின் புதல்வரான அந்த உயர்ந்த ராமர் என்னை அவரது தூதுவனாக அடையாளம் காண ஒரு முத்திரை மோதிரத்தைக் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

"எனவே, ஓ, உயர்ந்த பெண்மணியே! நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி உங்கள் கட்டளையை நான் எதிர் நோக்கி இருக்கிறேன். உங்களை இங்கிருந்து ராமரும் லக்ஷ்மணரும் இருக்கும் இடத்துக்குத் தூக்கிச் செல்லட்டுமா? உங்கள் கட்டளை என்ன?" 

என் வார்த்தைகளைக் கேட்டதும், அவை பற்றிச் சிறிது நேரம் யோசித்த பின், ஜனகரின் மகளான சீதை கூறினார்:

"ராமரே இங்கு வந்து ராவணனை அழித்து விட்டு என்னை அழைத்துச் செல்லட்டும்."

களங்கம் கூற முடியாத புகழ் கொண்ட அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட பெண்மணியைத் தலை தாழ்த்தி வணங்கி விட்டு, ராமர் அடையாளம் காணக் கூடிய, அவருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதத்தில் நான் ராமருக்கு எடுத்துச் செல்லக் கூடிய ஒரு செய்தியைத் தெரிவிக்குமாறு அவரிடம் வேண்டினேன். 

அப்போது சீதை என்னைப் பார்த்துக் கூறினார்:

"உன் மீது ராமருக்கு அதிக மதிப்பை ஏற்படுத்தும் இந்த ஆபரணத்தை உன்னிடம் கொடுக்கிறேன். இதை உன்னுடன் எடுத்துச் செல்."

இவ்வாறு சொல்லி விட்டு அந்த உயர்ந்த பெண்மணி என்னிடம் அரிதான ஒரு ஆபரணத்தைக் கொடுத்தார். ராமரிடம் எல்லாத் தகவல்களையும் கூறும்படி துயரத்துடன் கூறினார்.

அதன் பிறகு எனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செய்து முடித்து விட்ட உணர்வுடன், நான் திரும்பிப் போகத் தீர்மானித்து. அந்த உயர்ந்த இளவரசியை வலம் வந்து வணங்கினேன்.

பிறகு, எல்லாவற்றையும் பற்றிச் சிந்தித்த பின் அவர் என்னிடம் மீண்டும் ஒரு முறை கூறினார்:

"ஹனுமான்! தயவு செய்து என்னைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் ராமரிடம் கூறுவாயாக. ராமர், லக்ஷ்மணர் என்ற இரண்டு வீர இளவரசர்களும் சுக்ரீவருடன் இணைந்து இங்கே உடனே கிளம்பி வரும் விதத்தில் அனைவரிடமும் பேசி ஏற்பாடு செய்.

"நான் இன்னும் இரண்டு மாதங்கள்தான் உயிருடன் இருப்பேன். எனவே அவர்கள் இங்கே வரும் திட்டம் தாமதிக்கப்பட்டால், என்னைக் காக்க யாரும் இல்லாமல் நான் இறந்து போவேன். காகுஸ்தரின் வழி வந்த ராமரால் அப்புறம் என்னைப் பார்க்க முடியாமலேயே போகலாம்."

அந்தப் பரிதாபமான வார்த்தைகளைக் கேட்டதும், நான் மிகவும் கோபமடைந்து என் அடுத்த செயலைத் தீர்மானித்தேன்.

அப்போது என் உடல் ஒரு மலையளவு வளர்ந்தது. போரை உருவாக்க முடிவு செய்து, இலங்கையின் அந்தத் தோட்டத்தை நான் அழிக்கத் துவங்கினேன்.

கோர முகம் கொண்ட அரக்கிகள் அப்போது விழித்துக் கொண்டு, அந்தத் தோட்டம் அழிக்கப்பட்டதையும், அங்கே வசித்து வந்த விலங்குகளும், பறவைகளும் மிகுந்த பயத்துடன் பறந்து ஓடுவதையும் பார்த்தனர்.

அவர்கள் ஆங்காங்கே குழுக்களாகக் கூடி என்னை நோக்கி வந்தனர். எனக்கு அருகில் வந்ததும், என்னைப் பார்த்து விட்டு ராவணனிடம் தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் கூறினர்: "ஓ, சக்தி வாய்ந்த அரசரே! உங்கள் சக்தியை அறியாமல், ஒரு தீய குரங்கு யாரும் நெருங்க முடியாத இந்தத் தோட்டத்துக்குள் நுழைந்து இதை அழித்து விட்டது.

"ஓ, உயர்ந்த அரசரே! இந்தக் குரங்கு கொல்லப்பட வேண்டும்.எனவே உங்கள் நலனுக்கு எதிராகச் செயல்பட்டுள்ள இந்த அறிவற்ற ஜிவனை உடனே கொல்ல நீங்கள் உத்தரவிட வேண்டும்."

அவர்கள் கூறியதைக் கேட்டதும், அரக்கர்களின் அரசனான ராவணன், கிங்கரர்கள் என்று அழைக்கப்படும், சக்தி வாய்ந்த, அவனுக்குக் கீழ்ப்படிந்த, காவல் காக்கும் அரக்கர்களை என்னை எதிர்க்க அனுப்பினான்.

சூலங்கள், கம்பிகள் பதிக்கப்பட்ட கட்டைகள், இன்னும் பல ஆயுதங்கள் கொண்ட எண்பதாயிரம் பேர் கொண்ட சேனை, அந்த அசோக வனத்தில் என்னால் கண்டெடுக்கப்பட்ட ஒரு இரும்பு உலக்கையால் என்னால் அழிக்கப்பட்டது.

உயிருடன் தப்பிய ஒரு சிலர் ராவணனிடம் விரைந்து ஓடி அவர்கள் பெரிய சேனை அழிக்கப்பட்டதைத் தெரிவித்தனர். 

அப்போது என் மனதில் புதிதாக ஒரு எண்ணம் தோன்றியது. அந்த இடத்திலிருந்து கிளம்பி அருகிலிருந்த ஒரு பெரிய மாளிகைக்கு அருகில் சென்றேன். அங்கிருந்த அரக்கர்களை ஒரு தூணால் அடித்துக் கொன்று விட்டு நான் அந்தக் கட்டிடத்தைத் தரை மட்டமாக்கினேன்.

அதற்குப் பிறகு, பிரஹஸ்தனின் மகனான ஜம்புமாலி, பல பயங்கரமான தோற்றமுடைய அரக்கர்களுடன் என்னைத் தாக்குமாறு பணிக்கப்பட்டான். போரைப் போன்ற அந்த அரக்கனையும் அவனுடன் வந்தவர்களையும் ஒரு இரும்பு உலக்கையை ஆயுதமாகக் கொண்டு  தாக்கி நான் அழித்தேன்.

இதைக் கேள்வியுற்றதும், அரக்கர்களின் அரசனான ராவணன் அதற்குப் பிறகு அவன் அமைச்சர்களின் சக்தி வாய்ந்த புதல்வர்களைப் பல்வேறு பிரிவுகள் கொண்ட ஒரு பெரிய சேனையுடன் அனுப்பினான். அவர்கள் அனைவரையும் அதே இரும்பு உலக்கையால் நான் அழித்தேன்.

நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட தன் அமைச்சர்களின் புதல்வர்கள் இறந்ததைக் கேள்விப்பட்டதும்,  வீரம் மிகுந்த ஐந்து தளபதிகளை ராவணன் எனக்கு எதிராகப் போரிட அனுப்பினான். நான் அவர்களையும், அவர்களுடைய சேனைகளையும் அழித்தேன்.

பிறகு அந்தப் பத்துத் தலை ராவணன் என்னை எதிர்க்க, அவனுடைய மகனான  மிகுந்த சக்தி வாய்ந்த அக்ஷனைப் பல அரக்கர்கள் கொண்ட சேனையுடன் அனுப்பினான்.

மண்டோதரியின் மகனும், சிறந்த வகையில் பயிற்சி பெற்ற வீரனுமான அக்ஷன், என்னுடன் போரிடும் முயற்சியில், கையில் ஒரு கத்தியுடன் வானில் எழும்பினான். 

நான் சட்டென்று அவனை என்  கால்களுக்கிடையே பிடித்துக் கொண்டு அவன் கழுத்தை நெரித்து அவனைக் கொன்ற பின் அவன் உடலைப் பல முறை சுழற்றித் தூக்கி எறிந்தேன்.

அக்ஷகுமாரனின் மரணம் ராவணனைக் கோபத்தின் உச்சிக்கு இட்டுச் சென்றது. சக்தி வாய்ந்தவனும், போர்த்தாகம் கொண்டவனுமான அவனுடைய இன்னொரு மகனான இந்திரஜித்தை என்னைத் தாக்குவதற்காக அனுப்பினான்.

அந்தச் சேனை முழுவதையும் அழித்து, அரக்கர்களில் முதன்மையானவனான அந்த இந்திரஜித்தின் உற்சாகத்துக்கு முடிவு கட்டுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

எனக்கு எதிராகப் போரிட, ஆணவம் கொண்ட பல அரக்க வீரர்களுடன் கூட  அந்தச் சக்தி வாய்ந்த போர் வீரனை மிகுந்த நம்பிக்கையுடன் ராவணன் அனுப்பியிருந்தான்.

அவன் சேனை என்னால் அழிக்கப்பட்டதைக் கண்ட, என் திறமை பற்றி அறியாத இந்திரஜித் கவலை அடைந்த மனநிலையில் என்னை பிரம்மாஸ்திரத்தால் கட்டினான். 

பிறகு அங்கிருந்த மற்ற அரக்கர்கள் என்னைக் கயிறுகளால் கட்டி ராவணன் முன்பு என்னை இழுத்துச் சென்றனர்.

தீய மனம் படைத்த ராவணன் முன்பு நான் நின்றபோது நான் இலங்கைக்கு வந்ததும், அரக்கர்களைக் கொன்றதும் ஏனென்று என்னிடம் கேட்கும்படி தன் அமைச்சரைப் பணித்தான். 

அவை எல்லாம் சீதை தொடர்பாகச் செய்யப்பட்டவை என்று நான் அவனிடம் தெரிவித்தேன்.

நான் சொன்னேன்: "ஓ, பேரரசனே! நான் வாயுவின் குமாரனான ஹனுமான் என்ற வானரன். உன்னைக் காண வேண்டும் எனபதற்காக இங்கு அழைத்து வரப்படுவதற்கான ஒரு வாய்ப்பை நான் எதிர்பார்த்திருந்தேன். என்னை ராமரின் தூதன் என்றும், சுக்ரீவனின் தூதனென்றம் அறிந்து கொள்.

"நான் உனக்கு ராமர் அனுப்பி இருக்கும் செய்தியுடன் வந்திருக்கிறேன். சக்தி வாய்ந்த அரசர் சுக்ரீவர் உன் நலம் பற்றி விசாரிக்கும்படி என்னிடம் கூறினார். தர்மத்தின்படியானதும், மனிதர்களின் உலக வாழ்க்கைக்கு இசைவானதும், நியாயமானதும், பயனுள்ளதுமான பின் வரும் செய்தியை உன்னிடம் கூறும்படி சுக்ரீவர் என்னிடம் கூறியிள்ளார்.

"அவருடைய செய்தி இதுதான்: 'காடுகள் அடர்ந்த ரிஷ்யமுக பர்வதத்தின் அரசனான எனக்கும், போரில் திறமை காட்டுவதற்குப் பெயர் பெற்ற ராமருக்கும் இடையே ஒரு நட்பு உடன்படிக்கை ஏற்பட்டிருக்கிறது. ராமர் என்னிடம் கூறினார்: 'ஓ, அரசனே! ஒரு அரக்கன் என் மனைவியைக் கடத்தி விட்டான். இந்தக் கடினமான சூழலில் உன்னால் முடிந்த அதிகபட்ச உதவியை  எனக்குச் செய்யும்படி கோருகிறேன்.'

'இதற்கு நான் சொன்னேன்: வாலியை அழிக்க எனக்கு உதவ வேண்டுமென்று உங்களைக் கோருகிறேன்.

'பெருமை மிகுந்த இளவரசரான ராமர் லக்ஷ்மணருடன் சேர்ந்து வாலியால் நாடு பறிக்கப்பட்ட சுக்ரீவனான என்னுடன் அக்னி சாட்சியாக ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். 

'வாலியை ஒரு அம்பினால் அழித்த பிறகு, வானரர்களின் தலைவனான என்னை மொத்த வானர இனத்துக்கும் அரசனாக அவர் நியமித்தார். இந்த விஷயத்தில் ராமருக்கு எங்களால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்ய வேண்டியது எங்கள் கடமை.

'அரசர்களுக்கான நடத்தை முறைகளின் விதிக்கப்பட்டுள்ளபடி கீழ்க்கண்ட செய்தி என்னால் உங்களுக்கு அனுப்பப்படுகிறது:

'உடனடியாக சீதையைக் கொண்டு வந்து ரகுவம்சத்தில் வந்தவரான ராமரிடம் விட்டு விடவும். நீங்கள் இவ்வாறு செய்தால் உங்கள் ஆட்சிக்கு அவமானம் ஏற்படுத்தி உங்களை அழிக்கும் எதையும் வீரர்களான வானரர்கள் செய்ய மாட்டார்கள்.

'வானில் உள்ள தேவர்களால் கூட உதவிக்கு அழைக்கப்படும் வானரர்களின் வல்லமையை அறியாதவர்கள் இந்த உலகில் யார் இருக்கிறார்கள்?'

"சுக்ரீவரின் இந்தச் செய்தியை உனக்கு நான் முழுமையாகத் தெரிவித்து விட்டேன்."

அப்போது ராவணன் கோபத்தினால் சிவந்திருந்த தன் கண்களால் என்னை எரித்து விடுவது போல் மிகுந்த கோபத்துடன் என்னைப் பார்த்தான்.

கொடிய செயல்களைச் செய்யக் கூடிய அந்தத் தீய உள்ளம் கொண்ட ராவணன் என் வல்லமையை முழுவதும் உணர்ந்தவனாக என்னைக் கொல்லும்படி உத்தரவிட்டான்.

அவன் அருகில் உயர்ந்த மனம் படைத்த அவன் சகோதரர் விபீஷணர் நின்று கொண்டிருந்தார். அவர் அந்த அரக்க அரசனிடம் எனக்கு ஆதரவாகப் பேசினார்.

அவர் சொன்னார்: "ஓ, அரக்கர் குலத்தின் மாபெரும் அரசனே! தயவு செய்து இந்த தண்டனையை நிறைவேற்றாதீர்கள். உங்கள் கட்டளை அரசர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நீதிக்கு எதிராக உள்ளது என்பதால் உங்கள் முடிவை மாற்றிக் கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

"தூதுவனைக் கொல்வதை அரசநீதி அனுமதிக்கவில்லை. தூதுவனிடமிருந்துதான் அரசியல் தொடர்பான தகவல்கள் அறியப்படுகின்றன.

"எல்லையற்ற வல்லமை கொண்ட அரசரே! எந்த ஒரு குற்றத்துக்காகவும் ஒரு தூதன் கொல்லப்படுவதை அரசர்களுக்கான நடத்தை விதிகள் அனுமதிக்கவில்லை. அதிக பட்சமாக அவனுடைய உடல் உறுப்பு ஏதாவது சேதப்படுத்தப்படலாம்."

விபீஷணரால் இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டதும், அவர் கூறியது சரி என்ற ஏற்றுக்கொண்ட ராவணன் என் வாலுக்கு நெருப்பு வைக்குமாறு அவனுடைய ஆட்களுக்கு உத்தரவிட்டான்.

அவன் கட்டளையை நிறைவேற்றும் வகையில் அரக்கர்கள் என் வாலில் கந்தல் துணிகளையும், சணல் பைகளையும் பல சுற்றுகள் சுற்றிக் கட்டினர்.

அதற்குப் பிறகு, கொடிய குணம் கொண்ட அந்த அரக்கர்கள் பொறுமை இழந்து என்னைக் கொள்ளிக்கட்டைகளாலும்,தங்கள் முஷ்டிகளாலும் அடித்தனர். பிறகு அவர்கள் என் வாலுக்குத் தீ வைத்தனர்.

அந்த அரக்கர்கள் என்னைப் பல கயிறுகளால் கட்டியிருந்தாலும், அந்த நகரத்தைப் பகல் வெளிச்சத்தில் பார்க்க விருப்பம் கொண்டிருந்ததால் நான் சிறிதும் துன்பமடையவில்லை.

அந்த அரக்க வீரர்கள் என்னை அந்த நகரத்தின் நுழைவாயிலுக்கு அழைத்துச் சென்று, நான் கட்டப்பட்டு என் வாலில் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெருக்களில் நின்று கூவினர்.

அப்போது நான் என் பெரிய உடலைச் சிறிதாகச் சுருக்கிக் கொண்டு, கயிறுகளின் தளையிலிருந்த என்னை விடுவித்துக் கொண்டேன். அதற்குப் பிறகு நான் மீண்டும் என் இயல்பான உருவத்துக்கு வந்தேன்.

ஒரு இரும்பு உலக்கையை எடுத்துக் கொண்டு, அதனால் எல்லா அரக்கர்களையும் அடித்துக் கொன்று விட்டு, ஒரே தாவில் அந்த நுழைவாயிலின் உச்சி மீது ஏறிக் கொண்டேன்.

அந்த நகரத்தின் மாளிகைகள், அரங்குகள் ஆகியவற்றின்  உச்சிகளுக்குச் சுலபமாகத் தாவிச் சென்று அவற்றுக்குத் தீ வைத்தேன். அந்த நெருப்பு பிரளய காலத் தீயைப் போல் எரிந்தது. 

அவ்வாறு செய்த பிறகு, நான் இவ்வாறு நினைத்து வருந்தினேன்: "இந்த நகரம் எரித்துச் சாம்பலாக்கப்பட்டு விட்டது. இந்த நெருப்புக்குத் தப்பிய கட்டிடம் எதுவும் இல்லை. எனவே ஜனகரின் மகளும் இந்த நெருப்பில் எரிந்து போயிருப்பார் என்பது அநேகமாக நிச்சயம். ஐயமின்றி, இலங்கையை எரிக்கும் முயற்சியில், நான் சீதையையும் எரித்திருக்க வேண்டும். நான் இப்போது ராமரின் முக்கிய நோக்கத்தைச் சிதைத்து விட்டேனே!"

அப்போது மிக அற்புதமான நிகழ்வுகளுள் ஒன்றைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்த சாரணர்களின் காதுக்கினய சொற்களைக் கேட்டேன். அவர்கள்  கூறினாரகள்: "ஜனகரின் மகள் மட்டும் எரிக்கப்படவில்லை."

சீதை நெருப்பில் எரிந்து போகவில்லை என்று கண்ணுக்குத் தெரியாத இடத்திலிருந்து வந்த அந்த வியக்கத் தக்க செய்தியைக் கேட்டதும் என் கவலை நீங்கியது. 

கீழ்க்கண்ட சிந்தனையால் என் மகிழ்ச்சியும் உறுதியும் இன்னும் வலுவானதாக ஆகின.

'என் வாலில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தபோது, நான் வெப்பம் எதையும் உணரவில்லை. காற்று கூடக் குளிர்ச்சியுடனும், நறுமணத்துடனும் வீசிக் கொண்டிருந்தது.' 

இந்தச் சிந்தனையாலும், சாரணர்களின் வார்த்தைகள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதாலும், என் செயல்களின் நியாயத் தன்மையாலும் எனக்கு மனத் திருப்தி ஏற்பட்டது.

இவ்வாறு நினைத்த போதும், விதேஹ நாட்டு இளவரசியை மீண்டும் பார்க்கவும், கிளம்பிச் செல்ல அவர் அனுமதியைப் பெறவும் நான் அவர் இருந்த இடத்துக்குச் சென்றேன்.

பிறகு மீண்டும் அரிஷ்ட மலை மீது ஏறி, உங்களை  எல்லாம் காண வேண்டும் என்ற ஆவலில் இந்தக் கரைக்குப் பறந்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். 

காற்று, சந்திரன், சூரியன், சித்தர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் பயணம் செய்யும் பாதையான ஆகாயத்தின் வழியே பறந்து வந்து இங்கே உங்கள் முன் வந்திருக்கிறேன்.

ராமரின் வல்லமையாலும், உங்கள் அனைவரின் சக்தி, உற்சாகம் ஆகியவற்றாலும், சுக்ரீவர் நமக்கு இட்ட பணியை நான் செய்து முடித்து விட்டேன்.

நடந்தவை அனைத்தையும் சுருக்கமாக உங்களிடம் கூறி விட்டேன். மேலே என்ன செய்ய வேண்டுமோ அதை இப்போது நாம் செய்வோம்.

சர்க்கம் 59




  
'



.



Thursday, December 3, 2020

60. 57ஆவது சர்க்கம் - வடக்குக் கரையை அடைந்தார் ஹனுமான்

ஆகாயம் என்னும் எல்லையற்ற கடலில் ஒரு பெரிய கப்பலைப் போல் சிறிதும் சோர்வின்றிக் காற்றைப் போல் நீந்திச் சென்றார் ஹனுமான். 

கடலைப் போன்ற அந்த ஆகாயம் அழகிய நிலவை அல்லி மலராகவும், சூரியனை நீரில் மூழ்கிச் செல்லும் வாத்தாகவும், பூசம் மற்றும் ஸ்ரவண நட்சத்திரங்களைத் தன் மேற்பரப்பில் நீந்தும் அன்னப்பறவைகளாகவும், மேகங்களை நீர்க்கொடிகளாகவும், புனர்ப்பூச நட்சத்திரத்தைப் பெரிய மீனாகவும், செவ்வாய் கிரகத்தை முதலையாகவும், வானவில்லை ஒரு பெரிய தீவாகவும், தன் மீது வீசும் புயல் காற்றை அலைகளாகவும், நிலவொளியைத் தன் குளிர்ந்த நீராகவும், நாகர்கள், யக்ஷர்கள் மற்றும் கந்தர்வர்களை முழுவதும் மலர்ந்த சிவப்பு மற்றும் பச்சைத் தாமரைப் பூக்களாகவும்  கொண்டிருந்தது. 

மகாலக்ஷ்மியின் அருளைப் பெற்றிருந்த வாயுபுத்திரரான ஹனுமான் வானத்தில் பயணம் செய்தபோது அவர் வானத்தை விழுங்கப் போவது போலவும். நிலவைத் தேய்த்து அழிக்கப் போவது போலவும் தோன்றியது.

வானத்தின் செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காக அவர் வானத்தையும், அதிலிருந்த சூரியனையும், நட்சத்திரங்களையும் தாக்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.

அவர் ஆகாயத்தில் சென்றபோது, வெள்ளை, சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை கலந்த ஊதா ஆகிய பல நிறங்களில் இருந்த பெரிய மேகங்களை அவர் தன்னுடன் சேர்த்து இழுத்துச் செல்வது போல் இருந்தது.

பெரிய மேகங்களுக்கிடையே ஒரு கணம் மறைந்து மறுகணம் வெளிப்படும்  நிலவைப் போல் அவர் ஒளி விட்டார்.

வெள்ளை உடை அணிந்திருந்த ஹனுமான் பல்வேறு நிறங்களிலிருந்த மேகங்களுக்குப் பின்னால் மறைந்து பிறகு வெளிப்பட்டபோது அவரது உடல் மறைவதும் பிறகு வெளிப்படுவதுமாக இருந்த காட்சி அவரை நிலவு போலவே தோன்றச் செய்தது.

மேகங்களுக்கிடையே நுழைந்து அவற்றைப் பிளந்து மீண்டும் மீண்டும் அவற்றிலிருந்து வெளிப்பட்ட ஹனுமான் வானத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றமளித்தார். 

ஒளிர் விடும் சக்தியுடன் விளங்கிய ஹனுமான் பல அரக்கர்களைக் கொன்று, சேனைகளைச் சிதைத்து, ஒரு நகரத்தையே அழித்து, ராவணன் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி, சீதையைச் சந்தித்துப் பேசி, இவ்விதமாகத் தன் புகழை எல்லா இடத்திலும் பரப்பிய பிறகு, வான்வெளியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டும், இடியைப் போல் முழங்கிக் கொண்டும் வான் வழியே பயணம் செய்தார்.

வழியில் அவர் மைனாக மலையைத் தன் கைகளால் தொட்டு வருடி விட்டு, அதன் பிறகு வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் வெகு வேகமாக முன்னேறிச் சென்றார்.

விரைவிலேயே பெரியதான மஹேந்திர மலை தூரத்தில் ஒரு மேகத்தைப் போல் தெரிந்ததைக் கண்டு, அந்த உயர்ந்த வானரர் உரத்த குரலில் கர்ஜனை செய்தார். இடி போன்ற அவர் முழக்கம் அதன் பெருத்த ஓசையால் பத்துத் திசைகளிலும் பரவியது.

தன் நண்பர்களைப் பார்க்க வேண்டும் என்ற அதிகமான ஆவலால், அவர்கள் இருக்கும் பகுதியை நெருங்கியதும், அவர் உரத்துக் கூச்சலிட்டுத் தன் வாலை ஆட்டினார்.

வானில் பயணம் செய்தபோது ஹனுமான் எழுப்பிய பயங்கரமான கர்ஜனை வானத்தை அதிலிருந்த சூரியனையும் சேர்த்துப் பிளந்து விடும் போல் இருந்தது.

அப்போது ஹனுமானைக் காண்பதற்காகக் கடலின் வடக்குக் கரையில் முன்பிருந்தே காத்துக் கொண்டிருந்த வீரமும், சக்தியும் கொண்ட அவருடைய தண்பர்கள் ஹனுமான் வானில் பறந்ததாலும், அவருடைய கால்கள் வான்வெளீயில் உதைத்து நீந்தியதாலும் ஏற்பட்ட இடி போன்ற ஒலிகளைக் கேட்டனர். 

காட்டுவாசிகளான அந்த வானரர்கள் அனைவரும் ஹனுமான் பறந்ததால் ஏற்பட்ட அந்த இடி போன்ற முழக்கத்தை ஆவலுடன் கவனித்துக் கேட்டனர்.

அந்த அதிர்வொலி ஹனுமானால்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்ததும் அந்த வானரர்கள் அனைவரும் தங்கள் நண்பரை வரவேற்க உற்சாகத்துடன் அங்கே நின்றனர். 

எல்லா வானரர்களுக்கும் பிரியமானவரான ஜாம்பவான் உவகையுடன் எல்லா வானரர்களையும் தன் அருகில் அழைத்து அவர்களிடம் இவ்வாறு கூறினார்:

"ஹனுமான் தன் பணியில் முழுவதுமாக வெற்றி அடைந்து விட்டார். அப்படி இல்லாவிட்டால் அவர் இப்படியெல்லாம் குரல் எழுப்ப மாட்டார்."

ஹனுமானின் கைகளும் கால்களும் காற்றில் நீந்தியதால் ஏற்பட்ட ஓசையையும் அவர் கர்ஜனைகளையும் கேட்டு எல்லா வானரர்களும் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தனர்.

ஹனுமானைப் பார்க்கும் ஆவலில் அவர்கள் மரத்துக்கு மரமும், குன்றுக்குக் குன்றும் தாவிக் குதித்து, பிறகு ஓரிடத்தில் ஒன்றாகக் கூடினர்.

உற்சாகம் மிகுந்த அந்த வானரர்கள் மென்மையான இலைகளையும் பூக்களையும் கொண்ட மரக்கிளைகளை உடைத்து விலை உயர்ந்த ஆடைகளை ஆட்டுவதைப் போல் அவற்றை ஆட்டினர்.

குகைகளுக்குள் சிக்கிக்கொண்ட காற்று அதிர்வான ஒலிகளை ஏற்படுத்துவது போல், வாயு குமாரரான சக்தி வாய்ந்த ஹனுமான் ஆகாயத்தைத் தன் கூச்சல்களால் நிரப்பினார்.

மேகம் போன்ற தோற்றத்துடன் தங்கள் வீரர் தங்களை நெருங்கி வருவதைப் பார்த்த அந்த வானரர்கள் கை கூப்பி அவரை வணங்கியபடி அங்கே நின்றனர்.

சக்தி வாய்ந்தவரும் மலை போன்ற தோற்றம் கொண்டிருந்தவருமான ஹனுமான்  மரங்களால் மூடப்பட்டிருந்த மஹேந்திர மலையின் சிகரங்கள் ஒன்றின் மீது இறங்கினார்.

சிறகு வெட்டப்பட்ட மலை ஒன்று நீருக்குள் விழுவது போல் ஹனுமான் மகிழ்ச்சி பொங்கும் மனத்துடன்  அந்த மலையின் இதமளிக்கும் நீரோடை ஒன்றில் குதித்தார்.

உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க, அந்த உயர்ந்த வானரர்கள் அனைவரும் ஹனுமானுக்கு அருகில் சென்று அவரைச் சூழ்ந்து கொண்டனர். 

அவரைச் சுற்றி நின்றபோது அவர்கள் உற்சாகம் இன்னும் அதிகரித்தது. அவருக்கு அருகில் சென்றபோது ஹனுமான் நல்ல நிலையில் இருப்பதைக் கண்டதும் அந்த வானரர்கள் மகிழ்ச்சியால் பூரித்தனர். 

வானரர்களின் தலைவரான வாயுகுமாரருக்கு அவர்கள் கனிகளையும், கிழங்குகளையும் அளித்து உபசரித்தனர்.

ஜாம்பவான் போன்ற தன்னை விட வயதில் மூத்த மரியாதைக்குரிய வானரர்களுக்கும், இளவரசன் அங்கதனுக்கும் தன் வணக்கங்களைத் தெரிவித்தார் ஹனுமான். 

அவர்கள் இருவராலும் புகழப்பட்டு, தன் வானரத் தோழர்களால் வரவேற்கப்பட்ட, மிகுந்த வீரமும், திறமையும் கொண்ட ஹனுமான் தன் செய்தியைச் சுருக்கமாக ஒரே வரியில் சொன்னார்: "சீதை கண்டுபிடிக்கப்பட்டார், சீதை காணப்பட்டார்!"

மகிழ்ச்சி நிறைந்த மனத்துடன் இருந்த ஹனுமான் வாலியின் மகனான அங்கதனின் கைகளைப் பற்றிக்கொண்டு, மகிழ்ச்சியளிக்கும் அந்த மஹேந்தர மலையில் அமர்ந்து கொண்டு அந்த வானர வீரர்களிடம் இவ்வாறு கூறினார்:

"ஜனகரின் மகளான அந்த இளம் அரசகுமாரி கொடூரமான அரக்கப் பெண்களால் காவல் காக்கப்பட்டு அசோகவனத்தில் அமர்ந்திருந்த்தை நான் பார்த்தேன். அவருடைய மானத்துக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படவில்லை. அவருடைய உடல் தூசி படிந்து, உண்ணா நோன்பால் இளைத்திருக்கிறது. அவர் மனத்தில் ராமரைக் காண வேண்டும் என்ற பெரிய ஆவல் இருக்கிறது."

ஹனுமான் கூறிய "கண்டுபிடிக்கப்பட்டார்" என்ற இனிமையான, பொருள் பொதிந்த வார்த்தையால் எல்லா வானரர்களும் அதிக மகிழ்ச்சி அடைந்தனர்.

சக்தி வாய்ந்த அந்த வானரர்களில் சிலர் மகிழ்ச்சியில் நடனமாடினர், வேறு சிலர் உற்சாகக் கூச்சல்களை எழுப்பினர், இன்னும் சிலர் இடி கொண்ட மேகங்கள் போல் முழங்கினர், வேறு சிலர் குரங்குகளுக்கே உரித்தான சத்தங்களை எழுப்பினர், மற்றும் சிலர் தாங்கள் கேட்டிருந்த சில ஒலிகளை எழுப்பினர். 

அதிக உற்சாகம் கொண்ட சில வானர வீரர்கள் தங்கள் அழகிய வால்களை மேலே தூக்கி அவற்றை வட்டமாகச் சுழற்றினர். இணையற்ற சக்தி கொண்ட அந்த வானரர்கள் மலை உச்சியிலிருந்து இறங்கி வந்து யானையைப் போன்ற பெரிய உருவத்துடன் இருந்த ஹனுமானை மிகுந்த மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டனர்.

ஹனுமான் தன் செய்தியை வானரர்களிடம் சொல்லி முடித்ததும், அங்கதன் அவரிடம் பணிவுடன் கூறினான்:

"ஓ, உயர்ந்த வானரரே! அகண்ட சமுத்திரத்தைக் கடந்து சென்று திரும்பி வந்ததன் மூலம் சக்தியிலும் வீரத்திலும் உங்களுக்குச் சமமானவர் எவரும் இல்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

"எத்தகைய எஜமான விசுவாசம் உங்களுக்கு! எத்தகைய சக்தி! எத்தகைய வீரம்! கடவுளின் அருளால் ராமரின் மனைவியான சீதையை நீங்கள் கண்டு பிடித்து விட்டீர்கள். இது மிகவும் நல்ல விஷயம். காகுஸ்தர் வழி வந்த ராமர் சீதையின் பிரிவானல் ஏற்பட்ட சோகத்திலிருந்து இனி விடுபடுவார்."

அந்த வானரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக, ஒரு அகலமான பாறையில் அங்கதன், ஜாம்பவான், ஹனுமான் ஆகியோரைச் சுற்றி அமர்ந்து கொண்டனர். 

கடலைத் தாண்டியது பற்றியும், இலங்கை நகரத்தைப் பற்றியும், சீதை, ராவணன் இவர்களுடனான தன் சந்திப்புப் பற்றியும் ஹனுமான்  விரிவாகக் கூறப் போவதை எதிர்பார்த்து கைகளைக் கூப்பியபடி அவர்கள் அமைதியாகக் காத்திருந்தனர்.

வானுலகில் தேவர்கள் சூழ இந்திரன் அமர்ந்திருப்பது போல், உயர்ந்தவனான அங்கதன் வானரர்கள் சூழ அங்கே அமர்ந்திருந்தான். 

புகழ் மிகுந்த ஹனுமானும், தோள்களில் வளையங்கள் அணிந்திருந்த  அங்கதனும் அமர்ந்திருந்த அந்தப் பெரிய மலைச் சிகரம் பெரும் மகிழ்ச்சி, பெருமை இவற்றின் மையமாக இருந்தது.

58ஆவது சர்க்கம்

Sunday, November 22, 2020

59. 56ஆவது சர்க்கம் - . இலங்கையிலிருந்து கிளம்பினார் ஹனுமான்

சிம்ஸுபா மரத்தின் அடியில் அசையாமல் அமர்ந்திருந்த ஜனகரின் மகளிடம்  சென்று அவர் திருவடியை வணங்கிய ஹனுமான், "இந்த நிலையிலும் உங்களுக்கு ஏதும் ஆகாமல் இருப்பதைக் கடவுளின் அருளால் நான் காண்கிறேன்" என்றார்.

தன் கணவரான ராமரிடம் தனக்கு இருந்த அன்பையும், மதிப்பையும் வெளிப்படுத்தும் வார்த்தைகளைத் தன் முன் வந்து நின்ற ஹனுமானைப் பார்த்து சீதை கூறினார்.

"எதிர்களை அழிப்பவனே! திட்டமிட்டபடி உன் நோக்கத்தை நிறைவேற்றுவது உனக்கு மட்டுமே இயன்ற செயல். உன் சக்தியையும், மேன்மையையும் பற்றி எவ்வளவு உயர்வாகப் பேசினாலும், அது மிகையாக இருக்காது.

"காகுஸ்தர் வழி வந்த ராமர் தன் அம்புகளால் இலங்கையைப் புரட்டிப் போட்டு இங்கிருந்து என்னை அழைத்துச் சென்றால், அது உன்னுடைய மேன்மைக்குப் பொருத்தமானதாக இருக்கும். எனவே தன் திறமையைப் பயன்படுத்தித் தன் எதிரிகளை வெற்றி கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான யோசனையை நீ அந்த மேன்மை பெற்ற வீரருக்கு வழங்க வேண்டும்."

சீதையின் இந்த அர்த்தமுள்ள, நியாயமான, அன்பு மிகுந்த வார்த்தைகளைக் கேட்டதும், ஹனுமான் அவருக்கு ஒரே வரியில் பதில் கூறினார்:

"காகுஸ்தர் வழியில் வந்த அந்த வீரர் நிச்சயமாகக் குரங்குகளும், கரடிகளும் கொண்ட சேனையுடன் வந்து எதிரிகளை வென்று உங்கள் துன்பங்களுக்கு முடிவு கட்டப் போகிறார்."

விதேஹ நாட்டு இளவரசிக்கு இவ்வாறு ஆறுதல் கூறிய பின், ஹனுமான் அவரிடம் விடை பெற்று திரும்பிச் செல்வதற்குத் தயாரானார்.

எதிரிகளை அழிப்பவரான அந்த வீரமுள்ள வானரர் தன் எஜமானரைச் சந்திக்க உறுதி கொண்டவராக அரிஷ்டம் என்ற பெரிய மலையின் மீது ஏறிக் கொண்டார். 

அந்த மலை பச்சை இலைகள் மிகுந்த பத்ம மரங்களால் நிறைந்திருந்தது. அதன் சிகரங்களால் மறைக்கப்பட்டிருந்த மேகங்கள், தன் உடலின் மேற்புறம் மட்டும் துணீயால் மறைக்கப்பட்டிருந்த ஒருவனைப் போன்ற தோற்றத்தை அந்த மலைக்கு அளித்தன.

உதயசூரியனின் நட்பான, இனிய கதிர்களால் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டது போல் தோற்றமளித்தது அந்த மலை. அதிலிருந்து வெளிப்பட்ட வண்ணங்கள் ஒருவர் தன் கண்ணைத் திறந்து பார்ப்பது போன்ற தோற்றத்தை அளித்தன.

மலையில் நீர் ஓடிய உரத்த ஓசை அந்த மலை வேதங்களை ஓதுவதைப் போல் உணரச் செய்தது. அதில் ஓடிய பல சிற்றோடைகளின் மென்மையான ஒலி இனிய இசையை நினைவூட்டியது.

அந்த மலையில் எழுந்திருந்த உயர்ந்த தேவதாரு மரங்கள் கடுமையாகத் தவம் செய்யும் முனிவர்கள் தங்கள் கைகளை மேலே தூக்கி நிற்பது போன்ற தோற்றத்தை அளித்தன.

அதிலிருந்த நீர்வீழ்ச்சிகளின் ஓசை எல்லாத் திசைகளிலும் அதிர்வுகளைப் பரவச் செய்தது. இலையுதிர் காலத்துக்கே உரித்தான கருத்த நிறம் கொண்ட ஓடும் மேகங்கள் அந்த மலையை ஒரு நடுக்கம் கண்ட நபர் போல் தோன்றச் செய்தன.

மூங்கில்கள், நாணல்கள் இவற்றினூடேகாற்று சென்றதால் ஏற்பட்ட கீச்சொலி அந்த மலை கூவுவது போல் உணரச் செய்தது. அதன் மீது இருந்த மலைப்பாம்புகளின் உரத்த, அச்சமூட்டும் மூச்சொலி அந்த மலை பொறாமையால் பெருமூச்சு விடுவது போல் உணரச் செய்தது.

பனி மிகுந்த அதன் பெரிய குகைகள் புலனை அடக்கி தியானத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை அந்த மலைக்கு அளித்தன. பெரும் மேகங்கள் போன்ற அதன் எண்ணற்ற குன்றுகளின் வரிசை எல்லாத் திசைகளிலும் தாக்குதல் நடத்துவதற்காக முன்னேறிச் செல்லும் சேனையைப் போன்ற தோற்றத்தை அந்த மலைக்கு அளித்தது.

மேகம் சூழ்ந்த அதன் சிகரங்களைப் பார்க்கும் எவருக்கும் அந்த மலை மல்லாந்து படுத்துக் கொட்டாவி விடுவது போல் தோற்றமளிக்கும். 

பரவலாக இருந்த அதன் சிகரங்களும், குகைகளும் அதற்கு அழகூட்டின. மூங்கில்கள், நாணல்கள் தவிர, சாலம் (ஆச்சா மரம்), பனை, அஸ்வகர்மா போன்ற பல்வகை மரங்களும் அந்த மலை மீது இருந்தன, மலர்கள் நிறைந்த கொடிகள் பரவலாகப் படர்ந்து அந்த மலைக்குக் கூடாரமாக அமைந்தன.

பலவகையான மிருகங்கள் அதில் வசித்து வந்தன. அந்த மலையில் இருந்த கனிமச் சுரங்களிலிருந்து சுரந்த பொருட்களின் பல்வகை நிறங்கள் அந்த மலையை அலங்கரித்தன. கணக்கற்ற சிற்றோடைகள் அதில் ஓடிக் கொண்டிருந்தன.

எங்கு பார்த்தாலும் பாறைக் குவியல்கள் இருந்தன.

முனிவர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள்,, நாகர்கள் ஆகியோர் அந்த மலையில் வசித்து வந்தனர். 

அந்த மலையின் மீது கணக்கற்ற கொடிகளும், மரங்களும் விழுந்து கிடந்தன. சிங்கங்கள் வசித்து வந்த குகைகள் பல அதில் இருந்தன. புலிக் கூட்டங்களும் அந்த மலையில் வசித்து வந்தன.

உண்ணக் கூடிய பலவகையான காய்கள், பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றை வழங்கும் மரங்கள் அங்கே வளர்ந்திருந்தன.

அத்தகைய மலையில் ராமரை விரைவிலேயே பார்க்கப் போகும் வாய்ப்பினால் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த ஹனுமான் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஏறினார்.

அந்த அழகிய மலையின் சரிவுப் பகுதியில் ஹனுமான் தன் காலை வைத்தபோது, அங்கிருந்த பாறைகள் சுக்கு நூறாக உடைந்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தின.

அதப் பெரிய மலையின் உச்சியில் நின்ற ஹனுமான்கடலின் தெற்குக் கரையிலிருந்து வடக்குக் கரைக்குப் போகத் தீர்மானித்து அதற்குத் தயாராகத் தன் உடலைப் பெரிதாக்கிக் கொண்டார்.

வாயுதேவரின் வீரப் புதல்வரான அவர் அந்தப் பெரிய மலையின் உச்சியில் நின்றபடி மீன்களும் பாம்புகளும் நிறைந்த அந்த சமுத்திரத்தைக் கண்களால் அளப்பது போல் பார்த்தார்.

வாயுதேவர் வானில் செல்வது போலவே, வாயுதேவரின் குமாரரான அந்த வீரமிகு வானரரும் தென்புறத்திலிருந்து வடபுறத்துக்குத் தன் பயணத்தைத் தொடங்கினார்.

ஹனுமானின் கால்களால் அழுத்தப்பட்ட, பாறைகள் அடர்ந்த அந்த மலை அதன் சிகரங்களுடனும், அதில் வசித்தவர்களுடனும் சேர்ந்து நடுங்கியது. அதிலிருந்த மரங்கள் பெரும் சத்தத்தை எழுப்பியபடி தலை குப்புறச் சாய்ந்து, பூமியின் வயிற்றுக்குள் விழுந்து மறைந்தன.

மலர்கள் நிறைந்த மரங்கள் ஹனுமானின் தொடைகளின் தாக்கத்தின் விசையால், இடியால் தாக்கப்பட்டது போல் உடைந்து தரையில் விழுந்தன. 

தங்கள் குகைகளுக்குள் அடைந்திருந்த சக்தி வாழ்ந்த சிங்கங்களின் பயங்கரமான கர்ஜனைகள் வானைப் பிளப்பது போல் மேலெழும்பின.

தங்கள் உடைகள் தளர்ந்து, ஆபரணங்கள் கலைந்திருந்த நிலையில், வித்யாதரப் பெண்கள், அந்த மலையிலிருந்த தங்கள் இருப்பிடங்களிலிருந்து அச்சத்துடன், அவசரமாக வெளி வந்தனர்.

சக்தி வாய்ந்த பெரிய நாகங்கள் தங்கள் தலைகளையும், கழுத்துக்களையும் தாழ்த்திக் கொண்டும், உடலைச் சுருட்டிக் கொண்டும், நாக்குகளை வெளியே நீட்டிக் கொண்டும், விஷத்தைக் கக்கிக் கொண்டும் வெளியே வந்தன.

பெரும் சத்தங்களாலும், அதிர்வுகளாலும் பாதிக்கப்பட்டு கின்னரர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் அந்த மலையை விட்டு வெளியேறி வானில் நின்றனர்.

ஹனுமான் கால்களை வைத்து அழுத்தியதால் அந்த அழகிய மலை தன் பெரிய மரங்கள், சிகரங்கள் ஆகியவற்றுடன் பாதாள லோகத்தில் சரணடைந்தது. பத்து யோஜனை அகலமும், முப்பது யோஜனை உயரமும் கொண்ட அந்த மலை கீழே அழுந்தித் தரை மட்டத்துக்கு வந்தது.

பெரும் அலைகள் அடித்துக் கொண்டிருந்த உப்புக் கடலைத் தாண்ட விரும்பிய ஹனுமான் எளிதாக வானில் எழும்பினார்.

57 ஆவது சர்க்கம்


Monday, November 16, 2020

58. 55 ஆவது சர்க்கம் - ஹனுமானின் மனக்குழப்பம்

இலங்கை நகரின் பெரும் பகுதி எரிந்து சாம்பலாகி விட்டதையும், அரக்கர்கள் பீதியுடன் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருப்பதையும் பார்த்த ஹனுமான் இவ்வாறு நினைத்தார்:

"இலங்கை எரிக்கப்பட்டு விட்டது? ஆனால், இதனால் விளைந்த பயன் என்ன?" 

இவ்வாறு நினைத்ததும், ஹனுமானின் மனதில் ஒரே நேரத்தில் பெரும் மகிழ்ச்சியும், தன் மீதே வெறுப்பும் ஏற்பட்டன.

"தீப்பிடித்தால், நீர் ஊற்றி அதை அணைப்பது போல், தங்களுக்கு ஏற்படும் கோபத்தைத் தங்கள் அறிவைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்திக் கொள்ளும் வல்லமை படைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள், உயர்ந்தவர்கள்.

"கோபத்தால் உந்தப்பட்டுப் பாவச்செயல் புரியாமல் இருப்பவர்கள் யார் இருக்கிறார்கள்? கோபத்தின் வசப்பட்ட ஒருவன் தான் மதிக்கும் பெரியோர்களைக் கொல்வான்; நல்ல மனிதர்களை மரியாதைக் குறைவான சொற்களால் அவமதிப்பான்.

"கோபத்தின் பிடியில் இருப்பவன் என்ன பேசலாம், என்ன பேசக் கூடாது என்ற வேறுபடுத்திப் பார்க்கும் அறிவையே இழக்கிறான். கோபத்துக்கு வசப்பட்டவன் செய்ய மாட்டான் என்று சொல்லக் கூடிய முறையற்ற செயல் எதுவுமே இல்லை. அந்த நிலையில் அவன் எதையும் செய்யக் கூடியவன்.

"பாம்பு தன் தோலை உரித்துக் கொள்வதைப் போல் பொறுமையின் மூலம் கோபமான நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்பவன்தான் உண்மையான மனிதன். 

"உயர்ந்த பெண்மணியான சீதாப்பிராட்டியைப் பற்றி ஒரு கணம் கூடச் சிந்திக்காமல் இலங்கைக்குத் தீ வைத்த நான் ஒரு அறிவிலியான முட்டாளாகவும், பாவியாகவும், வெட்கங்கெட்டவனாகவும், தன் எஜமானருக்கு துரோகம் செய்தவனாகவும் கருதப்பட வேண்டும்.

"இந்த இலங்கை நகரம் எரிக்கப்பட்டபோது, உயர்ந்த உள்ளம் கொண்ட சீதாப்பிராட்டியும் எரிக்கப்பட்டிருப்பார். இது நிச்சயம். எனவே என் எஜமானர் என்னை அனுப்பிய நோக்கத்தை நான் கெடுத்து விட்டேன்.

"இந்த நோக்கத்துக்காக இதுவரை நான் செய்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி விட்டன. ஏனெனில், இலங்கையை எரித்த நான் சீதையைத் தீயிலிருந்து காப்பற்ற எதையும் செய்யவில்லை.

"இந்தப் பெரிய செயலைச் செய்தபோது, அது ஒரு முக்கியமில்லாத விஷயம் போல் நடந்து கொண்டு விட்டேன். இந்தச் செயலின் அடிப்படை நோக்கத்தையே நான் தோற்கடித்து விட்டேன். இது பற்றி எந்த ஐயமும் இல்லை.

"இலங்கை முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. தீயிலிருந்து எந்த இடமும் தப்பவில்லை. எனவே, ஜனகரின் மகளும் இந்தத் தீக்கு பலியாகி இருப்பார் என்பதற்கான வாய்ப்புதான் அதிகமாக இருக்கிறது.

"என் முட்டாள்தனத்தினால் என் செயலின் நோக்கம் தோற்கடிக்கப்பட்டிருக்குமானால், என் உயிரை இங்கேயே, இப்போதே விடுவதுதான் இதற்கு மாற்றாக இருக்கும். 

"பிரளயத் தீ போல் எரியும் இந்த நெருப்பின் கொடிய ஜுவாலைகளில் விழுந்து என் உயிரை மாய்த்துக் கொள்ளட்டுமா, அல்லது இந்தக் கடலில் வழும் உயிரினங்களுக்கு என் உடலை இரையாக அளித்து விடட்டுமா?

 "என் செய்கையால் என் முயற்சிகளின் நோக்கத்தையே கெடுத்து விட்டு இன்னும் உயிருடன் இருந்து கொண்டிருக்கும் என்னால் வானரர்களின் பெரிய தலைவரான சுக்ரீவர் மற்றும் இரண்டு உன்னதமான இளவரசர்களான ராமர், லக்ஷ்மணர் இவர்களின் முகங்களை எப்படிப் பார்க்க முடியும்?

"குரங்குகள் இயல்பாகவே நிலையற்ற சிந்தனை கொண்டவை, மற்றவர்களால் ஊகிக்க முடியாத வகையில் செயல்படுபவை என்று எல்லா உலகங்களிலும் நன்கு அறியப்பட்டிருப்பதைத்தான் என் பெரிய குறை, கோபம் இவற்றின் காரணமாக நான் நிரூபித்திருக்கிறேன்.

"அறிவீனால் கட்டுப்படுத்தப்பட முடியாத நிலையற்ற இந்த உணர்ச்சி வசப்படும் தன்மை கொடிது! ஏனெனில், பெரும் செயல்களைச் செய்யும் வல்லமை படைத்த நான் கூடக் கோபத்தால் சீதையைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறி விட்டேனே!

"சீதை இறந்து விட்டால், அந்த இரண்டு இளவரசர்களும் கூட இறந்து விடுவார்கள். அவர்கள் இருவரும் இறந்தால், சுக்ரீவரும் தன் உறவினர்கள் அனைவருடனும் மரணத்தைத் தழுவி விடுவார்.

"இதைக் கேள்வியுற்றதும் சகோதரப் பாசம் மிகுந்த, அற வழி நடக்கும் பரதரும் சத்ருக்னரும் உயிர் வாழ விரும்ப மாட்டார்கள். தர்மத்தின் வழி நடக்கும் இக்ஷ்வாகு வம்சம் முடிவுக்கு வந்தால், அந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும் சோக நெருப்பால் வாட்டப்படுவார்கள்.

"எனவே, கோபம் என்னும் தீமை என்னை அடிமைப்படுத்த இடம் கொடுத்து, அதன் மூலம் என் அதிர்ஷ்டத்தையும், தர்மத்தின் மற்றும் நடைமுறை உலக வாழ்க்கையின் அடிப்படையில் அமைந்த என் மேன்மையையும் இழந்து விட்ட நான் சந்தேகமின்றி இந்த உலகுக்குத் தீமை செய்பவன்தான்." 

இவ்வாறு தன் விதியை நொந்து கொண்ட ஹனுமானுக்குத் தன் முந்தைய அனுபவங்கள் சிலவற்றை நினைவு கூற வேண்டுமென்று தோன்றியது.

"ஒருவேளை, மங்களமே உருவான அந்த அழகிய பெண்மணி தன் அசாதாரணமான சக்தியினால் தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருப்பரோ? தீயையே தீயால் எப்படி எரிக்க முடியும்?

"அளவற்ற சக்தி கொண்டவரும், தர்மத்தின் உருவமுமான அந்த உயர்ந்த மனிதரான ராமரின் மனைவியும், தன் கற்பினால் பாதுகாக்கப்பட்டிருப்பவருமான சீதையைத் தீயினால் அணுகக் கூட முடியாது.

"ராமரின் உயர்வினாலும், சீதையின் கற்பின் சக்தியினாலும்தான்  எல்லாவற்றையும் எரிக்கும் தன்மை கொண்ட தீயினால் என்னை அவ்வாறு எரிக்க முடியவில்லை.

"ராமரிடம் பக்தி கொண்ட மனைவியாகவும், அவருடைய மூன்று தம்பிகளாலும் வணங்கப்படுபவராகவும் உள்ள ஒருவருக்கு எவ்வாறு அழிவு ஏற்படும்?

"எரிக்கும் தன் நோக்கத்தில் எப்போதும் தோல்வி அடையாத இந்த நெருப்பு என் வாலைக் கூட பாதிக்கவில்லை. அப்படி இருக்கையில், கற்புடைப் பெண்களில் சிறந்தவரான சீதையை அது எப்படி எரிக்க முடியும்?"

இத்தகைய சிந்தனைகளைத் தவிர, சமுத்திரத்தின் மத்தியில் மைநாக மலை எழுந்ததைப் பற்றியும் மிகுந்த வியப்புடன் நினைத்துப் பார்த்தார் அவர்:

"அந்த உயர்ந்த பெண்மணி, தன் கற்பின் சக்தியாலும், உண்மையுடன் இருப்பதாலும், தன் கணவனிடம் கொண்ட முழுமையான பக்தியாலும் ஒருவேளை நெருப்பையே எரிக்கக் கூடும். அத்தகைய நபர் எப்படி நெருப்பால் பாதிக்கப்பட முடியும்?"

இவ்வாறு ஹனுமான் தன் மனதுக்குள் சீதையின் தர்ம வலிமையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, உயர்ந்தவர்களான சாரணர்கள் இது பற்றிப் பேசிக் கொண்டிருந்தது அவர் காதில் கேட்டது. அவர்கள் கூறினர்:

"நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இந்த பயங்கரமான தீயை அரக்கர்களின் வீடுகளில் பரவச் செய்யும் இயலாத செயலை ஹனுமான் செய்து காட்டி இருக்கிறார். 

"இலங்கை நகரம் முழுவதும், அதன் மாளிகைகள், சுவர்கள், நுழைவாயில் கோபுரங்கள் ஆகியவற்றுடன் எரிக்கப் பட்டிருக்கிறது. ஒரு மலையின் குகைகளுக்கிள்ளிருந்து வரும் முனகல் சத்தங்கள் போல், இங்குமங்கும் பறந்தோடிக் கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட அரக்கர்களின் துயர முனகல்கள் எழுகின்றன.

"ஆயினும், இலங்கை முழுவதும் எரிந்தாலும், ஜனகரின் குமாரி மட்டும் பாதிக்கப்படாமல் இருக்கிறார். இது மிகவும் வியப்புக்குரிய ஒன்று."

ராமர், சீதை இருவரின் மேன்மை பற்றி அவர் மனதில் தோன்றிய எண்ணங்களாலும், உயர்ந்த செயல்கள் தார்மீக ரீதியில் சரியானவை என்ற அவரது நம்பிக்கையாலும், சாரணர்கள் மேற்கூறியவாறு பேசியதைக் கேட்டதாலும் தன் மனதில் ஏற்பட்ட உறுதியால் ஹனுமான் பெரிதும் அமைதியாக உணர்ந்தார்

சீதாப்பிராட்டிக்கு ஆபத்து இல்லை என்ற நம்பிக்கை ஹனுமானுக்கு இப்போது ஏற்பட்டிருந்தாலும், சீதையை மீண்டும் ஒருமுறை நேரில் பார்த்து விட்டுத் தன் எண்ணம் சரிதான் என்று உறுதி செய்து கொள்ள விரும்பினார் அவர். 

சர்க்கம் 56